திருப்பிப்போட்ட தீர்ப்பு.. ஓபிஎஸ்ஸுக்கு பின்னடைவு.. போச்சே.. மீண்டும் ‘அணி மாறும்’ படலம்? என்னாகும்?
சென்னை : ஆகஸ்ட் 17ஆம் தேதி வந்த தீர்ப்பைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வத்தின் கை ஓங்கியதால், பலர் ஓபிஎஸ் அணிக்குத் தாவினர். இந்நிலையில், இன்றைய தீர்ப்பு ஈபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்துள்ளதால் மீண்டும் அணி மாறும் படலம் நடக்குமா என அரசியல் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது.
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார்.
ஓபிஎஸ் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு நிர்வாகிகள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேல்முறையீட்டில் தீர்ப்பு
ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு செல்லாது என்றும், ஜூன் 23க்கு முந்தைய நிலையே தொடரும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பு அளித்திருந்தார். அந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் அமர்வு இன்று தீர்ப்பு அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு ஓபிஎஸ்ஸுக்கு பாதகமாக அமைந்துள்ளது.

பொதுக்குழு கூட்டம் செல்லும்
ஜூலை 11-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன்மூலம், எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக செயல்பட உள்ளார். அதேநேரம், அந்தப் பொதுக்குழுவில், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை, கட்சி பொறுப்புகளிலிருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி
இன்று ஐகோர்ட் நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவின் மூலம், எடப்பாடி பழனிசாமி பொதுக்குழுவில் கொண்டுவந்த தீர்மானம் செயலாக்கம் பெற்றுள்ளது. இதனால், ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றாகியுள்ளது. பொதுக்குழு செல்லும் என்ற உத்தரவால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக ஈபிஎஸ் தொடர்கிறார்.

மீண்டும் அப்பீல்
ஈபிஎஸ் தரப்புக்கு சாதகமாக வந்துள்ள இந்த தீர்ப்பால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல இந்த தீர்ப்பு ஓ.பன்னீர் செல்வம் தரப்புக்கு பாதகமாக அமைந்துள்ளதால் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

தீர்ப்பை தொடர்ந்து நடந்த சம்பவங்கள்
கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி ஐகோர்ட் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ஓபிஎஸ்ஸுக்கு சாதகமாக வந்ததால் அவர் கை ஓங்கியது. அதைத்தொடர்ந்து, முக்கிய நிர்வாகிகள் பலர் ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஈபிஎஸ் ஆதரவாளர்களாக இருந்த பலரும் அணி மாறினர். முக்கியமாக, உசிலம்பட்டி எம்.எல்.ஏ ஐயப்பன் ஓபிஎஸ் அணிக்குத் தாவினார். பலரும் ஓபிஎஸ் அணிக்குத் தாவும் நிலை தென்பட்டது.

புரட்டிப்போட்ட தீர்ப்பு
இந்நிலையில், இன்று தீர்ப்பின் திசை மாறி எடப்பாடி பழனிசாமி பக்கம் காற்றடித்திருப்பதால், மீண்டும் ஓபிஎஸ் பக்கமிருந்து நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி அணிக்குத் தாவுவார்களா எனக் கேள்வி எழுந்துள்ளது. ஓபிஎஸ் தரப்புக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பின்னடைவு நிர்வாகிகள் மத்தியில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.












Click it and Unblock the Notifications