தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு? உண்மையில் என்ன காரணம்.. அதிரடியில் இறங்கிய அமைச்சர் நாசர்
தமிழ்நாட்டில் ஆவின் பாலுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. இதனிடையே இது குறித்து அமைச்சர் நாசர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு சார்பில் ஆவின் மூலம் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் ஆவின் பால் விலை குறைவாகவே உள்ளது. இதனால் மக்கள் ஆவின் பாலை வாங்கவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
இருப்பினும், கடந்த சில காலமாகவே ஆவின் பால் விநியோகத்தில் தட்டுப்பாடு இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. அதிகாலையில் பால் விநியோகத்திலும் கூட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆவின்
ஆவின் நிறுவனத்திற்கு வழங்கப்படும் பாலுக்கு லிட்டருக்கு 7 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் எனப் பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாகப் போராட்டங்களும் நடத்தப்படும் நிலையில், ஆவின் பாலுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், அதிக விலை கொடுத்து பொதுமக்கள் தனியார் பால் வாங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. மேலும், இந்த விவகாரத்தில் முதல்வரே நேரடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

அமைச்சர் நாசர்
கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அண்டை மாநிலங்களைச் சேர்ந்த சில தனியார் பால் நிறுவனங்கள், தமிழக பால் உற்பத்தியாளர்களிடம் அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்வதே இந்த பிரச்சினைக்குக் காரணம் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "தமிழ்நாடு முழுக்க 9,843 தொடக்கக் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்கள் உள்ளன. அதில் எல்லையோர மாவட்டங்களில் சுமார் 2,000 பால் உற்பத்தி சங்கங்கள் உள்ளன.

என்ன காரணம்
இந்த பால் உற்பத்தி சங்கங்கள் தங்கள் பாலை அதிக விலைக்குத் தனியார் நிறுவனங்களுக்கு விற்கிறது. இதன் காரணமாகவே ஆவின் பால் கொள்முதல் சற்று குறைந்துள்ளது. பால் விநியோகம் திடீரென குறைந்தது குறித்து விளக்கம் கேட்டு 2,000 கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கங்களுக்குப் பால்வள மேம்பாட்டுத்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். இந்தச் சங்கங்களில் ஏதேனும் சட்டத்தை மீறியதாகக் கண்டறியப்பட்டால், அவற்றைக் கலைக்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்றும் அவர் தெரிவித்தார்.

தோல் நோய்
கடந்த ஆண்டு ஜனவரி முதல் கர்நாடகாவில் 3 லட்சத்துக்கும் அதிகமான கால்நடைகள் தோல் நோயால் ( lumpy skin) பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் 29,000 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. அதேபோல ராஜஸ்தானில் 76,000 கால்நடைகளும், மகாராஷ்டிராவில் 34,000 கால்நடைகளும் உயிரிழந்துள்ளன. இந்த தோல் நோய் குறித்து அமைச்சர் கூறுகையில், "நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இதன் மூலம் கால்நடைகள் இந்த தோல் நோயிலிருந்து பாதுகாக்கின்றன. ஆந்திரா நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து, விவசாயிகளிடம் பாலை பெறுவதே தட்டுப்பாட்டிற்குக் காரணம்" என்றார்.

நடவடிக்கை
கடந்த சில மாதங்களில் ஆவின் பால் கொள்முதல் நாள் ஒன்றுக்கு 37 லட்சத்தில் இருந்து 27 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. இதனால் சென்னை நகரிலும் பால் விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையே மதுரை, தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பால் பண்ணையாளர்கள், கொள்முதல் விலையை உயர்த்தாவிட்டால், ஆவின் பால் சப்ளை நிறுத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளனர். இதற்கிடையே இந்த விவகாரத்தில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications