ஈபிஎஸ் டெல்லியில்.. அதிருப்தியாளர்களை ஈர்க்க இறங்கி சம்பவம் செய்யும் ஓபிஎஸ்.. மாஸ்டர் பிளான்!
சென்னை : எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ்ஸுக்கு செக் வைக்க டெல்லி சென்றுவிட்டார். இது ஓபிஎஸ்ஸுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எல்லோரும் எதிர்பார்த்து வரும் நேரத்தில் அடிமடியிலேயே கை வைக்கும் திட்டமொன்றைச் செயல்படுத்தி உள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.
தன் பக்கம் ஆதரவைப் பெருக்குவதற்காக மாவட்ட செயலாளர்களை வைத்து ஒரு திட்டத்திற்கு தயாராகி வரும் அதேநேரத்தில், கிராஸ் ரூட் லெவலில் ஒரு பிளானையும் செய்திருக்கிறார் ஓபிஎஸ்.
ஓபிஎஸ்ஸின் இந்தத் திட்டம் நிச்சயம் அவருக்கு கை கொடுக்கும், வரும் நாட்களில் இதற்கான பலன் தெரியவரும் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

ஈபிஎஸ்ஸின் டெல்லி பயணம்
அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வானதற்குப் பிறகு முதல் முறையாக டெல்லிக்கு சென்றிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்வதற்காகவே ஈபிஎஸ் டெல்லி சென்றிருப்பதாக கூறப்பட்டாலும், அதிமுக தலைமை, முன்னாள் அமைச்சர்கள் குறிவைக்கப்படுவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக பல்வேறு திட்டங்களோடுதான் அவர் டெல்லி சென்றிருக்கிறார்.

கட்சியில் வலுவாக இருந்தாலும்
பொதுக்குழுவை நடத்தி முடித்து இடைக்காலப் பொதுச் செயலாளர் பதவியைக் கைப்பற்றியதோடு, ஓபிஎஸ்ஸை கட்டம் கட்டி கட்சியில் இருந்தும் நீக்கினார் ஈபிஎஸ். அதேபோல், வேறொரு கணக்குப் போட்டு ஓபிஎஸ் செய்த சம்பவம் அவருக்கே எதிராகத் திரும்பி, அதிமுக தலைமை அலுவலகமும் எடப்பாடி கைக்குப் போய்விட்டது. வங்கிக் கணக்கு தொடர்பான விவகாரத்திலும் எடப்பாடிக்கு சாதகமான பலன் கிடைத்துவிட்டது. கட்சி ரீதியாக ஈபிஎஸ்ஸின் கை ஓங்கியிருந்தாலும், பாஜகவின் துணை எடப்பாடி பழனிசாமிக்குத் தேவைப்படுகிறது.

காரணம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமான சந்திரசேகர் வீட்டில் ரெய்டு, எடப்பாடிக்கு நெருக்கமான செய்யாதுரை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் ரெய்டு, முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணாவை விசாரிக்க சி.பி.ஐ கடிதம் என அடுத்தடுத்து டெல்லியிலிருந்து நெருக்கடிகள் வந்துகொண்டே இருக்கும் நிலையில்தான் டெல்லிக்கு 4 நாள் பயணமாக படையெடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. இந்தப் பயணத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரோடு சந்திக்க இருக்கிறார் ஈபிஎஸ்.

இங்கே ஓபிஎஸ்
ஓ.பன்னீர்செல்வம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், ஈபிஎஸ் டெல்லிக்குப் போனது ஓபிஎஸ் தரப்புக்கு டென்ஷனை கூட்டியது. காரணம், அடுத்த வாரம் சென்னை வரும் பிரதமர் மோடியைச் சந்திக்க காய்நகர்த்தி வருகிறார் ஓபிஎஸ். அதற்குள் டெல்லி சென்ற ஈபிஎஸ்ஸூக்கு சாதகமான பலன் கிடைத்தால் நம் கதி அதோ கதிதான் என யோசித்துள்ள ஓபிஎஸ், கட்சியில் தனது பலத்தைப் பெருக்கும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பை நேரம் பார்த்து வெளியிட்டுள்ளார்.

ஓபிஎஸ் அறிவிப்பு
அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளும், அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க, மீண்டும் அவரவர் பொறுப்புகளில் செயல்படலாம். மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், இணைச்செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்பட்டு, ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் மீண்டும் அந்தந்தப் பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். அதேபோல், காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்று ஓபிஎஸ் அறிவித்துள்ளார்.

ஊராட்சி செயலாளர்
அதிமுகவில் ஜெயலலிதாவால் தோற்றுவிக்கப்பட்ட தொகுதி செயலாளர், ஊராட்சி செயலாளர்கள் பதவிகள் அதிகாரம் மிக்கவையாக இருந்தன. தேர்தல் காலங்களில் தொகுதி செயலாளரே, அந்தந்தத் தொகுதிக்கான தேர்தல் பொறுப்பாளராகச் செயல்படுவார். அதேபோல, கிராமங்களில் அமைக்கப்பட்டிருந்த ஊராட்சி செயலாளர் பதவிகள், அடிமட்ட அளவில் தொண்டர்களை ஒருங்கிணைக்க பெரிதும் பயன்பட்டன. ஆனால், ஒன்றிய செயலாளர்களுடன், தொண்டர்கள் எளிதாக தொடர்பு கொள்ள முடியவில்லை என்ற காரணத்தால் கடந்த 2020ஆம் ஆண்டு ஊராட்சி செயலாளர் பதவிகளை ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவரும் நீக்கினர்.

மாற்றுப் பதவி
ஊராட்சி செயலாளர் பதவியை நீக்கியபோது, அந்தப் பதவிகளில் இருந்தவர்களுக்கு மாற்று பதவிகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. ஆனால், பெரும்பாலானோருக்கு இதுவரை பதவிகள் வழங்கப்படவில்லை. இதனால், பலரும் கட்சிப் பணிகளில் சுணக்கம் காட்டி வந்தனர். அவர்களை தம் பக்கம் இழுக்கும் முயற்சியாகவே அந்தப் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும் என்றும், ஏற்கனவே அந்தப் பொறுப்புகளில் இருந்தவர்கள் அப்படியே தொடர்வார்கள் என்றும் அறிவித்துள்ளார் ஓ.பன்னீர்செல்வம்.

நிர்வாகிகள் ஆதரவு
தேர்தல் ஆணையத்தில் தன் பலத்தை நிரூபிப்பதற்கு, கட்சி நிர்வாகிகளின் ஆதரவு ஓ.பன்னீர்செல்வத்துக்குத் தேவை. அதற்காகவே, அந்தப் பதவிகளை மீண்டும் கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பழனிசாமி தரப்பினர் மீது அதிருப்தியில் இருப்பவர்களின் பதவிகளைக் கொடுப்பதன் மூலம் தன் பக்கம் திரட்டலாம் எனக் கணக்குப் போட்டுள்ளார் ஓபிஎஸ். ஈபிஎஸ் டெல்லிக்கு சென்றுள்ள நேரத்தில் அடிமட்டத் தொண்டர்களை ஈர்க்க இறங்கிச் செய்துள்ளார் ஓபிஎஸ்.
Recommended Video

விரைவில் லிஸ்ட்
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருக்கும் முக்கிய நிர்வாகிகளை தன் பக்கம் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளில் தீவிரமாக இறங்கி இருக்கிறது ஓபிஎஸ் தரப்பு. விரைவில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் பதவியில் உள்ள 69 மாவட்ட செயலாளர்களின் பதவிக்கு புதிய நிர்வாகிகளை நியமிக்க இருக்கிறார் ஓபிஎஸ். அந்த லிஸ்ட்டில் ஈபிஎஸ் மீது அதிருப்தியில் எந்தப் பக்கமும் ஒட்டாமல் இருந்து வரும் பலரையும் கொண்டு வந்து விடுவார்கள் என்கிறார்கள்.

மாஸ்டர் பிளான்
அதேபோல, அடிமட்ட அளவிலும், தொண்டர்களின் ஆதரவைப் பெறுவதற்காக ஊராட்சி செயலாளர்களாக இருந்தவர்களை தன் பக்கம் இழுக்க நினைக்கிறார் ஓபிஎஸ். அதிமுக பொதுக்கூட்டங்களுக்கு ஊராட்சி செயலாளர்களே தொண்டர்களை அழைத்துச் செல்வார்கள். தொண்டர்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பவர்கள் தன் பக்கம் வந்தால் தானாகவே பலம் அதிகரிக்கும் என ஓபிஎஸ் தரப்பு போட்டிருக்கும் கணக்கே இன்றைய அறிவிப்புக்குக் காரணம் என்கிறார்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications