கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் திறப்பதிலேயே பல சிக்கல்.. அதுக்குள்ள இவ்வளவு போட்டியா? வெளியான தகவல்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க ஆயிக்கணக்கானோர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள்.. இது ஒருபுறம் எனில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை கட்டமைப்பு பணிகள் விறுவிறுப்பாக 70 கோடியில் நடந்து வருகிறது. இதுபற்றி அமைச்சர் சேகர்பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது தெளிவான இல்லை. ஏனெனில் அங்கு பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள், சாலைகள், இணைப்பு சாலைகள், மேம்பாலம், ரயில் நிலையம் என பல வசதிகள் செய்யப்பட வேண்டி உள்ளது. சாதாரண மழைக்கு கூட அதிக தண்ணீர் தேங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.

இந்நிலையில் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி துறை அமைச்சருமான சேகர்பாபுவே, போக்குவரத்து நெரிசல், மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை திட்டமிடப்படாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆட்சியில் வடிவமைத்து கட்டப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளார். அங்கு நடந்து வரும் பணிகள் குறித்தும் விவரித்தார்.
சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், ஸ்டீபன்சன் சாலையில் ரூ.66.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் பேட்டி அளித்தார்.
அப்போது அமைச்சர் சேகர்பாபு கூறுகையில், "சுமார் ரூ.400 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசல், மழைக் காலங்களில் தண்ணீர் தேக்கம், பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ஆகியவை திட்டமிடப்படாமல் இந்தப் பேருந்து நிலையத்தை கடந்த ஆட்சியில் வடிவமைத்துள்ளார்கள்.

தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு, இந்தப் பேருந்து நிலையத்தில் பல்வேறுகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 6 மாத காலங்களில் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பொறுப்பை முதல்வர் எனக்கு அளித்த பிறகு 8 முறை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நேரடியாக களஆய்வு செய்துள்ளேன். 10-க்கும் மேற்பட்ட கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளேன்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. பேருந்து நிலையம் திறக்கப்பட்டவுடன் ஏற்படுகின்ற போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதற்காக, தற்போது புதிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், அயனஞ்சேரியையும் இணைக்கின்ற வகையில் ஒரு சாலை 1.20 கி.மீ நீளத்திற்கு அமைக்க உள்ளோம். அதேபோன்று போலீஸ் அகாடமி சாலையில் சுமார் 6 கி.மீ. நீளத்திற்கு புதிதாக சாலை அமைப்பதற்கும் திட்டமிட்டு வருகிறோம். இதில் 2 கி.மீ. வனத்துறையின் வசம் உள்ளதால், வனத்துறையிடம் முன்அனுமதி பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மேலும் வண்டலூர் சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றபொழுது, மாற்றுப்பாதையாக 6 கி.மீ. அளவிற்கு சாலை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம். சுமார் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிதாக மழைநீர் வடிகால் அமைக்க பணிகள் இந்த மாத இறுதிக்குள் பணிகளை தொடங்க உள்ளோம்.
இதுதவிர கிளாம்பாக்கத்தில் ரூ.12 கோடி மதிப்பீட்டில் ஒரு பூங்கா அமைக்கும் பணி நடக்கிறது. மேலும், ஒரு புதிய பூங்கா சுமார் 6 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்த போகிறோம். போக்குவரத்து நெரிசல், சட்ட ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகின்ற பொழுது, அதனை முறையாக சரிசெய்வதற்கு ஏதுவாக கிளாம்பாக்கத்தில் ஒரு காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்து வருகிறோம். அதற்குண்டான கட்டுமானப் பணிகளும் தொடங்கப்பட உள்ளது.
நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து செல்வார்கள் என கணக்கிட்டுள்ளோம். எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் முதலுதவிக்காக ஒரு மருத்துவ மையம் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் செய்து வருகிறோம்.
எங்களை பொறுத்தவரை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து வைத்த பிறகு, எந்தவகையிலும் மக்களுக்கு அந்த பேருந்து நிலையத்தால் அசௌகரியம் ஏற்படக் கூடாது என்பதற்காக திட்டமிடப்பட்டு பல்வேறு பணிகளை இப்போது செய்து வருகிறோம்.
கிளாம்பாக்கத்தில் ஆம்னி பேருந்து நிலையத்திற்கு என்று தனியாக ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு, களஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 5 ஏக்கர நிலப்பரப்பில் சுமார் ரூ.30 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கான பணிகளும் வேகமாக நடக்கிறது. இப்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஒட்டி பல்வேறு பணிகள் போர்க்கால அடிப்படையில் சுமார் ரூ.70 கோடி மதிப்பீட்டில் செய்யப்படுகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றிய பிறகு, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்த பின்னர் இந்தப் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும்" இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு கூறினார்.
இதனிடையே இந்த கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் 100 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இந்த கடைகளை ஏலம் எடுக்க ஆயிக்கணக்கானோர் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.எல். ஏ.க்கள், எம்.பி.க்கள் வாரியத் தலைவர்கள் கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாளர்கள் என தி.மு.க.வில் பெரும் போட்டி இருக்கிறது. எந்த கடைகளும் இன்னும் ஏலம் விடப்படவில்லை. சிங்கிள் வின்டோ சிஸ்டத்தில் கடைகளை ஒதுக்கீடு செய்வதா? அல்லது பொது ஏலத்தில் விடுவதா? என்று முடிவு செய்யப்படவில்லையாம். ஆனாலும் ஒவ்வொரு கடைக்கும் சிபாரிசு பலமாக இருப்பதால் சி.எம்.டி.ஏ. அமைச்சர் சேகர்பாபு என்ன செய்ய போகிறார் என்பது தெரியவில்லையாம்.












Click it and Unblock the Notifications