பஞ்சாயத்து எல்லாம் ஓவர் ஓவர் முக. அழகிரி மீண்டும் திமுகவில் எப்போது இணைவார்? எகிறும் எதிர்பார்ப்பு
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக வெற்றி பெற்ற உடனேயே மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி குடும்பத்தில் இருந்த மனஸ்தாபங்களும் கரைந்து ஓடிவிட்டன. முதல்ல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்க மூத்தவர் மு.க. அழகிரி வாழ்த்து சொல்வதும் மு.க. அழகிரி குடும்பத்தினர் ஸ்டாலின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதுமாக நெகிழ்வு காட்சிகள் அரங்கேறி உள்ளன. இதனைத் தொடர்ந்து மு.க. அழகிரி திமுகவில் மீண்டும் எப்போது இணைவார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, கடந்த 2014-ம் ஆண்டு திமுகவில் இருந்து நீக்கப்பட்டார். மு.க.ஸ்டாலினுடனான மன வருத்தத்தால் அவர் திமுகவில் இருந்து கருணாநிதியால் நீக்கப்பட்டார்.
இதன்பின்னர் மு.க. அழகிரி கொடுத்த ஒவ்வொரு பேட்டியிலும் திமுக மீது கடும் கோபத்தை கக்கிவந்தார். செய்தியாளர்களை மு.க. அழகிரி சந்தித்து பேசுவது சில நிமிடங்கள் என்பதாக இருந்தாலும் உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையும் ரணமாக இருக்கும். ஆனாலும் திமுக தரப்பில் இருந்து ஒருபோதும் எதிர்வினை வந்தது கிடையாது. அழகிரியின் கருத்துகளை மவுனமாகவே கடந்து சென்றது திமுக.

கலைஞர் திமுக கட்சி
தேர்தல் நேரங்களில் மு.க. அழகிரியின் வியூகம் என்னவாக இருக்கக் கூடும் என்பதெல்லாம் பத்திரிகைகளில் பக்கம் பக்கமாக எழுதப்பட்டவை. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாகவே சட்டசபை தேர்தலை முன்வைத்து மு.க.அழகிரியை மையமாக கொண்டு ஏராளமான செய்திகள் வெளியாகி இருந்தன. ஒரு கட்டத்தில் தமது ஆதரவாளர்களை அழைத்து பேசி கலைஞர் திமுக தொடங்கும் நிலைக்கு கூட சென்றார் மு.க. அழகிரி.

எதுவும் செய்யாதீங்க..
ஆனால் கருணாநிதி குடும்பத்தின் மூத்தவர்கள், 7 ஆண்டுகளாக இடைவிடாமல் அழகிரியை சமாதானப்படுத்தியே வந்தனர். இந்த சமாதான முயற்சிகளுக்கு கைமேல் பலனாக நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலின் போது கனத்த மவுனம் காத்தார் மு.க. அழகிரி. 10 ஆண்டுகளுக்கு பின் திமுகவுக்கு எளிதாக கிடைக்கப் போகும் வெற்றியை கருணாநிதி குடும்பத்தை சேர்ந்த அழகிரி கெடுத்துவிட்டார் என்ற அவப்பெயர் வந்துவிடக் கூடாது என்பதுதான் அவரது உறவுகளின் பெரும் ஏக்கமாகவே இருந்தது.

அழகிரி குடும்பம் மகிழ்ச்சி
இதனால் அழகிரியும் திமுகவுக்கு எதிரான எந்த எதிரிவினையும் காட்டாமல் அமைதி காத்தார். சட்டசபை தேர்தலிலும் திமுக வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. இது மு.க. அழகிரி குடும்பத்தில் பெருமகிழ்ச்சியை ஏற்படுத்தியது. உடனே மு.க.ஸ்டாலினுக்குப் போனை போட்டு வாழ்த்துகள், மகிழ்ச்சி என தெரிவித்துவிட்டு மனம்விட்டு பேசியிருக்கிறார் அழகிரி. அத்துடன் தேர்தலில் வென்ற உதயநிதியை கருணாநிதி மகள் கயல்விழி, மகன் துரைதயாநிதி ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தனர்.

முரசொலியில் அழகிரி செய்தி
மு.க. அழகிரியின் வாழ்த்து செய்தி, முரசொலியிலும் கட்டம் கட்டி வந்தது. முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற நிகழ்ச்சியில் கயல்விழி, துரை தயாநிதி பங்கேற்றனர். துரைதயாநிதியை உதயநிதி ஸ்டாலின் ஆரத்தழுவி வரவேற்றார். இப்போது அழகிரி குடும்பத்தினர் பெருமிதம் பொங்க மனக்சப்புகள் அகன்றது குறித்து பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில்தான் எல்லாம் முடிந்துவிட்டதுதானே.. அழகிரி ஏன் மீண்டும் திமுகவில் சேர்க்கப்படாமல் இருக்கிறார்? என்கிற கேள்விகளும் எழத் தொடங்கிவிட்டன.

காலம் கனிகிறது
இது தொடர்பாக திமுக வட்டாரங்களில் நாம் விசாரித்த போது, கொரோனா பரவல் காலம் முடிவடையட்டும் என அனைவரும் காத்திருக்கிறார்கள்.. அதன்பிறகு நல்ல முடிவு ஒன்று திமுக தொண்டர்களுக்கு காத்திருக்கிறது; அழகிரி ஆதரவாளர்களுக்கும் அது உற்சாகத்தைத் தரும் என கண்சிமிட்டுகின்றனர்.












Click it and Unblock the Notifications