தமிழ்நாட்டை குறிவச்சுட்டாங்க.. கலைஞரைவிட ஆபத்தானவர் தளபதி.. அனலாக வெடித்த திருமாவளவன்
தமிழ்நாட்டை குறிவைத்து விட்டார்கள் என்றும் ஆனால் கலைஞரை விட ஆபத்தானவர் தளபதி என்றும் திருமாவளவன் கூறினார்
சென்னை: தமிழ்நாட்டை குறிவைத்து விட்டார்கள் என்றும் ஆனால் கலைஞரை விட ஆபத்தானவர் தளபதி என்றும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாளில் அனல் பறக்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேசி உள்ளார்.
திருமாவளவன் பேசுகையில், "அரசியல்வாதிகளிலேயே மிகச்சிறந்த நடிகர் விருது கொடுக்கலாம் என்றால், உலக அளவில் அந்த விருதினை பிரதமர் நரேந்திர மோடிக்கு கொடுக்கலாம். ஏனெனில் அப்படி பேசிக்காட்டக்கூடிய, மக்களிடம் நடித்துக்காட்டக்கூடிய மிகப்பெரிய நடிகர் பிரதமர் மோடி.
முன்பு கலைஞர் எம்ஜிஆரைத்தான் எத்தன் மகாதிலகம் என்பார். இப்போது எத்தன் மகாதிலகம் என்றால் அது நரேந்திர மோடி. நல்லவரை போல் நடித்துக்காட்டக்கூடிய ஆற்றல் மிகுந்தவர் மோடி. நீங்கள் வரலாற்றை பார்த்தால் எல்லா இடங்களில் பாஜக சமூக பதற்றத்தை உருவாக்குவதையே யுக்தியாக கையாள்கிறார்கள்.

தவறு இழைத்துவிட்டேன்
தமிழ்நாட்டை குறிவைத்துவிட்டார்கள். கலைஞர் இருந்தவரை வாலாட்டவில்லை. ஜெயலலிதா அம்மாவையும் இந்த இடத்தில் நாம் நினைவுகூர்ந்துதான் ஆக வேண்டும். 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது திமுகவை எதிர்த்து பிரச்சாரம் செய்து கொண்டிந்த ஜெயலலிதா, ஒரு கட்டத்திற்கு மேல்,பிரதமர் மோடியை விட்டுவிட்டார், மோடியை கடுமையாக சாடிப்பேசினார். மோடியா லேடியா மோதிப்பார்க்கலாம் வா என்று எதிர்ப்பு தெரிவித்தவர் ஜெயலலிதா. அப்போது ஜெயலலிதா கூறும் போது, என் வாழ்நாளில் ஒரு தவறு இழைத்துவிட்டேன், ஒரு குற்றம் இழைத்துவிட்டேன். அதை ஒப்புக்கொள்கிற துணிச்சல் எனக்கு இருக்கிறது. அதற்காக வருந்துகிறேன். அந்த குற்றத்தை இழைத்தற்கு பரிகாரமாகத்தான், 13 மாதங்களில் நான் வாஜ்பாய் ஆட்சியை கவிழ்த்தேன். இனி எந்த காலத்திலும் அதிமுக பாஜகவோடு கூட்டணி வைத்துக்கொள்ளவே வைத்துக்கொள்ளாது என்று சொன்னவர் ஜெயலலிதா அம்மையார்.

பாஜகவை சுமக்கிறார்
எடப்பாடி அவர்கள் இதையெல்லாம் மறந்து போயிருப்பார். பாஜகவை தோளில் தூக்கி சுமக்கிறார். ஒரு பெரும் சமூகத்திற்கு துரோகம் செய்கிறார். பெரும் கேட்டை கொண்டு வந்து இங்கு சிவப்பு கம்பளம் விரித்து கால் ஊன்றுவதற்கு வழிவகுக்கிறார். இது திமுகவிற்கு எதிரானதாக அவர் நினைக்கலாம். அல்லது தன் மீது சிபிஐ வழக்கு போட்டுவிடக்கூடாது என்பதற்காகவு தன்னை தற்காத்துக்கொள்ளலாம் பாஜகவை சுமக்கலாம். ஆனால் அப்படி செய்வது தமிழ் சமூகத்திற்கு மிகப்பெரும் துரோகம்.

கலைஞரைவிட ஆபத்தானவர்
அதிமுக இல்லாவிட்டால் பாஜகவினர் வாயையே திறக்கமாட்டார்கள். வாலாட்ட மாட்டார்கள். அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காலத்தில் பாஜகவினர் ஊடுருவி உள்ளனர். பயப்பட்டுவிடக்கூடிய சாதாரணமான கட்சி திமுக, தலைவர் தளபதி என்று கணக்கு போட்டு பார்க்கிறார்கள்.ஆனால் எதையும் செய்யக்கூடிய ஆற்றல் தளபதிக்கு உண்டு. அவர் அண்ணாவோடு இருந்திருக்கிறார். பெரியாரோடும் இருந்திருக்கிறார். கலைஞரின் மடியில் தவழ்ந்து அரசியல் கற்று இருக்கிறார். எல்லா உத்திகளும் கலைஞரிடம் இருந்து கற்றுக்கொண்டவர். அதனால் தான் ஹெச் ராஜா சொன்னார். கலைஞரை விட ஆபத்தானவர் நமது தளபதி என்று.. இதுதான் நற்சான்றிதழ், தளபதிக்கு தந்திருக்கிற சான்றிதழ்களிலேயே இந்த சனாதனவாதிகள் தருகின்ற சான்றுதான் சிறப்பானது. ஆபத்தானவர் தான், சனாதன சக்திகளுக்கு ஆபத்தானவர் தான். அதனால் தான் அவர் தனது பிறந்த நாளில் பேசிய உரை, இந்தியா முழுவதும் விவாதிக்ககூடியதாக மாறி இருக்கிறது. ஜனநாயக சக்திகள் அனைவரும் அதை உயர்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

மூன்றாவது அணி
நான் அதை எதிர்பார்க்கவில்லை. தளபதி அவர்களின் பிறந்த நாள் விழா பேச்சில் இவ்வளவு உறுதிப்பாடும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. தேர்தல் வருவதற்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில், ஒட்டுமொத்த இந்திய தேசத்திற்கே வழிகாட்டக்கூடிய வகையில், முற்போக்கு சக்திகளுக்கு ஜனநாயக சக்திகளுக்கும் அறைகூவல் விடுக்கின்ற வகையில், ஆழ்ந்த தெளிந்த உரை. இதை செய்யக்கூடாது, இதைத்தான் செய்ய வேண்டும். மூன்றாவது அணி வெற்றி பெறாது. காங்கிரஸ் இல்லாமல் எந்த முயற்சி எடுத்தாலும் அது வெற்றி பெறாது.

சனாதான சக்திகள்
இப்படி சொல்வதால் காங்கிரஸிடம் இருந்து திமுகவிற்கு எந்த பயனும் இல்லை. நாட்டின் மீது உள்ள அக்கறையால் நம்முடைய தளபதி அவர்கள் பேசுகிறார்கள். மக்கள் மீது அக்கறையால் பேசுகிறார்கள்.அதனால் ஏற்படும் பின்விளைவுகளை பற்றி கவலைப்படவில்லை. எவ்வளவு பேர் ஆதரவு தருவார்கள் என்பதை பற்றி கவலைப்படவில்லை. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று சொல்கின்ற துணிச்சல் உள்ளவராக இருக்கிறார். எதற்காக சொல்கிறார். சனாதான சக்திகள் வலிமை பெற்றுவிடக்கூடாது. ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லியிருக்கிறார்.

அரசியல் உத்தி
பாஜகவினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன தீமைகள் இருக்கிறதும் அவ்வளவும் இங்கே வந்து குவியும். பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி இங்கு வந்து போன பிறகு பாஜகவினர் இப்பபடி பதிவு செய்கிறார்கள், தமிழ்நாட்டில் பீகாரிகள் தாக்கப்படுகிறார்கள். வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அங்கேபோய் தமிழ்நாட்டு முதலமைச்சருக்கு தேஜஸ்வி வாழ்த்து தெரிவிக்கிறார். அது வெறும் பீகார் அரசியல் அல்ல. எல்லா எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும் என்று அறைகூவல் விடுத்த நிலையில், நாம் சேர்ந்துவிடக்கூடாது என்று தடுப்பதற்கான அரசியல் உத்தி" இவ்வாறு திருமாளவன் அனல் பறக்க பேசினார்.












Click it and Unblock the Notifications