பாஜகவிற்கு பாமகவிற்கும் என்ன வித்தியாசம்.. 'அது ஸ்டாலினால் முடியும்.. திருமாவளவன் பரபரப்பு பேட்டி
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், பாஜக மற்றும் பாமகவிற்கு என்ன வித்தியாசம் என்று விளக்கி உள்ளார்.
சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரபல தமிழ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், பாஜக மற்றும் பாமகவிற்கு என்ன வித்தியாசம் என்று விளக்கி உள்ளார். அந்த பேட்டியில் திமுகவுடன் கூட்டணி ஏன் என்பதையும், அதிமுகவிற்கு வாழ்த்து சொல்லியது ஏன் என்பது குறித்தும் விளக்கி உள்ளார்.
அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பு அளித்த போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், எடப்பாடி பழனிசாமியை நேரடியாக வாழ்த்தினார். கூட்டணியில் உள்ள பாஜகவே எடப்பாடி பழனிசாமியை இன்று வரை வாழ்த்தாத நிலையில், எதிர் முகாமில் உள்ள திருமாவளவன் வாழ்த்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.
திமுகவுன் பாமக நெருக்கம் காட்டுவது போல் செய்திகள் வெளியான நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாமக இருக்கும் அணியில் விசிக ஒரு போதும் இடம் பெறாது என்று திருமாவளவன் அறிவித்தார்.

அதிமுக கூட்டணி
இதனால் திமுக கூட்டணியில் இருந்து திருமாவளவன் வெளியேறப்போகிறாரா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஒரு படி மேலே போய், திருமாவளவன் விரும்பினால் தாராளமாக அதிமுக கூட்டணிக்கு வரலாம் என்றார். இதனால் சலசலப்பு மேலும் அதிகரித்தது

திருமா விளக்கம்
இதுகுறித்து பிரபல தமிழ் ஊடகமாக பிபிசிக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், பாமக - பாஜக இருக்கும் இடத்தில் இருக்கமாட்டோம் என்று மீண்டும் மீண்டும் கூறி உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயம் எங்களுக்கு இருக்கிறது. தற்போது உள்ள சூழலில் அதிமுக, பாஜக பக்கம்தான் போவார்கள், எனவே அதிமுக பக்கம் போவதற்கு எங்களுக்கு வாய்ப்பே இல்லை என்பதை உறுதிப்படுத்தவே சொல்கிறேன். நாங்கள் மக்கள் பிரச்சனைக்கு போராடுகிறோம் என்று புரிந்துகொள்ளாமல், எதோ திமுகவுக்கு ஒரு சிக்னல், அதிமுகவுக்கு ஒரு சிக்னல் தருகிறோம் என்று புரிந்துகொள்கிறார்கள். பாமக-வை இங்கே வரவிடாமல் தடுப்பதற்காக சொல்கிறோம் என்று அர்த்தம் கற்பிக்கிறார்கள்

ஸ்டாலினால் முடியும்
அதை நான் மறுக்கவேண்டிய தேவை இருக்கிறது. அதனால், பாஜக, பாமக இருக்கும் இடத்தில் ஒருக்காலும் இருக்கமாட்டோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அதிகாரவர்க்கத்தோடு எங்களுக்கு இருக்கும் முரண்பாட்டையும் சுட்டிக்காட்டுகிறோம். ஆனாலும், திமுக தலைமையில் அகில இந்திய அளவில் ஒரு கூட்டணியை வலிமைப்படுத்தவேண்டும், இதில் நான் தெளிவாக இருக்கிறேன். திமுக கூட்டணியில்தான் இருப்பேன், திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், பாஜக எதிர்ப்பு சக்திகள் இணைந்த கூட்டணியை ஒருங்கிணைக்கும் பணியை செய்யவேண்டும். அந்த ஒருங்கிணைக்கும் பணியை எங்களால் செய்ய முடியாது. ஒரு முதல்வர் என்ற முறையில் ஸ்டாலினால் செய்ய முடியும்.

பாமக எப்படி
பாமகவினர் பாஜகவை சோஷியல் இஞ்சினியரிங் என்ற பெயரில் அப்படியே பின்பற்றுகிறார்கள். அங்கே அவர்கள் லவ் ஜிகாத் என்கிறார்கள். இங்கே இவர்கள் நாடக காதல் என்கிறார்கள். அவர்கள் முஸ்லிம், கிறிஸ்துவ வெறுப்பை உயர்த்திப் பிடிக்கிறார்கள். இவர்கள் தலித் எதிர்ப்பை உயர்த்திப் பிடிக்கிறார்கள். அவர்கள் சாதாரண மக்களின் மத உணர்வை அரசியல் ஆதாயமாக அறுவடை செய்கிறார்கள். இவர்கள் சாதாரண மக்களின் சாதி உணர்வை அரசியல் ஆதாயமாக அறுவடை செய்கிறார்கள். பாஜகவின் மாதிரியாகத்தான் தமிழ்நாட்டில் இது இருக்கிறது. எனவே சாதியவாத மதவாத சக்திகளோடு இனி எந்தக் காலத்திலும் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்று 2014க்குப் பிறகு எல்லா காலகட்டத்திலும் சொல்லியிருக்கிறேன்" என திருமாவளவன் கூறினார்.












Click it and Unblock the Notifications