"விதிமீறல்.." ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் இதுவாக இருக்கலாம்.. கார்த்தி சிதம்பரம் பரபர
சென்னை: ஒடிசா ரயில் விபத்து பெரும் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாகக் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ஒரு ரயில் விபத்து வெள்ளிக்கிழமை அரங்கேறியது. அப்போதே மீட்புப் பணிகள் தொடங்கிய நிலையில், நேற்று மதியம் தான் மீட்புப் பணிகள் நிறைவடைந்தன, இப்போது தண்டவாளத்தைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் ஒரு சரக்கு ரயில் என்று மூன்று ரயில்கள் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இதுவே விபத்தை மோசமானதாக மாற்றியுள்ளது. இந்த ரயில் விபத்து குறித்து விசாரிக்க உயர்மட்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்திற்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதன்படி சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த நிலையில், விபத்து குறித்து மேலும் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " ஒடிசா ரயில் விபத்து வருத்தமளிக்கிறது. இது பாதுகாப்பு குறைபாட்டால் நடந்திருக்கலாம். உலக அளவில் தன்னை முன்னிறுத்தும் திட்டங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாகப் பிரதமர் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
விதிமீறல்: ரயில் ஓட்டுநர்கள் 12 மணி நேரம் தான் வேலை செய்ய என்று தெளிவாக விதி இருக்கிறது. இருப்பினும், விதிகளை மீறி ஆட்கள் பற்றாக்குறை காரணமாக 18 மணி நேரம் முதல் 24 மணி நேரம் கூட சில ரயில் ஓட்டுநர்கள் வேலை செய்கிறார்கள். இதுவும் கூட ரயில் விபத்திற்குக் காரணமாக இருந்திருக்கலாம். இது குறித்து எல்லாம் தீவிர விசாரணை நடத்த வேண்டும். இந்திய ரயில்வே துறைக்கு இப்போது தேவை பாதுகாப்பு.
அதை விட்டுவிட்டு பிரதமர் மோடி வேகமாகச் செல்லும் ரயில்களைக் கொண்டு வருவதிலேயே ஆர்வமாக உள்ளார். உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தாமல் அதிவேக வண்டிகளைக் கொண்டு வந்தால் விபத்துகள் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. இது போன்ற விபத்து நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மிகச்சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். ரயில்களை வேகமாக ஓட்ட வேண்டும் என்பதற்காகப் பாதுகாப்பு முறையாகப் பின்பற்றுவதில்லை.
பாதுகாப்பு: பயண நேரத்தைக் குறைத்துள்ளோம் என்று அரசு சொன்னால் மட்டும் போதாது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசின் பல திட்டங்கள் அறிக்கையாக மட்டுமே உள்ளது. செயலுக்கு வரவில்லை. கவாச் திட்டத்தையும் அறிவித்தார்கள். அது செயல்பாட்டிற்கு வந்திருந்தால் விபத்து தடுக்கப்பட்டிருக்கும். இதில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கான இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் நான் அரசியல் பேச விரும்பவில்லை" என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து புதிய நாடாளுமன்ற திறப்பு விழா குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "இந்த விழாவில் பழைய மரபுகளை மறந்து புதிய மரபுகளைத் திணிக்க முயன்றனர். புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் குடியரசுத் தலைவருக்கு உரிய மதிப்பு அளிக்க பாஜக தவறிவிட்டது. இதன் காரணமாகவே நாங்கள் நிகழ்ச்சியைப் புறக்கணித்தோம். இதற்கெல்லாம் சேர்த்தே அடுத்து வரும் தேர்தலில் மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்" என்றார்.












Click it and Unblock the Notifications