அடுத்த ரவுண்ட் ஸ்டார்ட்.. தமிழ்நாட்டில் மீண்டும் எப்போது மழை தொடங்கும்.. சென்னை வானிலை மையம்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காரணமாகக் கடந்த மாதம் ஓரளவுக்கு நல்ல மழை பெய்து வந்தது. இந்தச் சூழலில் வரும் நாட்களில் தமிழ்நாட்டில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் எப்போதும் தென் மற்றும் மேற்கு மாவட்டங்களுக்குத் தென்மேற்கு பருவமழை காலத்திலும்.. வடக்கு மற்றும் கிழக்கு மாவட்டங்களுக்கு வடகிழக்கு பருவமழை காலத்திலும் மழை கிடைக்கும்.
இதில் தமிழ்நாட்டிற்குத் தென்மேற்கு பருவமழை காலத்தில் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் ஓரளவுக்கு நல்ல மழை கிடைத்தது. வடகிழக்கு பருவமழை கடந்த அக். மாதம் இறுதியில் தொடங்கியது.

பருவமழை
முதல் ஒரு மாதம் வடகிழக்கு பருவமழையால் பெரியளவுக்கு மழை இல்லை. சென்னை உட்பட சில வட மாவட்டங்களில் மட்டுமே ஆரம்பத்தில் நல்ல மழை பெய்தது. அதன் பிறகு அங்குப் பெரியளவில் மழை எதுவும் இல்லாமலேயே இருந்தது. இருப்பினும், டிச. மாதம் நல்ல மழை இருந்தது. அப்போது உருவான மாண்டஸ் புயலாகத் தமிழ்நாட்டில் பரவலான இடங்களில் மழை கொடுத்தது. இதன் காரணமாகக் கடந்த டிசம்பர் மாதம் வடகிழக்கு பருவமழையால் நல்ல மழை கிடைத்தது.

வானிலை
அதன் பிறகு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவியது. இந்தச் சூழலில் வரும் நாட்களில் வானிலை எப்படியிருக்கும் என்பது குறித்த தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

மழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வரும் ஜன.3 முதல் ஜன.5 வரையிலான தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேநேரம் உள் மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பெரியளவில் எங்கும் மழை பெய்யவில்லை. அதேபோல வரும் நாட்களில் மீனவர்களுக்கான எச்சரிக்கையும் எதுவும் இல்லை.












Click it and Unblock the Notifications