அனைத்து பேருந்துகளும் எப்போது கிளாம்பாக்கத்தில் இருந்து புறப்படும்? சேகர்பாபு சொன்ன முக்கியமான பதில்
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து முதற்கட்டமாக சில குறிப்பிட்ட பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும் நிலையில், அது முழுமையாக எப்போது செயல்பாட்டிற்கு வரும் என்பது குறித்து அமைச்சர் சேகர்பாபு விளக்கமளித்துள்ளார்.
சென்னை வால் டாக்ஸ் சாலை யானைகவுனி போலீஸ் நிலையம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. அந்த பகுதிகளை இன்று அமைச்சர் சேகர்பாபு, லோக்சபா உறுப்பினர் தயாநிதி மாறன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

அமைச்சர் சேகர்பாபு: தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, "கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு 48 மணி நேரம் தான் ஆகிறது. இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளர்கள் சரியாகத் திட்டமிடாமல் இல்லாமல் இருந்தது. இதை நானே பல முறை சொல்லி இருக்கிறேன். இந்தளவுக்கு அது தாமதமாக அதுவே காரணம். இப்போது கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு 48 மணி நேரம் தான் ஆகிறது.
நேற்றைய தின் நானே அங்குச் சென்று குடிநீர், கழிவறைகளை ஆய்வு செய்தோம். குறிப்பாக அங்கே உள்ள அனைத்து குழாய்களிலும் தண்ணீர் வருகிறதா எனப் பார்த்தோம். அனைத்து குழாய்களும் வேலை செய்கிறது. அனைத்தும் நன்றாகத் தான் உள்ளது.. இதற்கு முன்பு வரை கோயம்பேட்டில் இருந்து தான் இருந்து தென் மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனால் இப்போது கிளாம்பாக்கத்திற்கு பேருந்து சேவை மாற்றப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம்: இருப்பினும், கோயம்பேட்டிலிருந்து முன்பதிவு செய்தவர்கள் அந்த கூடுதல் கட்டணத்தைத் திருப்பி தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்தனர். இதில் முதலில் அவரவர் வங்கிக் கணக்கில் கூடுதல் கட்டணத்தைத் தரலாம் என முடிவு செய்தோம். இருப்பினும், அதில் காலதாமதம் ஏற்படும் என்பதால் பேருந்துகளில் நடத்துநர் மூலமாகவே பயணிகளுக்கு அந்த கூடுதல் தொகை தரப்பட்டது.
இப்போது கிளாம்பாக்கத்திற்கு அனைத்து பகுதியில் இருந்தும் மாநகர பஸ்கள் இயக்கப்படுகிறது. மாநகர பஸ்கள் நிற்கும் இடத்தில் இருந்து கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு சற்று தொலைவில் இருப்பதாகச் சிலர் தெரிவித்தனர். இதற்காக பேட்டரி வாகனம் ஏற்பாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் கூடுதலாக இந்த பேட்டரி வாகனங்களை ஏற்பாடு செய்யவும் துறை செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
மிக விரைவில் இந்த பேருந்து நிலையத்திற்கு எனத் தனியாக பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை நியமிக்க உள்ளோம். இருக்கும் சில குறைகளும் அதிகபட்சம் பொங்கல் பண்டிகைக்குள் தீர்க்கப்படும்.
பராமரிக்க டெண்டர்: கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தைப் பராமரிக்கத் தனியாருக்கு டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. எந்தவொரு பிரச்சினை என்றாலும் ஒருவரைக் கேட்கலாம் என்பதால் இந்த சிங்கிள் விண்டோ சிஸ்டம் அடிப்படையில் ஒரு நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதற்கு முறையாக டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆவணங்களையும் தர தயாராகவே உள்ளோம்.

கிளாம்பாக்கத்தில் தேவையான உணவகம் இருக்கிறது. அதேநேரம் அங்கே அம்மா உணவகம் தேவை என்றால் முதல்வர் கவனத்திற்கு அந்த கோரிக்கையை எடுத்துச் செல்வோம். அது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்போம். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அதைத் தெரிவிக்கலாம். நாங்கள் உரிய நடவடிக்கை எடுப்போம். வெறுமன பேருந்து நிலையம் திறந்தோம் என்று இல்லாமல் தேவையான நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
ஜனவரி மாத இறுதிக்குள்: ஜனவரி மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முழுமையாகச் செயல்படும்.. முழுமையாகச் செயல்படும் போது தினசரி 1 லட்சம் பயணிகள் பயன்படுத்துவார்கள்.. சென்னையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் கிளாம்பாக்கத்திற்கு பேருந்துகள் இயக்கப்படும்.. அனைத்து பகுதியில் உள்ள மக்களும் எளிதாக கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் வரக் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்" என்றார்.











Click it and Unblock the Notifications