அமைச்சரவையில் உதயநிதிக்கு ரெடியாகும் இலாக்கா.. அந்த முக்கிய துறையை கொடுக்க திட்டமா? உண்மை என்ன?
சென்னை: திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் அவருக்கு என்ன துறை கொடுக்கப்படலாம் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.
திமுக எம்எல்ஏ உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் நாளுக்கு நாள் திமுகவிற்கு உள்ளே வலுப்பெற்று வருகிறது. திமுக அரசு பதவி ஏற்ற போதே உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன.
ஆனால் அப்போது உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் தற்போது அமைச்சர்கள் அன்பில் மகேஷ், நாசர் உள்ளிட்ட பலர் உதயநிதியை அமைச்சராக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

என்ன துறை?
இந்த பேச்சு தலைமைச்செயலகத்திலும் எதிரொலிக்கின்றன. இரண்டு ஐ.ஏ.எஸ்.கள் சந்தித்துக் கொண்டால் கூட உதயநிதி அமைச்சராகப் போறாராமே என்று பேசாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு உதயநிதியை அமைச்சராக்குவது குறித்த விவாதம் நடந்து கொண்டு இருக்கிறது. இது தொடர்பாக இதுவரை முதல்வரிடம் இருந்தோ, திமுகவிடம் இருந்தோ அறிவிப்பு எதுவும் வரவில்லை. உதயநிதி ஸ்டாலினும் அமைச்சர் ஆவது பற்றி இதுவரை எதுவும் பேசவில்லை. இந்த நிலையில் அவருக்கு என்ன துறை கொடுக்கப்படலாம் என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

உள்ளாட்சி உதயநிதியா?
இது தொடர்பாக அரசுக்கு நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில், உதயநிதியை அமைச்சராக்கும் போது அவருக்கு உள்ளாட்சித்துறையை ஒதுக்க வேண்டும் என்கிற பேச்சு இருக்கிறது. அவருக்கு இந்த துறையை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சிலர் பரிந்துரை செய்துள்ளனராம். ஆனால் உள்ளாட்சித்துறையை ஊரக உள்ளாட்சி , நகர்ப்புற உள்ளாட்சி என இரண்டாக பிரித்து அதன் முறையே பெரியகருப்பண்ணன், கே.என்.நேரு ஆகியோர் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.

பெரிய துறை
மிகப்பெரிய துறை என்பதால்தான் அதனை நிர்வகிக்க வசதியாக இரண்டு துறைகளாக ஸ்டாலின் பிரித்தார். இப்போது உதயநிதிக்காக அதனை ஒன்றாக இணைக்க முடியுமா? அப்படி இணைத்தால் நேருவுக்கும், பெரிய கருப்பண்ணனுக்கும் என்ன இலாகாவை ஒதுக்க முடியும் ? பெரிய கருப்பண்ணனை விடுங்கள்... அமைச்சரவையிலிருந்து விடுவித்து விட்டால் கூட எந்த பிரச்சனையும் வரப்போவதில்லை. ஆனால், நேரு ?

வாய்ப்பு இல்லை
அதனால், உள்ளாட்சி துறையை உதயநிதிக்கு கொடுக்கும் வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அமைச்சரவைக்குள் உதயநிதியை கொண்டு வரும்போது, அவருக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறையை ஒதுக்கலாம். சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் இந்த துறையை கவனித்து வருகிறார். இந்த துறைதான் பாதுகாப்பானது. தவிர, திமுகவுக்கு புதிய இளைஞர்கள் வருவதில்லை என்பது மிகப்பெரிய குறையாகவே இருக்கிறது.

விளையாட்டு துறை
அந்த வகையில், தமிழகத்தில் விளையாட்டு துறையை வளர்ச்சியடைய வைக்கவும், அதன் மூலம் இளைஞர்களை திமுகவுக்கு ஈர்க்க முடியும் என்பதாலும் இந்த துறையை அவருக்கு வழங்கலாம். தற்போது சவலைப்பிள்ளையாக காட்சி தரும் இந்த துறைக்கு , உதயநிதி அமைச்சரானால் கூடுதல் கவனம் பெறும் ; வலிமையடையும். விளையாட்டின் மூலம் இளைஞர்களை ஈர்ப்பது எளிதானது.

வேலைவாய்ப்பு
அதேபோல, வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதன் மூலமும் இளைஞர்களை ஈர்க்க முடியும். மேலும், துறை சார்ந்து பெரிய சிக்கல்கள் எதுவும் வரப்போவதில்லை. உதயநிதிக்கும் அமைச்சரவை என்ன என்றால் கற்றுக் கொள்ளும் அனுபவமும் கிடைக்கும். அந்த அனுபவம் கிடைத்த பிறகு பெரிய துறையை அவரிடம் கொடுப்பது தவறல்ல என்று அதிகாரிகளின் கருத்தாக கோட்டை வட்டாரங்களில் பரவி வருகிறது. இதனால் விரைவில் பெரிய அறிவிப்பு வரலாம் என்று பேசிக்கொள்கிறார்கள்.












Click it and Unblock the Notifications