"எல்லாமே அவங்க பிளான் தான்.. காரணமே வேற!" இந்து மதம் பற்றிய ஆ.ராசா பேச்சு! சசிகலா சொன்ன காரணம்
சென்னை: ஆ. ராசா இந்து மதம் குறித்துப் பேசிய விவகாரத்திற்கு சில அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், சசிகலா இந்த விவகாரத்தில் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம்பியுமான ஆ ராசா சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பேச்சு இணையத்தில் சர்ச்சையானது.
இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் ஆ ராசா பேசிவிட்டதாகவும் அவரது பேச்சால் இந்துக்கள் மனம் புண்பட்டுவிட்டதாகவும் பல அரசியல் கட்சிகளும் அதிருப்தி தெரிவித்து இருந்தனர்.

ஆ.ராசா
அந்த நிகழ்ச்சியில் பேசிய ஆ. ராசா, "இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன் தான்.. இந்து, கிறிஸ்துவனாக, இஸ்லாமியனாக நீ இல்லை என்றால் நீ இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறுகிறது. இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன்" என்று அவர் தெரிவித்து இருந்தார். இந்த விவகாரத்தில் ஆ. ராசா இந்து மதத்தைப் புண்படுத்தும் விதமாகப் பேசிவிட்டதாக எதிர்ப்புகள் கிளம்பின.

போராட்டங்கள்
அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தினர். மேலும், அவர் மீது பல்வேறு பகுதிகளிலும் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டன. இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக சசிகலா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்து உள்ளார். சசிகலா தனது அரசியல் செல்வாக்கை அதிகரிக்க மாநிலம் முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார்.

சசிகலா
அதன்படி இப்போது அவர் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதிக்கு உட்பட்ட கன்னிகைப்பேர், பெரியபாளையம், ஊத்துக்கோட்டை பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். கன்னிகைப்பேர் பகுதியில் சசிகலாவுக்குத் தொண்டர்கள் மிகவும் உற்சாகமான வரவேற்பை அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, "ரேசன் கடைகளில் முறையாக அரிசி கொடுக்க வேண்டும்.. தேவையற்ற பொருட்களை வாங்க ஏழைகளை நிர்ப்பந்திக்கக் கூடாது.

போதைப்பொருள்
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்தே தீர வேண்டும். கடல்வழியாகப் போதைப்பொருள் வருவதால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என திமுக அமைச்சர் கூறுகிறார். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நுழையும் முன் அதைத் தடுக்க வேண்டுமே தவிர மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டு இருக்கக் கூடாது. போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

அதிமுக விவகாரம்
ஓபிஎஸும், ஈபிஎஸும் தனித்தனியாகப் பிரதமரைச் சந்தித்து உள்ளனர். இது அவர்களின் உட்கட்சி பிரச்சினை.. பிரச்சினைகள் எல்லாம் முடிந்த பின்னர் அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்திற்கு நிச்சயமாகப் போவேன்" என்று அவர் தெரிவித்தார். மேலும், ஓபிஎஸ், ஈபிஎஸ் என இருவரில் யார் பக்கம் என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், "கழக தொண்டர்கள் இதில் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் யாரைச் சொல்கிறார்களோ அதுவே இறுதியானது.. மக்களே எஜமானர்கள்.. அவர்கள் சொல்வது தான் நடக்கும்..

பிளானே வேற
ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள் தவறு செய்வதாகச் செய்திகள் வெளியாகி வருகிறது. தவறு செய்பவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் கூட கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.. மின் கட்டண உயர்வுக்கு மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டு உள்ளது. அதைத் திசை திருப்பும் விதமாகவே தான் ஆ.ராசா இந்து மதம் குறித்துப் பேசியது" என்றும் அவர் விமர்சித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications