இந்த ரவுண்டு ஓவர்.. அடுத்து மழை எப்போது தொடங்கும்? புயலாக மாறுமா காற்றழுத்தம்? வெதர்மேன் விளக்கம்
சென்னை: மாண்டஸ் புயல் இப்போது தான் கரையைக் கடந்துள்ள நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான், அடுத்த சில நாட்கள் வறண்ட வானிலையே இருக்கும் என்றும் அடுத்து எப்போது மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.
வடகிழக்கு பருவமழை தொடங்கி ஒரு மாதத்திற்கு மேலாக எந்தவொரு புயலும் உருவாகாமலேயே இருந்தது. அதேபோல தமிழ்நாட்டில் பல இடங்களில் எதிர்பார்த்த அளவுக்குப் பருவ மழை இல்லாமல் இருந்தது.
இந்தச் சூழலில் தான் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுவடைந்து மாண்டஸ் புயலாக உருவெடுத்தது. இது தீவிர புயலாக சில மணி நேரம் வலுப்பெற்ற போதிலும், கரையைக் கடக்கும் முன்பே மீண்டும் சாதாரண புயலாக வலுவிழந்தது.

மாண்டஸ் புயல்
இந்த புயல் சென்னைக்கும் புதுவைக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகில் கரையைக் கடந்தது. சென்னைக்கும் புதுவைக்கும் இடையே கரையைக் கடக்கும் 13வது புயல் இந்த மாண்டஸ் புயலாகும். இந்த புயல் கரையைக் கடக்கும் போது, சென்னை, மாமல்லபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. சூறாவளிக் காற்றுடன் சில மணி நேரம் கனமழை வைத்துச் செய்துவிட்டது. புயல் கரையைக் கடந்த பின்னரே சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சற்று குறைந்தது.

அடுத்து எப்போது
கரையைக் கடந்த உடன் மாண்டஸ் புயல் வலுவிழந்துவிட்டது. இருந்த போதிலும், புல் எபக்ட் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் இன்னுமே கூட மழை பெய்து வருகிறது. இப்படித் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் பொதுமக்களும் கூட ரொம்பவே மகிழ்ச்சியில் உள்ளனர்.

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்
அதேநேரம் மழை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து குறைந்தே வருகிறது. அடுத்து காற்றழுத்தம் எப்போது உருவாகும். அதன் மூலம் எந்தளவுக்கு மழை பெய்யும் என்பதில் மக்கள் ஆர்வமாகவே உள்ளனர். அடுத்து டிசம்பர் 16, 17ஆம் தேதிகளில் காற்றழுத்தம் உருவாக வாய்ப்புள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்.. அடுத்து எப்போது மழை பெய்யும்.. அடுத்த காற்றழுத்தம் புயலாக வலுப்பெறுமா என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.

வறண்ட வானிலை
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில், "மேற்கு தமிழகம், உள் மாவட்ட தமிழகம், டெல்டா பகுதிகள் (தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர்), திண்டுக்கல், மதுரை ஆகிய இடங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல் தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை மேலும் குறையும்... மேலும், ஈரப்பதம் இழுத்துச் செல்லப்பட்டு, டிசம்பர் 14 முதல் அடுத்த 5 நாட்களுக்கு உயர் காற்றழுத்தம் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயலாக மாறுமா
இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வரும் டிசம்பர் 18 வரை வறண்ட வானிலையே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து டிசம்பர் 19ஆம் தேதி தான் தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும். தற்போதைய சூழலை வைத்துப் பார்க்கும் போது, அடுத்து உருவாகும் காற்றழுத்தம் (டிசம்பர் 16/17க்குள் உருவாகும்) மாண்டஸ் போன்ற புயலாக மாறுவதற்கான வாய்ப்புகள் குறைவு" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

வானிலை மையம்
முன்னதாக சென்னை வானிலை ஆய்வு மையம் மழை தொடர்பான முன்னறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில் இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டிருந்தது அதேநேரம், நாளை முதல் வரும் 17ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மட்டுமே லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டிருந்தது.

சென்னை
தலைநகர் சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. நாளை லட்ச தீவு பகுதிகள், கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications