திமுக அரசை ஆட்டம் காண வைத்த அமைச்சர் குடும்பம்- தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரத்தின் பின்னணி என்ன?
சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை ஆட்டம் காட்டி அதிரவைத்திருக்கிறது தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரம். அரசு பணத்தை பகிரங்கமாக சூறையாடும் வகையில் டெண்டர்களில் அமைச்சரின் குடும்பத்தினர் தலையிட்டு திருத்தம் செய்திருப்பது முதல்வர் மு.க.ஸ்டாலின் தரப்பை கடும் அதிருப்தி அடைய வைத்திருக்கிறது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
பொதுவாக பொருட்களை கொள்முதல் செய்வதற்கும் பணிகளை செய்து முடிக்கவும் டெண்டர்களை அரசு தரப்பு வழங்கும். குறைவான விலையில் பொருட்கள் வழங்க, பணிகளை முடிக்க முன்வருவோருக்கு டெண்டர்கள் வழங்குவது இயல்பு. ஆனால் தங்களுக்கு வேண்டிய நிறுவனங்கள், தங்களது பினாமி நிறுவனங்களுக்கு டெண்டர்களை கொடுப்பதில் சில அமைச்சர்கள் முனைப்பு காட்டி ஆதாயம் அடைவது வழக்கம். அப்படி செய்யும் பல அமைச்சர்கள் வசமாக வழக்குகளில் சிக்குவதும் உண்டு.
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு நிர்வாகம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 1 கிலோ அளவுக்கு 2 வகையான ஸ்வீட்கள், காரம் ஆகியவை வழங்கப்படும். அதிமுக ஆட்சியில் 1 கிலோ ஸ்வீட் ரூ500 என்ற வகையில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு டெண்டர் கொடுக்க உத்தரவிட்டார் அப்போதைய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். ஆனால் அந்த இனிப்புகளும் காரமும் தரமில்லாதவை என்கிற சர்ச்சையும் அப்போது வெடித்தது.
நீங்க சிங்காரவேலன் கமல் மாதிரி செய்தா.. நான் குஷ்பு மாதிரி ஓடி வரமுடியுமா.. பவருடன் வனிதா வீடியோ
அதிகாரிகள் சொன்னது என்ன?
தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் இத்தகைய முறைகேடுகள் இருக்காது என்பது அனைவரது எதிர்பார்ப்பு. அரசு அதிகாரிகளும் இந்த எதிர்பார்ப்புடன்தான் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் போக்குவரத்து துறையில் தீபாவளி இனிப்புகள் வழங்குவதற்கான டெண்டர் விநியோகம் தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்றன. கடந்த கால ஆட்சியைப் போல இல்லாமல் இந்த முறை அரசு நிறுவனமான ஆவினில் இனிப்புகளை கொள்முதல் செய்யலாம்; அப்படி செய்தால் ஆவின் நிறுவனத்துக்கும் கணிசமான தொகை கிடைக்கும்; அரசுக்கும் குறைவான செலவு ஏற்படும் என அதிகாரிகள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.
அமைச்சர் குடும்பம் தலையீடு
ஆனால் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் குடும்பத் தரப்பு, அப்படி எல்லாம் ஆவினில் இனிப்புகள் வாங்க வேண்டாம். 9 போக்குவரத்து கழகங்களுக்கும் மொத்தம் 100 டன் இனிப்புகள் தேவை. இதை குறிப்பிட்ட ஒரு ஹோட்டல் நிர்வாகத்திடம் கொடுத்துவிடலாம் என கூறியிருக்கிறார். அப்போதும் அதிகாரிகள், டெண்டர் விட்டுதான் முறைப்படி கொடுக்க வேண்டும். அந்த ஹோட்டல் நிர்வாகத்தை விட குறைவான விலைக்கு ஆவின் உள்ளிட்ட நிறுவனங்கள் கேட்டால் என்ன செய்வது என கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அப்போதுதான், ஆண்டுக்கு ரூ100 கோடி வருவாய் ஈட்டக் கூடிய நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என டெண்டர் விதிகளில் திருத்தம் கொண்டுவாங்க என அமைச்சர் ராஜகண்ணப்பன் தரப்பில் சொல்லப்பட்டதாம்.
ஆதாயத்துக்காக டெண்டரில் திருத்தம்
இதனடிப்படையிலேயே டெண்டர் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டதாம். அதாவது குறிப்பிட்ட அந்த ஹோட்டல் நிர்வாகத்திடம் 1 கிலோ இனிப்பு ரூ600 என அரசு பணத்தை கொடுத்து வாங்கலாம் என்பது அமைச்சர் தரப்பின் முடிவு. இதில் 30% அமைச்சர் தரப்புக்கு கமிஷனாக தர வேண்டும் எனவும் கேட்கப்பட்டதாம். அரசு போக்குவரத்துக் கழகம் நட்டத்தில் இயங்கும் நிலையில் இப்படி பணத்தை ஏதோ ஒரு தனியார் ஹோட்டலுக்கும் அமைச்சர் குடும்பத்துக்கும் பங்குபோட்டுக் கொடுப்பது சரியா? விடியல் தரும் அரசு என்று பாடுபடும் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிடமாட்டாரா? என்கிற குமுறலை போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் வெளிப்படுத்தி வந்தனர். இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் லஞ்ச ஒழிப்பு பிரிவும் விசாரணை நடத்தியது.
அதிரடி காட்டிய ஸ்டாலின்
அத்துடன் தீபாவளி ஸ்வீட் டெண்டர் விவகாரம் அரசியலாகவும் சர்ச்சையாக வெடித்தது. பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் இதனை வெளிப்படையாகவே விமர்சிக்கவும் செய்தனர். இது தொடர்பான ஆவணங்களையும் தமது சமூக வலைதளப் பக்கங்களில் அண்ணாமலை வெளியிட்டிருந்தார். ஆட்சிக்கு வந்த 5 மாதங்களிலேயே அவப்பெயரா? என்கிற ரீதியில் ஆலோசனை நடத்தி இருக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதனையடுத்துதான் ஆவின் நிறுவனத்திடம்தான் இனிப்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக உத்தரவிட்டார். முதல்வரின் இந்த உத்தரவு அமைச்சர் தரப்பை அதிர்ச்சி அடைய வைத்திருந்தாலும் போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஆவினில் குறைவான விலைக்கு தரமான இனிப்புகள் கிடைக்கும். இதைவிட்டுவிட்டு தனிநபர் ஆதாயத்துக்காக அரசு பணத்தை கொள்ளையடிக்க நடந்த முயற்சியை முளையிலேயே கிள்ளி எறிந்துவிட்டார் முதல்வர் என்கின்றனர் போக்குவரத்துக் கழக ஊழியர்கள். மேலும் அரசு டெண்டர் விவகாரங்களில் அமைச்சரின் குடும்பத்தினர் சர்வ சாதாரணமாக தலையிடுவது தொடர்பாக தமது கடும் அதிருப்தியையும் முதல்வர் ஸ்டாலின் தரப்பு வெளிப்படுத்தியது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.