சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில் பாதை நிலை என்ன? வேளச்சேரிக்கு பறந்த நல்ல செய்தி
சென்னை: சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணி எப்போது நிறைவடையும் என்பது குறித்தும், வேளச்சேரி கடற்கரை இடையே மீண்டும் வழக்கம் போல் ரயில்கள் எப்போது ஓடும் என்பது குறித்தும் தெற்கு ரெயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையின் முக்கியமான மின்சார ரயில் பாதை என்றால், தாம்பரம் - கடற்கரை வழித்தடம் தான்,.. இந்த வழித்தடத்தில் ரயில்கள் ஒரு மணி நேரம் பீக் அவர்ஸில் ஓடாமல் போனால் மொத்த சென்னையும் ஸ்தம்பித்துவிடும்.. அவ்வளவு முக்கியமான வழித்தடம் ஆகும்.. இந்த வழித்தடத்தில் தாம்பரம்-கடற்கரை இடையே 4 ரயில்பாதைகள் இருக்கிறது. ஆனால் எழும்பூர் - சென்னை கடற்கரை வரை 3 வழித்தடங்கள் மட்டுமே இருக்கிறது. இதில் 2 பாதைகளில் புறநகர் மின்சார ரயில்களும், ஒரு பாதையில் வட மாநில எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

வடமாநிலங்களுக்கு செல்லும் 90 சதவீதம் ரயில்கள் சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படுகின்றன. அதேநேரம் தமிகத்தின் பிறபகுதிகளில் இருந்து சென்னை வழியாக வடமாநிலங்கள் செல்லும் ரயில்கள் சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு போக முடியாது. அந்த ரயில்கள் எழும்பூர் வழியாக இயக்கப்படும். ஏனெனில் சென்ட்ரல் ரயில் தான் கடைசி. எழும்பூர் அப்படி இல்லை.. காஷ்மீர் வரை கூட போக முடியும்.. கடற்கரை வந்து அதன்பிறகு அரக்கோணம் வழித்தடத்தில் கூட போக முடியும்..
ஆனால் ஒரே ஒரு பாதை மட்டுமே இருப்பதால் தாம்பரம் வழியாக வடமாநிலங்களுக்கு ரயில்களை இயக்க வேண்டும் என்ற ரயில்வேயின் திட்டம் நிறைவேறாமல் உள்ளது. அதேநேரம் தற்போதைய நிலையில் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் எப்போதும் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்த கூட்டத்தை குறைக்க விரும்பிய தெற்கு ரயில்வே, தாம்பரத்தில் இருந்து எழும்பூர் ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு ரயில்கள் இயக்க புதிய பாதை போட விரும்பியது.
இதன்படி, சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே 4.3 கிலோ மீட்டர் தொலைவுக்கு 4-வது புதிய ரயில்பாதை அமைக்க தெற்கு ரயில்வே பரிந்துரை செய்தது. ரூ.279 கோடியில் அமைக்க ரயில்வே வாரியம் உடனடியாக ஒப்புதல் அளித்தது. இந்த பணிகளுக்காக கடற்கரை - வேளச்சேரி இடையேயான பறக்கும் ரயில் பாதையில் ரயில் சேவை சிந்தாரிப்போட்டை வரை மாற்றி அமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ந்தேதி முதல் கடற்கரை- சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.
வேளச்சேரி முதல் பூங்கா சந்திப்பு வரை ரயில்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை தெற்கு ரயில்வே நிராகரித்தது. தற்போது வேளச்சேரி செல்லும் மின்சார ரயில்கள், கடற்கரைக்கு பதில் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால் ரயில் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகிறார்கள்.
சென்னையின் ஐடி நிறுவனங்கள், பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் அத்தனையும் ஓஎம்ஆர், அடையாறு, பெருங்குடி, கந்தன்சாவடி மற்றும் வேளச்சேரி பகுதிகளில் அமைந்துள்ளதால் சென்னை மக்கள் வேலைக்கு வர, கடற்கரை -வேளச்சேரி ரயில் தான் உதவி வந்தது. இப்போது ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் இருந்து இயக்கப்படுவதால், அவர்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். பரங்கிமலை வேளச்சேரி பறக்கும் ரயில் பாதையாவது முடியும் என்று பார்த்தால் அது விடையே தெரியாத கேள்வியாக பல ஆண்டுகளாக நிற்கிறது. இதனால் இரண்டு பக்கம் வழியாகவும் ரயில்களில் செல்ல முடியாத நிலையில் மக்கள் தவிக்கிறார்கள்.
இந்லையில் 6 மாதத்தில் 4-வது ரயில்பாதை பணிகள் முடிக்கப்படும் என்று தெற்கு ரயில் அறிவித்த நிலையில், சொன்னபடி பணிகளை முடிக்கவில்லை.. அதேநேரம் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் திட்டமிட்டபடி பணிகளை முடித்து ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.
தற்போதைய நிலையில், நான்காவது பாதை அமைக்கும் பணிகளுக்கான தண்டவாளம் அமைப்பதற்காக கூவம் ஆற்றில் 500 இடங்களில் அடித்தளம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் பக்கிங்காம் கால்வாயில் 3 சிறிய பாலப் பணிகள் முடிக்கப்பட்டிருக்கிறதாம். இதேபோல் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு சொந்தமான நிலத்தின் ஒரு பகுதியை கையகப்படுத்தி அதில் எல்லைச் சுவர் கட்டும் பணி முடிந்துவிட்டதாம். சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே அமைக்கப்பட்டு வரும் 4-வது ரயில்பாதை திட்டத்தில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், எழும்பூர் கடற்கரை இடையே 4-வது ரயில்பாதை அமைக்கும் பணி வருகிற ஜூன் மாதம் முடிவடைந்து, ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தெரிவித்தார்..












Click it and Unblock the Notifications