2028க்குள் மதுரை எய்ம்ஸ்.. மத்திய அரசு முயற்சி எடுக்காவிட்டால் நாங்களே.. அமைச்சர் வெளியிட்ட அப்டேட்!
சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட நிதியுதவி அளிக்கும் ஜப்பான் நிறுவனத்தினரை சந்தித்து பேசியதில் 2028ஆம் ஆண்டுக்குள் பணிகள் முடிவுற வாய்ப்புள்ளதாக தெரிகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவது குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. இதற்காக தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு சுமார் ரூ.1,264 கோடி மதிப்பில் 200 ஏக்கரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டினார். அதன்பிறகு சுற்றுச்சுவர் மட்டுமே கட்டப்படுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஜப்பான் நிறுவன நிதி உதவியுடன் மேற்கொள்ளப்படுகிறது.
பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரிடம் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளை விரைவுபடுத்த பல முறை கோரிக்கை வைத்துள்ளனர். எனினும், இன்னும் பணிகள் தீவிரப்படுத்தப்படாமல் இருந்து வருகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "இந்தியாவில் மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளுக்கு மத்திய அரசின் நிதி பங்கு உள்ளது. ஆனால் மதுரைக்கு இல்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கு நிதி வழங்கும் ஜப்பான் நிறுவனத்தின் ஜேஐசிஏ துணை தலைவரை சந்தித்தோம். இதன் டெண்டர் 2024க்குள் முடித்து, 2028ல் இறுதியாகும் என அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு இதற்கு போதுமான முயற்சிகளை மேற்கொள்ளாவிட்டால், ஜேஐசிஏ அமைப்பின் மூலம் தமிழ்நாடு அரசே நிதி பெற்று பணிகளை தொடங்கவும் திட்டமிட்டு உள்ளோம். மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்ற எண்ணத்தில்தான், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடத்தி ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications