Actor Sivakumar: நடிகர் சிவகுமார் சால்வையை பிடுங்கி வீசினாரா? உண்மையில் நடந்தது என்ன தெரியுமா?
சென்னை: காரைக்குடியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் சிவகுமார், முதியவர் ஒருவர் அணிவிக்க வந்த சால்வையை பிடுங்கி வீசி எறிந்ததாக ஒரு சர்ச்சை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது கோபப்பட்ட சிவகுமார், அந்த இளைஞரின் செல்போனை வீசி எறிந்தார். இது பெரும் சர்ச்சையாக பேசப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காரைக்குடியில் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் கலந்து கொண்டார். அங்கு முதியவர் ஒருவர் சிவகுமாருக்கு சால்வை அணிவிக்க முயன்றார். அப்போது சால்வையை பிடுங்கி வீசி எறிந்தார் சிவகுமார். இதுவும் தற்போது சர்ச்சையாகப் பேசப்பட்டு வருகிறது.
ஆனால் காரைக்குடியில் என்ன நடந்தது என மூத்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருக்கிறார். அதில் இடம் பெற்றுள்ள தகவல்கள்:

காரைக்குடியில் நடந்த பழ.கருப்பையா புத்தக வெளியீடு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கிறார் நடிகர் திரு. சிவகுமார். நிகழ்ச்சியில் திரு. பழ. கருப்பையாவைப் பாராட்டிப் பேசியவர், அவரின் செயற்கரிய செயல் ஒன்றைக் குறிப்பிட்டு அவர் காலைத் தொட்டு வணங்கியும் இருக்கிறார்.
இப்படியானவர் நிகழ்ச்சி முடிந்து வெளியே செல்லும் போது ஒரு பெரியவர் சிவகுமாரை மறித்து சால்வை அணிவிக்க முற்பட்டுள்ளார்.
அப்போ செல்போன்.. இப்போ சால்வையா?.. சால்வை குமாராக மாறிய சிவகுமார்.. என்னவொரு கோபம்!
அதை சட்டென்று பறித்து, 'எனக்கு சால்வை போடறதே பிடிக்காதுன்னு தெரியும்ல'ன்னு பக்கத்தில் இருந்தவரிடம் உணர்ச்சி மேலிட விசிறியிருக்கிறார் சிவகுமார். இந்தக் காட்சியைப் படம் பிடித்தவர்கள். யாரிடமும் எந்த விளக்கமும் கேட்கவில்லை.

எப்படி என்றால், ஒரு வயதான ரசிகர் சால்வை போட வந்தார். அதை சிவகுமார் பிடுங்கி எறிந்தார். அதில் அந்த ரசிகர் மனவேதனை அடைந்தார்
இதில் உண்மை நிலையே வேறு. வயோதிக ரசிகர் பெயர் திரு. கரீம். திரு சிவகுமாருக்கு 58 ஆண்டு கால நண்பர். அவர் திருமணம், அவர் பிள்ளைகள் திருமணம் எல்லாம் செய்த போது குடும்ப விசேஷத்தில் முன்னின்றவர் சிவகுமார். அவரின் பேரன் பேத்திகளைக் கொஞ்சும் அளவுக்கு குடும்பத்தில் நெருக்கம். அந்த இஸ்லாம் நண்பரைப் பற்றி சிவகுமார் இந்து தமிழ்திசையில் எழுதிய திரைப்படச் சோலை தொடரில் (எழுத்தாக்கம் நான்தான்) விலாவாரியாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படிப்பட்டவரிடம் இப்போது நடந்த நிகழ்வில், ' எனக்கு சால்வை போடறதே பிடிக்காது. தெரிஞ்சுகிட்டே ஏன் இப்படி செய்யறே?' ன்னு உரிமையுடன் பிடுங்கிப் போட்டிருக்கார். நடந்தது அவ்வளவுதான். இதைத்தான் ஈரைப் பேனாக்கி, பேனை பெருமாளாக்கி திரித்து வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே செல்ஃபோன் விவகாரத்தில் சிவகுமாரை சீண்டிப் பார்த்தவர்களுக்கு இப்போது இது அல்வா போல ஆகி விட்டது. சம்பந்தப்பட்ட இஸ்லாம் பெரியவரே, அவர் குடும்பமே, இது தவறான செய்தி, உடனடியாக இதை delete செய்யா விட்டால் சேனல்கள் மீது வழக்குத் தொடருவேன் என்று தெரிவித்தும் யாரும் அடங்குவதாய்த் தெரியவில்லை.பொய்யைப் பொருந்தப் பேசினால் உண்மை திரு திருன்னு விழிக்குமாம்ன்னு ஒரு பழமொழி உண்டு. இப்போ எல்லாம் பொய்யைப் பொருந்தக் கூட பேச வேண்டாம்.

கண்ணால் காண்பதும் பொய் ; காதால் கேட்பதும் பொய் ; தீர விசாரிப்பதே மெய் என்று மூத்தோர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதற்கு அர்த்தம் இதுதானோ? இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி உள்ளார்.
(நன்றி படங்கள்: பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன் Facebook Page https://www.facebook.com/Kasu.Velayuthan)












Click it and Unblock the Notifications