பாஜகவுக்கு 250 சீட்டுகள் உறுதி! ‘இந்தியா’ வெல்ல புதிய வழி? ப்ளான் ரெடி! ராகுல் ரெடியா?
சென்னை: இந்தியா முழுவதும் மக்களவைத் தேர்தல் கலை கட்டிவிட்டது. 'இந்தியா’ கூட்டணி, தொடங்கிய வேகத்திலேயே உடைந்து கொண்டு வருகிறது. மம்தா வெளியேறிவிட்டார். ஆம் ஆத்மி பை பை சொல்லிவிட்டது. நிதிஷ்குமார் கழன்று கொண்டுள்ளார்.
இந்நிலையில் நடுக்கடலில் திசை தெரியாமல் தவிக்க ஆரம்பித்துள்ளது 'இந்தியா’ கூட்டணி.இதைத்தான் பாஜக எதிர்பார்த்தது. அது இப்போது நடந்துவிட்டது.

மம்தா, ஆம் ஆத்மியை தொடர்ந்து இடதுசாரிகளும் 'இந்தியா’ கூட்டணியை விட்டு வெளியேறலாம் எனப் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் 250 சீட்டுகளைப் பெற்றுவிட்டால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துவிடும். அந்த எண்ணிக்கையை பாஜக எளிதாகப் பெற்றுவிடும் என்றே சொல்லப்படுகிறது.
ஆக, ஆயிரம் யானைகள் பலத்துடன் மோடியை 'இந்தியா’ கூட்டணி எதிர்க்க வேண்டும். அதற்கு என்ன வழி? எப்படி மோதினால் மோடியை வெல்ல முடியும்? கணக்கு சொல்கிறார் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

"மம்தா ஆதரவை விலக்கிக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து பீகாரிலும் பிரச்சினை தொடங்கி உள்ளது. நிதிஷ்குமார் விலகலும் சேர்ந்துள்ளது. இது 'இந்தியா’ கூட்டணிக்கு மிகப் பெரிய நெருக்கடிதான்.
நிதிஷ்குமார் முதல்வரைப் பதவியைவிட்டு விலகுவார். மீண்டும் பாஜக ஆதரவுடன் தேர்தலைச் சந்திப்பார். மீண்டும் அவர் முதலமைச்சராகலாம். அல்லது ஆட்சிக் கலைக்கப்படலாம். இப்படிப் பல ஊகங்கள் வெளிவந்துகொண்டுள்ளன.
'இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக கார்கேவை மம்தா பானர்ஜிதான் முன்மொழிந்தார். ஆம் ஆத்மி கட்சி அதை வழிமொழிந்தது. இப்போது காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்திருக்கிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் மேற்குவங்கத்தில் 2 இடங்களில் காங்கிரஸ் வென்றது. 6% வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆகவே, மீதி இடங்களில் காங்கிரஸ் வலுவாக இல்லை என்று மம்தா நம்புகிறார்.
அவர் கார்கேவை ஆதரித்த கூட்டணிக் கூட்டத்திற்குப் பின் காங்கிரஸுக்கு 2 இடங்களே ஒதுக்க முடியும் என மம்தா டெல்லிக்குப் புரியவைத்துவிட்டு வந்துவிட்டார். காங்கிரஸ் முடிவை டிசம்பர் மாதத்திற்குள் தெரிவிக்கக் கெடு கொடுத்திருந்தார். ஆனால், காங்கிரஸ் தலைமை முடிவை எடுக்கவில்லை.
மேற்கு வங்கத்தில் மாநிலக் கட்சிகளிடையே கடும் போட்டியும் நிலவி வருகிறது. மாநில அளவில் மம்தா எப்போது இடதுசாரிகளுக்கு எதிராக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டு வைத்து மம்தாவை எதிர்த்து களம் கண்டனர்.
ஆகவே, மேற்கு வங்கத்தைப் பொறுத்தளவில் காங்கிரஸ் ஆளும் கட்சியான மம்தாவைத் தொடர்ந்து எதிர்த்தே அரசியல் செய்து வருகிறார்கள். ஒருவேளை இந்த எதிர்ப்பை டெல்லி தலைமை குறைக்கும் என எதிர்பார்த்தனர். அது நடக்கவே இல்லை. இறுதியில் கூட்டணி முறிவு ஏற்பட்டுள்ளது.

மம்தாவுக்குத் தேசிய கட்சியாக மாற வேண்டும் என்று ஆசை இருக்கிறது. அப்படிப் பார்த்தால் அசாம், மேகாலயா ஆகிய மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கணிசமான ஓட்டு வங்கி உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மேற்கு வங்கத்தில் 6% வாக்குகள் உள்ளன. அதற்கு இணையாக அசாம், மேகாலயா மாநிலத்தை ஒட்டி உள்ள தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் 6% வாக்குகள் உள்ளன.
எனவே அந்தத் தொகுதிகளில் மம்தா தன் கட்சிக்கு சீட் கேட்கிறார். காங்கிரஸ் அதற்குச் சம்மதிக்கவில்லை.

இதில் பாஜகவுக்குச் சாதகமான அம்சங்கள் ஒன்றும் இல்லை. மம்தா வெற்றிபெற்றாலும் அவர் பாஜகவை ஆதரிக்கமாட்டார். 2019 தேர்தலில் பாஜகவுக்கு மேற்குவங்கத்தில் 40% வாக்குகள் கிடைத்தன. அப்படிப் பார்த்தால் அவ்வளவு பலமாகக் கட்சியுடன் அவர் கூட்டணிக்குப் போகமாட்டார். அது அவருக்கே எதிராக மாறிவிடும்.
பஞ்சாப் மாநிலத்திலும் இதே பிரச்சினைதான். காங்கிரசைத் தோற்கடித்து ஆம் ஆத்மி ஆட்சியைப் பிடித்துள்ளது. அங்கே கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிக இடத்தை காங்கிரஸ் பிடித்தது. ஆகவே, ஆம் ஆத்மி அவர்களுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. வைத்தால் அதிக இடத்தை விட்டுக் கொடுக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து பீகாரும் காங்கிரசுக்குப் பறிபோய் உள்ளது.
குறிப்பாக 1990களுக்குப் பின்னர் பெரும்பான்மை ஆட்சி என்பது குறைந்துவிட்டது. ஆகவே, பாஜக 250 இடங்களைக் கைப்பற்றினால் கூட, அவர்களையே ஆட்சி அமைக்கக் குடியரசுத் தலைவர் அழைப்பார். அதை வைத்து அவர்கள் பிற கட்சிகளின் ஆதரவை எளிதாகத் திரட்டி விடுவார்கள்.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பின்னர் தென்னிந்தியா, வட இந்தியா என மிகப்பெரிய மாற்றம் பாஜகவைப் பொறுத்தளவில் உருவாகி உள்ளது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் ஆகியவை விந்தியத்திற்கு தெற்கே உள்ள மாநிலங்களாக நாம் எடுத்துக் கொள்ளலாம். இங்கே மொத்தம் 165 சீட்டுகள் உள்ளன. அதில் மொத்தமாக பாஜக 15 சீட்டுகளில் வெல்வதே பெரிய கஷ்டம்.
ஆனால், வட இந்தியாவில் அப்படியில்லை. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், குஜராத், பீகார் என மொத்தம் 205 சீட்டுகள் உள்ளன. கடந்த தேர்தலில் கிட்டத்தட்ட 90% இடங்களை பாஜக பிடித்தது. உத்தரப்பிரதேசத்தில் 100% பாஜகவிடம் சென்றது. இந்தத் தேர்தலில் குறைந்த பட்சம் 180 இடங்களைப் பிடிப்பதே பாஜக திட்டம். இன்னும் சொல்லப்போனால் குஜராத்தில் 100% பாஜக வருவதற்கான வாய்ப்பு உள்ளது.
இதுபோக பிறமாநிலங்களிலிருந்து 60 இடங்களைப் பிடித்தாலே 250 சீட்டுகள் வந்துவிடும். பாஜக எளிதாக ஆட்சி அமைக்க அழைக்கப்பட்டுவிடும்.
மேற்குவங்கம் 42, பஞ்சாப் 13, டெல்லி 7, ஹரியான 10 என 72 இடங்களும் இந்தியா கூட்டணியில்தான் சேரும். கூடவே அசாம், மிசோரம் போன்ற சின்ன சின்ன மாநிலங்களைச் சேர்த்தால், குறைந்தது 70 இடங்கள் வரலாம். இதில் பாஜக கணிசமான இடங்களைப் பெறலாம்.
பாஜவுக்கு 38% வாக்குவங்கி இருப்பதாகப் பிரதமர் மோடியே பேசி இருக்கிறார். அதை 50% ஆக உயர்த்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்துக்களின் 80% வாக்குவங்கியை நம் பக்கம் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
இப்படி உள்ள சூழலில் பாஜகவை வீழ்த்த 'இந்தியா’ கூட்டணியின் பொது வேட்பாளர்கள் நாடு முழுவதும் 350 இடங்களில் நிறுத்தப்பட்ட வேண்டும். அப்போதுதான் பாஜகவை எதிர்க்க முடியும். இல்லை என்றால் அது கஷ்டம்” என்கிறார்.
DISCLAIMER:
Please note that this message and any attachments may contain confidential and proprietary material and information and are intended only for the use of the intended recipient(s). If you are not the intended recipient, you are hereby notified that any review, use, disclosure, dissemination, distribution or copying of this message and any attachments is strictly prohibited. If you have received this email in error, please immediately notify the sender and delete this e-mail , whether electronic or printed. Please also note that any views, opinions, conclusions or commitments expressed in this message are those of the individual sender and do not necessarily reflect the views of Ver sé Innovation Pvt Ltd.












Click it and Unblock the Notifications