"சின்ன பிரேக்.." தமிழகத்தில் அடுத்த 5 நாட்கள் வானிலை எப்படி! ஒரே போட்டோ.. நறுக்கென சொன்ன வெதர்மேன்
சென்னை: மாண்டஸ் புயல் கடந்த வாரம் தான் கரையைக் கடந்தது. இதற்கிடையே அடுத்த ஒரு வாரத்திற்கு மாநிலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்
பொதுவாகவே தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலத்தில் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களும் வடகிழக்கு பருவமழையால் வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களில் அதிகம் மழை இருக்கும்.
தென்மேற்கு பருவமழை காலத்தில் தமிழ்நாட்டிற்கு ஓரளவுக்கு மழை பெய்தது. இந்தச் சூழலில் தான் கடந்த அக். மாதம் இறுதியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை மையம் அறிவித்தது.

பருவமழை
இருப்பினும், முதல் ஒரு மாதம் வடகிழக்கு பருவமழை அமைதியாகவே இருந்தது. நவ. முதல் வாரத்தில் சென்னையில் கனமழை வெளுத்து வாங்கியது.. இருப்பினும், அதன் பிறகு அமைதியாகவே இருந்தது. இடையில் வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தமும் மிக மெதுவாகக் கரையை நோக்கி நகர்ந்ததால் அது பெரியளவில் மழையைத் தரவில்லை. இந்தச் சூழலில் தான் கடந்த டிச. முதல் வாரம் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுவடைந்து மாண்டஸ் புயலாக உருவெடுத்தது.

மாண்டஸ்
இந்த மாண்டஸ் புயல் தீவிர புயலாகவும் கூட வலுப்பெற்றது. இருப்பினும், சில மணி நேரங்களில் அது மீண்டும் வலுவிழந்து கரையைக் கடக்கும் முன்பே மீண்டும் சாதாரண புயலாக இருந்தது. சென்னைக்கும் புதுவைக்கும் இடையே மாமல்லபுரத்திற்கு அருகில் கடந்த 10ஆம் தேதி கரையைக் கடைந்தது. சென்னை- புதுவை இடையே 13ஆவது புயலாக இந்த மாண்டஸ் புயல் கரையைக் கடந்துள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை வைத்துச் செய்தது. கரையைக் கடக்கும் போது, அதிகபட்சம் 80 கிமீ வரை சூறாவளிக் காற்றும் வீசியது. இதனால் நகரில் பல இடங்களில் மரங்களும் விழுந்தது.

வரும் நாட்கள்
இருப்பினும், நல்வாய்ப்பாகத் தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும், இந்த புயல் வர்தா அளவுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தாததாலும் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை. பெரும்பாலான இடங்களில் மின் இணைப்பும் மிக விரைவில் சரி செய்யப்பட்டது. புயல் கரையைக் கடந்த பின்னரே மழை சற்று குறைந்தது. மாண்டஸ் கரையைக் கடந்த உடனே வலுவிழந்த போதிலும், புல் எபக்ட் காரணமாகத் தமிழ்நாட்டில் கணிசமான இடங்களில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்தது. இப்போது தான் மாநிலத்தில் மழை சற்றே ஓய்ந்துள்ளது.

தமிழ்நாடு வெதர்மேன் நறுக் ட்வீட்
இதற்கிடையே வரும் நாட்களில் மழை எப்படி இருக்கும் என்பது குறித்து நகைச்சுவையாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இப்போது 5 நாட்கள் பிரேக் இருப்பதாகவும் அடுத்த வாரம் ப்ரோமோ (மழை) தொடங்கும் என்பதைப் போல அவர் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாகச் சிவாஜி கனேசன்- பத்மினி நடிப்பில் வெளியான தில்லானா மோகனாம்பாள் படத்தில் இருந்து மீம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார். அதில் வரும் 20-20 தேதிகளில் தமிழ்நாட்டில் கணிசமான மழை இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை மையம்
முன்னதாக வானிலை தொடர்பாகச் சென்னை வானிலை மையம் எச்சரிக்கை வெளியிட்டிருந்தது. அதில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை முதல் டிச. 18 வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் டிச. 19ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும், தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications