"திராவிட மாடல்.." நாட்டில் தமிழகம் தான் டாப்.. புள்ளி விவரங்களை அடுக்கிய பிடிஆர்! அதிர்ந்தது அரங்கம்
சென்னை: திராவிட மாடல் குறித்து நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய அமைச்சர் பிடிஆர், தமிழகத்தின் வளர்ச்சி தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அரசு அரசு திராவிட மாடல் வளர்ச்சி என்ற ஒரு சொற்றொடரை முன்னெடுத்துள்ளது. தமிழ்நாட்டில் திராவிட மாடல் சார்ந்த திட்டங்களே செயல்படுத்தப்படுவதாகவும் திமுகவினர் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
இந்தச் சூழலில் சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் திராவிட மாடல் வளர்ச்சி குறித்தும் தமிழகத்தின் வளர்ச்சி குறித்தும் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அமைச்சர் பிடிஆர்
தலைநகர் சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் திராவிட மாடல் வர்த்தக முன்னேற்றம் மற்றும் மனித மேம்பாடு என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. இதில் நிதியமைச்சர் பிடிஆர் மற்றும் மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிடிஆர், "இப்போது இடதுசாரி மற்றும் வலதுசாரி நாடுகளுக்கும் இடையே தான் உலகம் இருக்கிறது. திராவிட மாடல் அனைவரும் சமம் என்பதுதான். சாதி, மத, இன பாகுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பதே திராவிட மாடல்.

முழு திறனை அடையவில்லை
திராவிட மாடலை நாம் பின்பற்றுவதால், பல வழிகளில் நான் முன்னேறியுள்ளோம். இதற்காக பல்வேறு தரவுகளும் நம்மிடம் இருக்கிறது. அதேநேரம் அமைப்பு ரீதியாகத் திராவிட மாடல் திட்டங்களைச் செயல்படுத்த நமக்கு போதிய அமைப்புகள் இல்லை. இதனால் திராவிட மாடல் இன்னுமே கூட முழு திறனை அடையவில்லை என்பதே உண்மை. நமது நாட்டில் முன்னேறிய டாப் 4 மாநிலங்களில் தமிழ்நாடும் உள்ளது. சமூக மற்றும் பொருளாதார அடிப்படை வளர்ச்சியில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. இன்று உலகில் பார்த்தோம் என்றால் பல நாடுகளில் சுகாதாரமும் கல்வியும் முழுக்க முழுக்க இலவசமாக வழங்கி வருகிறது. அதுபோன்ற திட்டங்களைத் திராவிட மாடல் வழங்குகிறது.

புதுமை பெண் திட்டம்
அதேநேரம் பாஜக தேர்தலுக்காக மட்டுமே இமாசலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களில் இலவசத் திட்டங்களை வாக்குறுதியாகக் கொடுக்கிறது. இப்போது தமிழ்நாட்டில் பள்ளிகளில் மதிய உணவுடன் காலை உணவும் வழங்கப்படுகிறது. இது மாணவர்களுக்கு போதிய ஊட்டச்சத்து கிடைக்க உதவும். இவை எல்லாம் நாம் எதிர்காலத்திற்காகச் செய்யும் முதலீடாகவே பார்க்க வேண்டும். கடந்த ஆட்சியில் தாலிக்கு தங்கம் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தாமல் இருந்தது. இதன் காரணமாகவே இதை அனைவருக்கும் பயனுள்ள வகையில் "புதுமைப் பெண்" திட்டமாக மாற்றினோம். பல்வேறு தரவுகளில் பார்த்தாலும் கூட தமிழ்நாடு வளர்ந்த மாநிலமாகவே இருக்கிறது.

இலவச பேருந்து பயணம்
நாட்டிலேயே அதிக டூ வீலர்கள் உள்ள மாநிலம் என்றால் அது தமிழ்நாடு தான். இங்கு 2.33 ரேசன் அட்டைகள் இருக்கும் நிலையில், 2.8 கோடி டூ வீலர்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம்.. இது பெண்கள் பொருளாதார ரீதியில் வளர்ச்சியடைய உதவும். இந்த இலவச பேருந்து பயணத் திட்டத்தால் சமூக பொருளாதார ரீதியாக அடையும் பயனைப் பார்த்தால், இது ஒரு பெரும் சாதனையாகவே இருக்கும். நகைக்கடன் விவகாரத்தில் ஒரே நபர் பல வங்கிகளில் நகை தள்ளுபடி பலனைப் பெறப் பல வங்கிகளில் அடைமானம் வைத்ததைக் கண்டறிந்தோம். இந்த முறைகேட்டையும் அரசு சரியாகக் கண்டறிந்துள்ளது.

பெரிய மறுமலர்ச்சி
முன்னேறி வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு 8 லட்சம் வருமானம் என்பது ஏற்றுக் கொள்ளவே முடியாது. சமூக ஏற்றத்தாழ்வுகளை முறையாகக் கணக்கிட்டு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டைத் தர வேண்டும். உயர் கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கையிலும் நாட்டிலேயே தமிழகம் தான் அதிகம். இங்கு 53% பேர் உயர்கல்வியைப் பயில்கின்றனர். கல்விக்கு நாம் பல திட்டங்களைக் கொண்டு வந்துள்ளோம். புதுமைப்பெண் மற்றும் இலவச பேருந்து பயணத் திட்டம் இதில் பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும். குறிப்பாகப் புதுமைப் பெண் திட்டம் இடைநிற்றலை நிச்சயம் குறைக்கும்" என்று அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications