விஜய்யின் "லியோ" படத்திற்கு.. அதிகாலை காட்சிகள் இல்லை! முதல் காட்சி எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ சிறப்புக் காட்சிகள் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத் என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு விஜய்- லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ள நிலையில் இதற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அதுவும் "விக்ரம்" என்ற மெகா ஹிட் படத்திற்குப் பிறகு வெளியாகும் லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
லியோ: ஏற்கனவே இந்தப் படத்தின் டிரைலர் வெளியான நிலையில், அதற்கு மிகவும் பாசிட்டிவான ஒரு வரவேற்பு கிடைத்தது. டிரைலர் வெளியாகி சில மணி நேரத்திலேயே பார்வைகளில் புது சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் வரும் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. வெளிநாடுகளில் இத்திரைப்படத்திற்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. அங்கே ஏற்கனவே லியோ புதிய சாதனையைப் படைத்துவிட்டது.
பொதுவாக உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு அதிகாலையில் சிறப்புக் காட்சிகள் இருக்கும். இருப்பினும், கடந்த தீபாவளி சமயத்தில் சிறப்புக் காட்சி திரையிட்ட போது அதில் சில மோசமான சம்பவங்கள் நடந்தன. இதன் காரணமாகவே அதன் பின் வெளியான ஜெயிலர் திரைப்படத்திற்குக் கூட அதிகாலை சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி தரப்படவில்லை. இருப்பினும், லியோ விடுமுறை நாட்களில் வரும் நிலையில், சிறப்புக் காட்சிகளுக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
சிறப்புக் காட்சி: லியோ திரைப்படத்திற்குச் சிறப்புக் காட்சிகள் திரையிட அனுமதி தர வேண்டும் எனத் தயாரிப்பாளர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. முதல் நாளான அக். 19ஆம் தேதி அதிகாலை காட்சி, 7 மணிக்கு மற்றொரு காட்சி என இரு சிறப்புக் காட்சிகளுக்கு 6 காட்சிகளுக்கு அனுமதி கோரப்பட்டிருந்தது. அதேபோல விடுமுறை நாட்களான அக்.20 முதல் அக். 24 வரையிலான நாட்களுக்கு 5 காட்சிகளுக்கு அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்று லியோ திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி தரப்பட்டது.
மொத்தம் 6 நாள்களுக்கு, அதாவது அக். 19 முதல் 24 வரையிலான நாட்களில் தினசரி 5 காட்சிகள் திரையிட அனுமதி தரப்பட்டது. சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைத்த நிலையில், முதல் காட்சி எப்போது என்பது குறித்து பலருக்கும் கேள்வி எழுந்தது. காலை 5 மணிக்கு முதல் காட்சி தொடங்கும் எனச் சிலர் கூறிய நிலையில், அது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. ஏனென்றால் கடந்த தீபாவளி சமயத்தில் சிறப்புக் காட்சியின் போது மோசமான சம்பவம் நடந்தது.
முதல் காட்சி: இதனால் அதிகாலை காட்சிக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கிடையே விஜய் நடிப்பில் வெளியாகும் லியோ சிறப்புக் காட்சிகள் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது லியோ திரைப்படத்திற்கான முதல் காட்சியைக் காலை 9 மணிக்குத் தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், படத்தின் இறுதி காட்சியை நள்ளிரவு 1.30 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், அனுமதியின்றி சிறப்புக் காட்சிகளைத் திரையிடும் தியேட்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications