"இனி தான் ஆட்டமே.." தங்கம் விலை எகிற போகுது.. ஆனந்த் சீனிவாசன் சொல்வதை கேளுங்க! எவ்வளவு அதிகரிக்கும்
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகப் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருக்கும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 5,830க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. இது இயல்பாகவே நமக்கு ஒரு கேள்வியை எழுப்பும்.

அதாவது தங்கத்தை இப்போது வாங்கலாமா.. அல்லது காத்திருந்தால் மேலும் குறையுமா என்ற கேள்வி வரும். இதற்கான பதிலைப் பிரபல பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் விளக்கியுள்ளார்.
ஆட்டமே இனிமேல்தான்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "டைட்டன் பங்குகள் விலை இப்போது குறைந்துள்ளது. தங்கம் விலை அதிகரித்துள்ள நிலையில், அதனால் ஏற்பட்ட நன்மைகள் முடிந்துவிட்டதாகவும் இனிமேல் டைட்டன் நிறுவனம் அதன் லாபத்தை மட்டுமே அதிகரிக்க வேண்டும் என்று இப்போது ஒருவர் கூறியிருக்கிறார். ஆனால் அவருக்கு ஒரு விஷயம் தெரியவில்லை. அதாவது தங்கம் விலை அதிகரிப்பது இன்னும் முடியவில்லை. அடுத்த 18 மாதங்களில் தங்கம் விலை ரூ.7500ஐ தொடும். அப்போது தான் வேடிக்கையே இருக்கு" என்றார்.
முன்னதாக அவர் தனது மற்றொரு வீடியோவில் குறைந்தது 200 கிராம் தங்கத்தை அனைத்து குடும்பங்களுக்கும் வைத்திருக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார். முன்பு ஆபத்தான காலத்தில் உதவ ஒவ்வொரு குடும்பமும் 400 கிராம் தங்கத்தை வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியிருந்த நிலையில், இப்போது 200 கிராம் தங்கத்தைச் சேர்த்தாலே போதும் எனக் கூறியுள்ளார். மேலும், அதற்கான காரணத்தையும் அவர் விளக்கியுள்ளார்.
200 கிராம்: இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் முன்பு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 400 கிராம் தங்கம் தேவை எனச் சொல்லி இருந்தேன். ஆனால், அப்போது தங்கம் விலை 4000 ரூபாய்க்கு இருந்தது. இப்போது விலை எல்லாம் ஏறிவிட்டது. எனவே, 200 கிராம் தங்கத்தை வாங்கி சேமியுங்கள்.. ஆனால் இந்த வாய்ப்பையும் விட்டால் இதுக்கு மேல் கஷ்டம் தான்.. ஏனென்றால் வரும் காலங்களில் இது மேலும் அதிகரிக்கும்" என்று கூறியிருந்தார்.
தங்கம் விலை உயர்வுக்கும் அமெரிக்க வட்டி விகிதத்திற்கும் நேரடியாகவே தொடர்பு இருக்கிறது. அமெரிக்க வட்டி விகிதம் அதிகரித்தால் தங்கம் விலை கட்டுக்குள் இருக்கும். அதேநேரம் அங்கே வட்டியைக் குறைத்தால் தங்கம் விலை அதிகரிக்கும். அமெரிக்காவைப் பொறுத்தவரை அந்நாட்டு மத்திய வங்கி விலைவாசியைக் கட்டுப்படுத்த வட்டி விகிதத்தை உயர்த்தி இருந்தது. இப்போது விலைவாசி கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ள நிலையில், வட்டி விகிதத்தைக் குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறார்கள்.
காரணம்: இந்தாண்டு இறுதியில் அமெரிக்காவில் மத்திய வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி அவர்கள் அங்கே வட்டி விகிதத்தைக் குறைத்தால் தங்கம் விலை மளமளவென அதிகரிக்க ஆரம்பித்துவிடும். இதன் காரணமாகவே தங்கத்தை இப்போது வாங்குவது சரியாக இருக்கும் என்று வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இது ஒரு செய்தி மட்டுமே. இதை நிச்சயமாக முதலீடு ஆலோசனையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. முதலீடு செய்வதற்கு முன்பு உங்கள் பொருளாதார ஆலோசகரிடம் உரிய ஆலோசனை கேட்ட பிறகு உங்களுக்கு ஏற்ற முடிவை எடுக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications