'எழும்பூர் ரயில் நிலையத்தில் 5ம் தேதிக்குள்'.. சென்னை மின்சார ரயில் பயணிகளுக்கு நல்ல செய்தி
சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11-வது நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் மின்சார ரயில்கள் 10, 11-வது நடைமேடை வழியாக கடந்து செல்லாமல், மாறாக 5 மற்றும் 6-வது நடைமேடை வழியாக நின்று செல்கின்றன. இதனால் பல ரயில்கள் எழும்பூருடன் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல் சில ரயில்கள் எல்லா ரயில்களிலும் நிற்காமல் செல்கிறது. இது பயணிகளுக்கு சிரமத்தை தருகிறது. இதனிடையே மின்சார ரயில் சேவைகள் வருகிற 5-ந்தேதிக்கு பிறகு சீராகுமா? என்பது குறித்து ரயில்வே அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை உலக தரத்திற்கு மாற்றும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடந்து வரும் மறுசீரமைப்பு பணிகளால் ரயில் சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பெரிய அளவில் பயணிகளை பாதிக்கவில்லை. ஆனால் ரயில் நிலையத்தின் 10, 11-வது நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகளால் மின்சார ரயில் சேவைகள் குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால் சென்னை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மின்சார ரயில்கள்
ஏனெனில் கடந்த மாதம் (பிப்ரவரி) 20-ந்தேதியில் இருந்து 10, 11-வது நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த மாதம் (ஏப்ரல்) 5-ந்தேதி வரை இந்த பணிகள் காரணமாக மின்சார ரயில்கள் 10, 11-வது நடைமேடை வழியாக கடந்து செல்லாமல், மாறாக 5 மற்றும் 6-வது நடைமேடை வழியாக நின்று செல்கிறது.
எப்போது சரியாகும்
10, 11-வது நடைமேடைகளில் அடுத்த மாதம் 5-ந்தேதிக்குள் முடிவடைந்து விடுமா? அல்லது மேலும் நாட்கள் நீட்டிக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்தது. இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள்கூறும் போது, எழும்பூர் ரயில் நிலையத்தை சுமார் ரூ.734 கோடியே 91 லட்சம் செலவில் மறுசீரமைக்கும் பணிகள் கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கினோம். இதுவரை காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய 2 பக்கங்களிலும் பன்டுக்கு வாகன நிறுத்தம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல் பல்வேறு பணிகளும் நடக்கின்றன.
என்ன பணி நடக்கிறது
அதில் ஒரு பணி தான் நடைமேடைகள் மறுசீரமைக்கும் பணி. இதில் 10, 11-வது நடைமேடைகள் மறுசீரமைக்கும் பணிகள் நடக்கிறது. அனைத்து நடைமேடைகளை இணைக்கும் வகையில் பிரம்மாண்ட மேற்கூரை பூங்கா அமைப்பதற்கான தூண்கள் மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக தற்போது அந்த நடைமேடைகளில் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இதுதவிர அந்த நடைமேடைகளை தரம் உயர்த்தும் மற்றும் கூடுதல் வசதிகளுடன் கூடிய நவீன கட்டுமான பணிகளை செய்து வருகிறோம்.
அதிகாரி விளக்கம்
இந்த பணிகள் ஏற்கனவே குறித்தபடி, நடைமேடைகளில் பயணிகள் வந்து செல்வதற்கு ஏதுவாக வருகிற 5-ந்தேதிக்குள் முடிக்கப்பட்டு மீண்டும் ரயில் சேவைகள் சீராகுவதற்கு ஏற்ற வகையில் பணிகள் நடந்து வருகிறது. கூடுமானவரையில் 5-ந்தேதிக்கு முன்னதாகவே பணிகளை முடித்துகூட ரயில் சேவைகள் இயக்கவும் விறுவிறுப்பாக பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கிறது. தற்போது பயணிகளுக்கு ஏற்பட்டிருக்கும் சிரமத்துக்கு ரயில்வே நிர்வாகம் கவலைப்படுகிறது என்றார்கள். எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் முழுவதுமாக முடிவடைய இன்னும் ஓராண்டுக்கு மேல் ஆகும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.












Click it and Unblock the Notifications