இந்தியாவில் எப்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்?
சென்னை: கொரோனா வைரஸ் பிரச்சினை காரணமாக நாடு முழுக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். லாக்டவுன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மக்கள் மனதில் எழக்கூடிய கேள்வி ,குழந்தைகளின் கல்வி என்னதான் ஆகும் என்பதுதான் .
அதிலும், 2020-21 ஆம் கல்வியாண்டுக்கான பள்ளி எப்போது திறக்கும் என்ற கேள்வி அவர்களைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. எப்போது பள்ளிகள் ஆரம்பிக்கும் ? எப்போது கல்விக்கட்டணம் செலுத்த வேண்டி வருமோ என்ற பதைபதைப்பில் அவர்கள் இருக்கிறார்கள்.
இது தொடர்பாக கர்நாடக துவக்க மற்றும் இரண்டாம் நிலை பள்ளி கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சசிகுமார் கூறுகையில், ஜூலை மாதத்துக்கு முன்பாக பள்ளிகள் திறப்பது சாத்தியமில்லை என்று நினைக்கிறோம். ஒருவேளை ஜூன் மாத இறுதியில் இந்த பிரச்சினைகள் முழுமையாக முடிவுக்கு வந்தாலும், அதன் பிறகும் கூட பள்ளிகள் திறப்பதற்கு குறைந்தபட்சம் ஒரு மாத காலமாவது அவகாசம் தேவைப்படும்.
பாடப்புத்தகங்களை தயார் செய்ய வேண்டும், சீருடைகளை ஏற்பாடு செய்ய வேண்டும், உபகரணங்கள் பலவற்றையும் ரெடி செய்ய வேண்டும். இதற்கெல்லாம் ஒரு மாத காலமாவது அவகாசம் தேவைப்படும். எனவே, ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்படும். இதற்குத்தான் வாய்ப்பு இருக்கிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பெங்களூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ பள்ளிக்கூடம் ஒன்றின் முதல்வர் இதுபற்றி கூறுகையில், லாக்டவுன் நீக்கப்பட்ட உடனே கூட உடனடியாக மாணவர் சேர்க்கையை தொடங்கி விடமுடியாது. 100% பாதுகாப்பான சூழல் நிலவுவதை உறுதி செய்த பிறகு தான் பள்ளிக்கு மாணவர்களை அழைத்து வர முடியும். அதுவரை பள்ளிகளை திறக்க முடியாது. குழந்தைகள் சமூக விலகல் போன்ற விஷயங்களை கடைபிடிப்பது கஷ்டமான விஷயம் என்பதால், இதில் மிகவும் பொறுத்திருந்துதான் முடிவெடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
ஒருவேளை, பள்ளிகள் திறந்தாலும் உடனடியாக குழந்தைகளை அனுப்ப போவதில்லை என்பதும் பல பெற்றோரின் கருத்தாக இருக்கிறது. ஆகஸ்ட், செப்டம்பர் ஆனால் கூட பரவாயில்லை. முழுமையாக , பாதுகாப்பான சூழல் இருந்தால் மட்டும்தான் பள்ளிகளுக்கு எங்கள் குழந்தைகளை அனுப்பி வைப்போம் என்று சொல்கிறார்கள் பல பெற்றோர்கள்.
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தள்ளிப் போய் உள்ளதால் மேற்படிப்புகளும் தள்ளிப்போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.