செங்கல்பட்டு சம்பவம் தெரியுமா.. நிலம் உட்பிரிவு செய்த ஆவணம் காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும்?
சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா சிறுதாவூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவர் அந்த பகுதியில் உள்ள ஒரு நிலத்தை உட்பிரிவு செய்தது சம்பந்தமான கோப்புகளின் நகலை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ப்பித்துள்ளார். ஆனால் குறிப்பிட்ட புல எண்ணுக்கு உட்பிரிவு செய்ததற்கான கோப்பு அலுவலக பதிவறையில் இல்லை.. ஆவணங்கள் மாயமாகி உள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை அலுவலர் மீது எடுக்குமாறு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகா சிறுதாவூர் பகுதியில் ஆனந்தன் என்பவர் வசித்து வருகிறார். அவர் வசித்து வரும் பகுதியில் உள்ள ஒரு நிலத்தை உட்பிரிவு செய்தது சம்பந்தமான கோப்புகளின் நகலை வாங்க விரும்பியுள்ளார். அதனை வழங்கக்கோரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டு பொதுத்தகவல் அலுவலரான செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாசில்தார் அலுவலகத்தின் தலைமையிடத்து துணை தாசில்தாருக்கு விண்ணப்பித்தார்.

ஆனால், அவருக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் தகவல் வழங்கப்படவில்லை. இதனால் அவர், சென்னையில் உள்ள மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனுவை தலைமை தகவல் ஆணையர் முகமது ஷகீல் அக்தர் விசாரித்தார். அப்போது மனுதாரர் கோரிய புல எண்ணுக்கு உட்பிரிவு செய்ததற்கான கோப்பு அலுவலக பதிவறையில் இல்லை என பதிவுறு எழுத்தர் தெரிவித்ததாக பொது அதிகார அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும், இந்த கோப்பு 9.10.2024 அன்று தலைமையிடத்து துணை தாசில்தாரால் பெற்றுக்கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும் பதிவறையில் ஒப்படைக்கப்படவில்லை என்று பதிவறை எழுத்தர் என அளித்த கடிதத்தை மேல்முறையீட்டு அலுவலரான வட்ட துணை ஆய்வாளர் சமர்ப்பித்துள்ளார்.
இதையடுத்து மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம், 'மனுதாரர் கோரிய புல எண்களுக்கான பட்டா உட்பிரிவு செய்ததற்கான கோப்பு காணாமல் போனதற்கு பொறுப்பான அலுவலர் யார்? என்பதை கண்டறிந்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுகுறித்த அறிக்கையை அடுத்த மாதம் (நவம்பர்) 6-ந் தேதி சமர்ப்பிக்க வேண்டும்' என உத்தரவிட்டிருக்கிறது.
நிலம் உட்பிரிவு செய்த ஆவணம் காணாமல் போனால் என்ன செய்ய வேண்டும்
பொதுவாக நிலத்தின் உட்பிரிவு தொடர்பான கோப்பு வருவாய்த் துறை அலுவலகத்தில் இல்லை என்றால், அதாவது காணமால் போயிருந்தால் உங்கள் பெயரில் புதிய பட்டா வாங்குவது மிக கடினமானது ஆகும். வருவாய்த் துறையிடம் கோப்பு இல்லாவிட்டாலும், உங்கள் நிலம் முறையாகப் பிரிக்கப்பட்டது என்பதை நிரூபிக்கும் அதிகாரப்பூர்வ ஆவணங்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதேநேரம் நில அளவைத் துறை அலுவலகத்தில் இருந்து பெறப்பட்ட FMB வரைபடத்தில், உங்கள் நிலத்தின் புதிய உட்பிரிவு எண் தெளிவாகக் குறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதுவே உட்பிரிவு நடந்ததற்கான மிக வலிமையான ஆதாரம் ஆகும். அதேபோல் புதிய உட்பிரிவு எண்ணுக்கு நீங்கள் நில வரி செலுத்தியதற்கான பழைய ரசீதுகள் இருந்தால், அதுவே வருவாய்த் துறையின் பதிவேட்டில் உங்கள் நிலம் உட்பிரிவு செய்யப்பட்டது என்பதை நிரூபிக்கப் போதுமானது ஆகும்.
இறுதியாக தொலைந்த சான்றிதழை தீவிரமாக தேட வேண்டும். ஒருவேளை ஆவணத்தை தேடுவதற்கு வட்டாட்சியர் அலுவலகம் ஒத்துழைக்கவில்லை என்றால், நீங்கள் நில அளவைத் துறைக்குச் சென்று, அளவைப் பதிவேட்டின் (FMB) சான்றளிக்கப்பட்ட நகலை கேட்டுப் பெறலாம். இந்த நகலை வைத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா மாற்றத்துக்கு விண்ணப்பிக்க முடியும். இறுதியாக, உட்பிரிவுக் கோப்பு தொலைந்தாலும், நில அளவைப் பதிவேட்டில் (FMB) உங்கள் புதிய எண் பதிவாகி, அதற்கான வரி நீங்கள் செலுத்தி இருந்தால், புதிய பட்டா வாங்கிவிட முடியும்.












Click it and Unblock the Notifications