தக்காளி விலை தமிழ்நாட்டில் எப்போது குறையும்.. திடீரென விலை ஏற இதுதான் காரணமா?
சென்னை: தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 150 ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ள தக்காளி விலை, இனி எப்போது குறையும் என்பது குறித்து வியாபாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தக்காளி விலை கடந்த 3 மாதத்திற்கு முன்பு 10 ரூபாய் என்கிற அளவில் இருந்தது. ஆனால் தக்காளி விலை சரசரவென உயர்ந்து தற்போது 150 ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
தக்காளி விலை தான் இப்படி என்றால், சின்ன வெங்காயத்தின் (சாம்பார் வெங்காயம்) விலையும் தாறுமாறாக உயர்ந்துள்ளது சீரகம் நினைத்து பார்க்க முடியாத அளவிலும், பருப்பு விலைகள் பயமுறுத்தும் அளவிலும், பச்சை மிளகாய் விலையை கேட்டாலே காரம் கண்ணில் வந்து நிற்கிறது. காய்கறிகள், அரிசி பருப்பு மளிகை சாமான்கள் விலையில் ஏற்பட்ட மாற்றத்தால் இந்த மாதம் பட்ஜெட்டில் பலருக்கும் துண்டு விழுந்துள்ளது.

சரி நம்ம விஷயத்திற்கு வருவோம். மற்ற பொருட்களின் விலை ஏறியதை விட தக்காளி விலை உயர்வு மக்களை கடுமையாக பாதித்துள்ளது. தக்காளி விலை சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ ரூ.80 முதல் ரூ.110 வரையிலும், சில்லரை விற்பனை கடைகளில் ரூ.120 முதல் ரூ.150 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்பார் வெங்காயத்தை எடுத்துக் கொண்டால், ஒரு கிலோ தரத்தை பொறுத்து ரூ.80 முதல் ரூ.130 வரை கோயம்பேடு (மொத்த) மார்க்கெட்டிலும், வெளி மார்க்கெட்டில் ரூ.90 முதல் ரூ.150 வரையிலும் விற்பனை ஆகி வருகிறது.
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது. சென்னையில் உள்ள ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை மூன்றாவது நாளாக இன்றும் நடந்து வருகிறது. மக்கள் நீண்ட வரிசையில் நின்று தக்காளியை வாங்கி செல்கிறார்கள். தக்காளி மற்றும் காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த அரசுக்கு மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தக்காளி விலை எதனால் உயர்ந்தது? தக்காளி விலை தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்தியா முழுவதுமே உயர்ந்துள்ளது. மழை மற்றும் வெப்பத்தின் தாக்கம் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதாலேயே அதன் விலை உயர்ந்துள்ளது. கடுமையான வெப்பத்தால் மக்கள் தக்காளியை பயிரிடாமல் விட்டுவிட்டார்கள் இதுதான் தக்காளி விலை அதிகரிக்க காரணம் என்று வியாபாரிகள் கூறுகிறார்கள்.
சென்னையில் என்ன நிலைமை: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நாளொன்றுக்கு சுமார் 55 முதல் 65 வரையிலான லாரிகளில் தக்காளி வந்து கொண்டு இருந்த நிலையில், 30 லாரிகளில் மட்டுமே வருகிறது. கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா ஆகிய பகுதிகளில் விளையும் தக்காளி, தமிழ்நாட்டின் மொத்த தேவையை பூர்த்தி செய்து வருகிறது. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் விளைச்சல் பாதிப்பால், மகாராஷ்டிராவில் இருந்து வரும் தக்காளி மூலமாக மட்டுமே ஓரளவுக்கு சமாளிக்க முடிகிறது. இல்லாவிட்டால் தக்காளி விலை இன்னமும் கடுமையாக உயர்ந்திருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.
தக்காளி விலை எப்போது குறையும்?: தக்காளி விலை ஏற்றம் செயற்கையானது அல்ல என்று கூறிய வியாபாரிகள், தக்காளியை சிறு வியாபாரிகளால் பதுக்கி வைக்க முடியாது என்றும் அதையெல்லாம், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களால்தான் செய்ய முடியும் என்றும் கூறினார்கள்.
இந்த ஆண்டு கடுமையான வெப்பத்தால் விவசாயிகள் தக்காளி சாகுபடியை செய்யாமல் இருந்து விட்டதாகவும், அதனால்தான் இந்த நிலைமை என்று கூறிய விவசாயிகள், கிருஷ்ணகிரி, ஒசூர் போன்ற இடங்களில் தக்காளி சாகுபடி மேற்கொள்ளப்பட்டு உள்ளதால், இன்னும் 2 வாரத்தில் தக்காளி விலை ஓரளவு இயல்பு நிலைக்கு திரும்பிவிடும் என்றார்கள்.












Click it and Unblock the Notifications