2 நாளாக கழிவறையில் கிடந்த நடிகர் பிரதீப் விஜயனின் உடல்! தலையில் காயங்கள் ஏன்? இறந்தது எப்படி?
சென்னை: தெகிடி, மேயாத மான் உள்ளிட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகர் பிரதீப் விஜயன் கழிவறையில் தலையில் காயங்களுடன் இறந்து கிடந்தது ஏன் என்பது குறித்து முதல் கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெகிடி, வட்டம், டெடி, லிஃப்ட், மேயாத மான் உள்ளிட்டப் படங்களில் நடித்தவர் நடிகர் பிரதீப் கே விஜயன். வில்லன், நகைச்சுவை நடிகர் என தனது நடிப்பால் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இந்நிலையில், அவரது திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பாலவாக்கத்தில் ஒரு வீட்டில் பிரதீப் விஜயன் வசித்து வந்தார். அவருக்கு திருமணமாகவில்லை. எனவே அவர் வீட்டில் தனியாகவே இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவருடைய செல்போனுக்கு அவருடைய நண்பர்கள் இரு நாட்களாக போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை என தெரிகிறது.
இதனால் சந்தேகமடைந்த நண்பர் ஒருவர், பிரதீப் விஜயனின் வீட்டுக்கு போய் பார்த்த போது அவரது வீட்டுக் கதவு உள்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அந்த நண்பர், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு போலீஸாரும் தீயணைப்பு துறையினரும் வந்தனர். கதவை உடைத்து உள்ளே போய் பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
கழிவறையில் இறந்த நிலையில் கிடந்தார் பிரதீப் விஜயன். அவரது தலையிலும் அடிபட்டு கிடந்தது. ஏற்கெனவே அவருக்கு தலைச்சுற்றல், மயக்கம் என இருந்து வந்த நிலையில் அவர் கழிவறை சென்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவர் கீழே விழுந்து இறந்திருக்கலாம் என தெரிகிறது. இது குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications