சுளீர் வெயிலுக்கு இனி ரெஸ்ட்..தென்மேற்கு பருவமழை எப்போது? வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்
சென்னை: தென்மேற்கு பருவமழை தெற்கு அரபிக்கடலின் மேலும் சில பகுதிகள், மாலத்தீவுகள், லட்சத்தீவு பகுதிகள், குமரி முனை பகுதி மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் தொடங்கியிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. சுள்ளென்று அடிக்கும் வெயிலுக்கு இனி ரெஸ்ட் கொடுத்து விட்டு ஜில்லென்று மழை பெய்ய ஆரம்பிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் நல்ல செய்தி சொல்லியுள்ளது.
தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கி செப்டம்பர் வரை 4 மாதங்கள் வரை பெய்யும். தென்மேற்கு பருவ மழையின் மூலம் தமிழகத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்கள் மழை பொழிவை பெறும். மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் பெய்யும் மழையின் மூலம் குற்றால அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டும். ஆறுகள் உயிர்பெறும்.

தற்போது சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடுமையான வெயில் சுட்டெரித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் 110 டிகிரி பாரன்ஹீட்டிற்கு மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவ மழை எப்போது தொடங்கும் என்ற தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
நாட்டிற்கு பெரும் மழை பொழிவை கொடுக்கும் தென்மேற்கு பருவமழை ஜூன் 4ஆம் தேதியான நாளைய தினம் தொடங்கவுள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதியின் நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் மழை, கடுமையான கோடைக் காலத்திற்கு பிறகு பொழியும் மழை என பல்வேறு சிறப்புகளை கொண்டது தென்மேற்கு பருவமழை.
ஆண்டுதோறும் ஜூன் 1ஆம் தேதி தொடங்க வேண்டிய தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்க உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என இந்திய வானிலை மையம் நேற்று அறிவித்திருந்தது. தமிழ் நாட்டில் தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கேரளா மற்றும் கர்நாடாகாவில் நாளை தொடங்கினாலும் தமிழத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்க சில நாட்கள் ஆகும்.
ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகம் அதன் ஆண்டு மழையில் கிட்டத்தட்ட 35% மழையை இந்த தென்மேற்கு பருவமழையின் மூலம் பெற்று வருகிறது.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இன்றைய காலை முன்னறிவிப்பில், தென்மேற்கு பருவமழை தெற்கு அரபிக்கடலின் மேலும் சில பகுதிகள், மாலத்தீவுகள், லட்சத்தீவு பகுதிகள், குமரி முனை பகுதி மற்றும் தெற்கு மற்றும் கிழக்கு-மத்திய வங்கக் கடல் பகுதியில் தொடங்கியிருப்பதை உறுதி செய்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை குறித்து பேசியுள்ள திருவனந்தபுரம் வானிலை மைய அதிகாரிகள், கேரளாவில் இந்த வார இறுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்றும் அதன்பிறகு பொதுவாக பருவக்காற்று தமிழகத்தை நோக்கி முன்னேற சில நாட்கள் ஆகும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே தமிழகத்தில் பருவமழை ஜூன் 10 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தென்மேற்கு பருவமழை அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்களில் வங்காள விரிகுடாவின் சில பகுதிகளிலும், மாலத்தீவு மற்றும் கன்னியாகுமரி பகுதிகளிலும் மேலும் முன்னேற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடமேற்கு இந்தியா முழுவதும் உருவாகும் ஒரு புதிய வெப்ப மண்டல புயல் வியாழக்கிழமை வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது.
இந்த வெப்ப மண்டல புயலால் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இமாச்சலப் பிரதேசத்தில் மிதமான மழை மற்றும் இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று வீசும் என்றும் ஆலங்கட்டி மழையும் பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் கூறியுள்ளது. மேலும் உத்தரகாண்ட் மாநிலத்தில் வெள்ளிக்கிழமை வரை ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் ராஜஸ்தானில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த வெப்ப மண்டல புயலால் அடுத்த ஐந்து நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications