கிளாம்பாக்கம் டூ தாம்பரம்.. பெருங்களத்தூர் சந்திக்கும் பெருங்கஷ்டம்.. உண்மையில் என்ன பிரச்சனை?
சென்னை: சென்னையில் நுழைவு வாயிலான தாம்பரம் இரும்புலியூர் ரயில்வே பாலம் அருகில் உள்ள வளைவு இருவழிப்பாதையாக உள்ளது. அங்கு தான் கிளாம்பாக்கத்தில் இருந்து பெங்களூர் செல்லவும், மதுரவாயல், கோயம்பேடு, போரூர், முடிச்சூர் செல்ல பிரிந்து செல்கிறார்கள். பெருங்களத்தூர் வரை ஆறு வழியாக இருக்கும் இந்த பாதை, பாலத்தை கடந்த உடன் இரும்புலியூர் பாலம் அருகே இருவழிப்பாதையாகிறது. இதுதான் நெரிசலுக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. இது பற்றி சற்று விரிவாக பார்ப்போம்.
சென்னை பெருங்களத்தூரை தாண்டி செல்வது என்பது பலருக்கும் ஒரு காலத்தில் சிக்கலான ஒன்றாக இருந்தது. ஏனெனில் எல்லா வாகனங்களும் சந்திக்கும் இடம் என்பதால், வாகனங்களில் நெரிசல் அதிகமாக ஏற்படும். பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, காலாண்டு, அரையாண்டு, கோடை விடுமுறை, குடியரசு தினம், சுதந்திர தினம், சனி ஞாயிறுகள், சுபமுகூர்த்த தினங்களில் கூட்டம் மிக அதிகமாக இருக்கும்.

பெருங்களத்தூர் சிக்னல்: இந்த காலக்கட்டத்தில் வாகனங்களில் செல்வது சவாலானதாக இருக்கும். சென்னையில் இருந்து கடும் நெரிசலை கடந்து செல்லும் மக்கள் பெருங்களத்தூரை தாண்டி செங்கல்பட்டு பரனூரை தொடுவதற்கு ஒரு யுகத்தையே கடப்பது போன்று இருக்கும். ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கும் முன்பு வரை தான் அப்படி இருந்தது. அதேநேரம் பெருங்களத்தூரில் நெரிசலை குறைக்க சாலையின் இருபக்கமும் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதனால் அங்கிருந்த இரண்டு சிக்னலில் ஒரு சிக்னல் நிரந்தரமாக மூடப்பட்டது.
பெருங்களத்தூர் கோவில்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது மற்றும் பெருங்களத்தூரில் அமைக்கப்பட்ட மேம்பாலங்கள் காரணமாக சென்னையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்கள் ஓரளவு நெரிசலில் தப்பின. ஆனாலும் நெரிசல் முழுமையாக குறையவில்லை.. காரணம் பெருங்களத்தூரில் உள்ள சிக்னல் மற்றும் இருவழிப்பாதையாக உள்ள இரும்புலியூர் ரயில்வே பாலம் தான். அதேபோல் சாலையில் உள்ள கோயில் முன்பு ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்படுவதும் நெரிசலுக்கு காரணமாக உள்ளது.
பெருங்களத்தூர் பைப்பாஸ்: அதேநேரம் சென்னைக்கு வரும் வாகனங்கள் ஆறு லேனில் வாகனங்கள் வரும் நிலையில், இரும்புலியூர் பாலம் அருகே இருவழிப்பாதையாக மாறுகிறது. இதுவே நெரிசலுக்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த பாதையில் உள்ள இரும்புலியூர் ரயில்வே பாலத்தின அகலத்தை அதிகரிப்பது மற்றும் தாம்பரத்திற்கு நுழையும் பகுதியில் உள்ள பெருங்களத்தூர் சிக்னலை மூடுவது ஓரளவு நெரிசலை குறைக்கும் என்கிறார்கள். அதேபோல் பெருங்களத்தூரில் உள்ள தென்அகரம் வழியாக சேலையூரை இணைக்கும் வகையில் சாலை அமைய உள்ளது. இந்த சாலையில் வேளச்சேரி, மேடவாக்கம், ஓஎம்ஆர் செல்லும் வாகனங்கள் செல்லும் போது நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது. அதுவரையில் சிக்கல் தொடரும் என்கிறார்கள்...
கூடுவாஞ்சேரி மேம்பாலம்: அதேபோல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடங்கி ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், சிங்கப்பெருமாள் கோவில் வரை வாகன நெருக்கம் அதிகமாக உள்ளதால் மேம்பாலம் அமைத்தால் தான் அங்கும் நெரிசலை குறைக்க முடியும் என்கிற நிலை உள்ளது. குறிப்பாக கிளாம்பாக்கம் முதல் கூடுவாஞ்சேரி முடிந்து பொத்தேரி வரை கடுமையான நெரிசல் ஏற்படுவதால் அங்கு மேம்பாலத்தை போர்க்கால அடிப்படையில் அமைத்தால் தான் நெரிசலை குறைக்க முடியும் என்கிறார்கள் அந்த பகுதி மக்கள்.












Click it and Unblock the Notifications