மின்சார வாரிய ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு எப்போது? வரப்போகும் இரண்டு நல்ல செய்தி
சென்னை: மின்சார வாரியத்தில் ஊதிய உயர்வு மற்றும் புதிதாக ஆட்கள் தேர்வு எப்போது என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று பேசினார்கள். இந்த விவகாரத்தில் நல்ல தகவல்களை அரசு பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
மின்வாரிய ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதுபற்றி அப்போது மின்வாரிய அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி கூறும் போது, மின் வாரிய ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு 1.12.2019 நாளன்று பெறுகின்ற ஊதியத்தில் 6 சதவீதம் ஊதிய உயர்வு, நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1.12.2019ம் நாளன்று, பத்து வருடங்கள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கும் பணிப்பலனாக 1.12.2019 நாளன்று பெறும் ஊதியத்தில் 3 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும். இது நிர்வாகத்தின் சார்பிலும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் சார்பிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஊதிய உயர்வின் மூலம் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு 527 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். இவ்வூதிய உயர்வின் மூலம் ஏற்படும் நிலுவைத்தொகை, 2019ம் ஆண்டிலிருந்து கொடுக்க வேண்டிய நிலுவைத்தொகை 31.3.2022 வரை,மாதம் ஒன்றுக்கு 500 ரூபாய் வீதம் இரண்டு தவணைகளாகவும், 1.4.2022 முதல் 31.5.2023 வரை வழங்க வேண்டிய நிலுவைத்தொகை இரண்டு தவணைகளாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.623 கோடி வாரியத்திற்கு செலவுகள் ஏற்படும். இந்த ஊதிய உயர்வு மூலம் பயன்பெறக்கூடிய பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை 75,978. 10 வருடங்கள் பணிமுடித்த ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு பணிப்பலனாக 3 சதவீதம் பெறும் பணியாளர்களின் எண்ணிக்கை, 62,5483" இவ்வாறு செந்தில் பாலாஜி அப்போது கூறியிருந்தார். இந்நிலையில் மின்சார வாரிய ஊழியர்களுக்கு நவம்பரில் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் மின்சார வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானியுடன், மின்சார வாரியத்தில் உள்ள தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 1ம் தேதியான நேற்று பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி உள்ளார்கள். இதில் என்ஜினியர்ஸ் யூனியன் பொதுச்செயலாளர் ஆர்.கோவிந்தராஜன், தொழிலாளர் முன்னேற்ற சங்கம், பொதுச்செயலாளர் மணிமாறன், ஐக்கிய சங்கம் பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தை குறித்து தொழிற்சங்க வட்டாரங்கள் கூறுகையில், 'தொழிற்சங்கம் சார்பில் வழங்கப்பட்ட 13 கோரிக்கைகளும் அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. குறிப்பாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை வருகிற நவம்பர், டிசம்பருக்கு மேல் தொடங்க உள்ளது. ஊதிய உயர்வு நிலுவைத் தொகை ஆகஸ்டு, செப்டம்பர், அக்டோபரில் 3 மாத தவணைகளில் வழங்கப்பட்டு விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடித்தேர்வு மூலம் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வது குறித்து தமிழக அரசுடன் பேசி ஒரு இறுதிநிலைக்கு வந்துள்ளது. விரைவில், முதல்வர் மூலமாகவோ, துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மூலமாகவோ அறிவிப்பு வெளியாகும் சூழல் இருக்கிறதாம். அதேபோல்
முறைப்பணி பார்க்கக்கூடிய தொழில்நுட்ப உதவியாளர், ஜூனியர் என்ஜினீயர் பதவிகள் உடனடியாக நிரப்பப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
பதவி உயர்வு வழங்குவதில் உள்ள காலதாமதம் தவிர்க்கப்படும் என்றும் விபத்தினால் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி உத்தரவு வழங்கப்படும் கேங்மேன் பணியாளர்களுக்கு இடம் மாறுதல் விரைந்து வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.












Click it and Unblock the Notifications