TN Budget 2024: டிரெய்லரிலேயே கலக்கிய தங்கம் தென்னரசு! மெயின் பிக்சரில் கோட்டை விடுவாரா என்ன?
சென்னை: தமிழக சட்டசபையில் இன்றைய தினம் முழு பட்ஜெட்டை நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவால் தாக்கல் செய்யப்படும் நிலையில் அவர் கடந்த ஆண்டு தாக்கல் செய்த துணை நிலை பட்ஜெட்டில் இடம் பெற்றவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் அமைச்சரவை ஏற்படுத்திய போது நிதித் துறை, மருத்துவத் துறை, மின்சார துறை, பொதுப் பணித் துறை, உள்ளாட்சி, போக்குவரத்துத் துறை, வணிகத் துறை உள்ளிட்டவை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

காவல் துறையை பொருத்தமட்டில் முதல்வரே சேர்த்து கவனித்துக் கொள்வார் என்பது தெரிந்த விஷயம்தான். இந்த நிலையில் நிதித் துறை அமைச்சராக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் நியமிக்கப்பட்டார். இதனால் பெரும்பாலானோர் மகிழ்ந்தனர்.
அவர் வெளிநாட்டில் பொருளாதாரம் படித்தவர். திட்டமிடுதலில் கெட்டிக்காரர் என்பதால் தமிழகத்தின் பொருளாதாரம் வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் ஏதோ சில காரணங்களுக்காக அவரிடம் இருந்த நிதித் துறை பறிக்கப்பட்டு தங்கம் தென்னரசுவிடம் கொடுக்கப்பட்டது.
பிடிஆருக்கு தகவல் தொழில்நுட்பத் துறை வழங்கப்பட்டது. தங்கம் தென்னரசுவும் திமுக ஆட்சிக் காலத்தில் பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட துறைகளை கவனித்து வந்தார். முதல்வராக கருணாநிதி இருந்த போது அவருடைய அமைச்சரவையில் அவரது அனுபவங்களை பெற்று பணியாற்றியதால் தங்கம் தென்னரசுவும் நிதித் துறை பதவிக்கு சளைத்தவர் அல்ல.
இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான துணை நிலை பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்திருந்தார். யூகித்தது போலவே அந்த துணைநிலை பட்ஜெட்டில் கூட முக்கிய அம்சங்களை அறிவிப்புகளாக செய்தார்.
அதில் முக்கியத்துவம் வாய்ந்தது, அடையாறு கூவம் சீரமைப்பு திட்டம்தான். அட்டல் நகர்ப்புற புத்துணர்வு மற்றும் நகர்ப்புற மாற்றங்களுக்கான இயக்கத்தின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதற்காக மாநில மற்றும் மத்திய அரசின் பங்காக ரூ.893.23 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதற்காக துணை நிலை பட்ஜெட்டில் ரூ.150 கோடியை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை என்பதின் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது. மீதி தொகையை மானியத்தில் ஏற்படும் சேமிப்பில் இருந்து மறு நிதி ஒதுக்கத்தின் கீழ் செலவிடப்படும் என அறிவித்திருந்தார்.
அது போல் அரசு போக்குவரத்து நிறுவனங்களின் ஊழியர்களுக்கு நிலுவை தொகை வழங்குவதற்காக மாநில போக்குவரத்து நிறுவனங்களுக்கு முன் பணமாக ரூ.171.05 கோடி அரசு அனுமதித்துள்ளதாக தங்கம் தெரிவித்திருந்தார். இது போல் வேளாண், கூட்டுறவு, பேரிடர் உள்ளிட்டவைகளுக்கு திட்டங்களை வகுத்திருந்தார்.
இந்த அடையாறு கூவம் திட்டத்தால் தற்போது அடையாறு கூவம் அழகுப்படுத்தும் நிகழ்வு நடந்து வருகிறது. இந்த பாதையில் உள்ள குப்பைகள் தூர்வாரப்பட்டு இயற்கை பேரிடர்களின் போது தண்ணீரை சேமித்து வைக்கும் அளவுக்கு இந்த திட்டத்தை கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட நிலையில் இன்றைய தினம் முதல் முறையாக முழு பட்ஜெட்டை தமிழக சட்டசபையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே துணை நிலை பட்ஜெட்டிலேயே கலக்கிய தங்கம் மெயின் பட்ஜெட்டை கோட்டை விடுவாரா என்ன என்ற கேள்வியுடன் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications