சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில்.. எப்போது சேவை தொடங்கும்? தெற்கு ரயில்வே மேலாளர் கொடுத்த மாஸ் அப்டேட்
சென்னை: பயணிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் எப்போது முதல் இயங்கத் தொடங்கும் என்பது குறித்த தகவலை தெற்கு ரயில்வே மேலாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பயணிகள் தங்கள் பயண தேவைகளுக்கு அதிகம் பயன்படுத்தும் பொது போக்குவரத்து அமைப்பு ரயில்வே தான்... பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் ரயில்களில் பல்வேறு அம்சங்களை ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது வந்தே பாரத் ரயில்களை நாடு முழுவதும் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் ரயில்வே அறிமுகம் செய்து வருகிறது.

வந்தே பாரத் ரயில்களை பொறுத்தவரை விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளை கொண்டது என்றே சொல்லலாம். முழுவதும் ஏசி வசதி, சாய்வு இருக்கைகள், பயோ டாய்லட், விசாலமான ஜன்னல் கண்ணாடிகள், வைஃபை வசதி, ஜிபிஎஸ், ஆடியோ, வீடியோ, தானியங்கி கதவும் என பல வசதிகள் உள்ளன. வந்தே பாரத் ரயிலை பொறுத்தவரை ரயில் என்ஜின், ரயிலின் மற்ற பெட்டிகளுடனேயே இணைந்திருக்கும். வழக்கமான எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து வெளித்தோற்றத்திலும் மாறுபட்டதாக வந்தே பாரத் ரயில்கள் உள்ளன.
தமிழகத்தில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூரு வழியாக மைசூர் வரையிலும், சென்னையில் இருந்து கோவைக்கும் என இரண்டு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் சுமார் 20 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இன்னும் பல வழித்தடங்களில் வந்தே பாரத் ரயிலை அறிமுகம் செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளது.
அந்த வகையில், சென்னை - நெல்லை வழித்தடத்திலும் வந்தே பாரத் ரயிலை இயக்க ரயில்வே முடிவு செய்துள்ளது. தென் மாவட்ட ரயில் பயணிகளின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை இந்த ரயில் ஏற்படுத்தியுள்ளது. ஆன்மீக தலங்களும் சுற்றுலா தலங்களும் நிறைந்த பகுதியாக தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகள் உள்ளன. இதனால் தென் மாவட்டங்களுக்கும் செல்லும் ரயில் மற்றும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் எப்போதும் அலை மோதும்.
இதனால் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால், வந்தே பாரத் ரயில் மீதான எதிர்பார்ப்பு பயணிகள் மத்தியில் அதிகம் உள்ளது. இந்த நிலையில், சென்னை - நெல்லை இடையிலான வந்தே பாரத் ரயில் எப்போது இயக்கப்படும் என்பது குறித்த தகவலை ரயில்வே பொதுமேலாளர் வெளியிட்டுள்ளார். நெல்லையில் பல்வேறு ரயில் போக்குவரத்துக்கான மேம்பாட்டு பணிகளை பார்வையிடுவதற்காக, தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரயில்வேக்கு அதிக வருமானம் ஈட்டித்தரும் ரயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை ரயில் நிலையம் உள்ளது. எனவே, ரயில் நிலையத்தின் வசதியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். 4 ஆண்டுகளுக்கு இந்த பணிகள் திட்டமிட்டப்பட்டுள்ளது. நெல்லை - நாகர்கோவில் இடையிலான இரட்டை ரயில் பாதை பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை - நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயில் விரைவில் நடைமுறைக்கு வர இருக்கிறது. வரும் அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில், சென்னை - நெல்லை வந்தே பாரத் ரயில் இயக்கபடும்" என்றார்.












Click it and Unblock the Notifications