வார்த்தையை விட்ட அண்ணாமலை! மொத்தமாக முறிந்தது.. பாஜகவிற்கு பலத்த அடி! அதிமுக முடிவிற்கு என்ன காரணம்?
சென்னை: அதிமுக - பாஜக கூட்டணி முறிந்ததாக அதிமுக அறிவித்து உள்ளது. அண்ணாமலையின் தொடர் பேச்சுக்கள்தான் இந்த கூட்டணி முறிவிற்கு காரணம் ஆகி உள்ளது.
அதிமுக பாஜக இடையே மோதல் தற்போது உச்சம் அடைந்து உள்ளது. தற்போது முத்துராமலிங்கத் தேவருக்கு பயந்து ஓடியவர் அண்ணா என்று பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதற்கு அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வைத்த விமர்சனத்தில், எப்பேர்பட்ட அரசியல் கட்சிக்கு தலைவராக இருந்தாலும் சரி, மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது

அண்ணாவை பற்றி அவதூறாக பேசினால் பேசுபவர்களின் நாக்கு அழுகிவிடும் என்று செல்லூர் ராஜு காட்டமாக பேசி உள்ளார்.
இன்னொரு பக்கம் மாஜி அமைச்சர் சிவி சண்முகம் வைத்த விமர்சனத்தில், அண்ணாமலை செல்வது பாதயாத்திரை இல்லை வசூல் யாத்திரை. மோடி மீண்டும் பிரதமராவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை. அதனால்தான் அண்ணாமலை இப்படி பேசிக்கொண்டு இருக்கிறார், என்று சிவி சண்முகம் தெரிவித்துள்ளார்.
பதிலடி: இதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடியில், சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு மேல் ஒரு மாதிரி பேசுவார். 6 மணிக்கு முன்பு ஒரு மாதிரி பேசுவார். கடும் சொற்களை எனக்கும் பயன்படுத்தத் தெரியும். 10 ஆண்டுகளாக துப்பாக்கி பிடித்த கை இது. நேர்மையாக இருப்பவன் நான். சிவி சண்முகம் எனக்கு பாடம் எடுக்கக் கூடாது என்று கடுமையாக பேசினார்.
இந்த பேச்சுதான் கூட்டணி முறிவிற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இதையடுத்தே அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. இது அதிமுகவின் முடிவு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
முன்பே மோதல்: அதிமுக பாஜக இடையே தற்போது தீவிர மோதல் நிலவி வருகிறது. ஏற்கனவே ஒரு முறை ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்ற பாணியில் அண்ணாமலை பேசியது கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
அப்போதே அதிமுக - பாஜகவினர் இடையே அது கடுமையான மோதலுக்கு வழி வகுத்தது. ஊழல் செய்தவர்களை தலைவர்களாக வைத்து இருந்த கட்சி என்று அதிமுகவை விமர்சனம் செய்து இருந்தார். அதோடு, கருணாநிதி, ஜெயலலிதா போல நான் முடிவு எடுப்பேன். அவர்களை போல நானும் தலைவன்தான். அவர்கள் எடுத்த முடிவை எதிர்த்து பலர் கட்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார்கள். அவர்களை போல நானும் தலைவன்தான். தேசிய கட்சி என்றாலே பெரிய கட்சி இல்லை, தமிழ்நாட்டில் இல்லை என்ற நிலை இருந்தது. நாம் திராவிட கட்சிகளை சார்ந்து இருந்த நிலை இருந்தது.
அது தற்போது மாறிவிட்டது. அண்ணாமலை இங்கே தோசை சுடவோ, இட்லி சுடவோ வரவில்லை. நான் எல்லோரையும் தாஜா பண்ணிக்கொண்டு இருக்க மாட்டேன். நான் தலைவன்., என்று குறிப்பிட்டார். இவர் தன்னை ஜெயலலிதாவோடு ஒப்பிட்டதை அதிமுகவின் ஜெயக்குமார் போன்றவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர். இந்த நிலையில்தான் தற்போது அண்ணாமலை பேசியது அவருக்கே எதிராக திரும்பி உள்ளது.
தமிழ்நாட்டில் அதிமுகவை நம்பி பாஜக இருக்கும் நிலையில் அதிமுகவின் இந்த முடிவு பாஜகவிற்கு பேரிடியாக மாறி உள்ளது.












Click it and Unblock the Notifications