மது ஒழிப்பில் திருமா சறுக்கியது எங்கே? ஸ்டாலின் ஏன் இதை டேக் செய்யவில்லை?
சென்னை: மது ஒழிப்பு மாநாடு விவகாரத்தில் திருமாவளவன் பல இடங்களில் சறுக்கிவிட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன் பட்டியல் போட்டுச் சுட்டிக்காட்டி இருக்கிறார்.
விசிக வரும் அக்டோபர் 2 ஆம் தேதி மது ஒழிப்பு மாநாடு நடத்தப் போவதாக அறிவித்திருந்த நிலையில் அது தொடங்குவதற்கு முன்பாகவே பிசுபிசுத்துப் போய்விட்டது. பாமகவுக்கு இடமில்லை. பாஜகவுக்கு இடம் இல்லை. அதிமுக விரும்பினால் கலந்துகொள்ளலாம் என அவர் பேசியது பொறுப்பான அணுகுமுறை இல்லை என்ற விமர்சனம் அரசியல் மட்டத்தில் எதிரொலிக்கத் தொடங்கி இருக்கிறது.

மது ஆலைகளை நடத்தும் கட்சியின் பிரதிநிதிகளை அழைத்து மாநாடு நடத்தும் விசிக, மதுவுக்கும் போதைப் பொருட்களுக்கும் எதிராகக் கடந்த 40 ஆண்டுகளாகக் குரல் கொடுத்து மருத்துவர் ராமதாசை அழைக்காதது பற்றி கேள்வி எழுந்துள்ளது. உண்மையில் இது மது ஒழிப்பு மாநாடா? அல்லது கூட்டணிக் கட்சிகளின் கூட்டமா? என்று சமூக ஆர்வலர்களே கேட்க தொடங்கி உள்ளனர்.
இந்த மது ஒழிப்பு விவகாரத்தில் திருமாவளவன் பல இடங்களில் சறுக்கிவிட்டார் என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லக்ஷ்மணன். இது பற்றி அவர் பேசுகையில் "மது ஒழிப்பு என்பதை அரசியல் களத்திற்கு வந்த காலம் முதலே திருமாவளவன் பேசி வருகிறார். ஆனால், இப்போது அவரது மாநாடு தொடர்பான செயல்பாடு மீது லேசாக சந்தேகம் வரவழைத்திருக்கிறார் திருமா. மது ஒழிப்புக்குச் சாதி, மதம் கிடையாது. எல்லா சாதிக்காரர்களும் குடிக்கிறார்கள். எல்லா மதத்தில் குடிக்கின்றவர்கள் இருக்கின்றார்கள். இதில் விதிவிலக்கு கிடையாது.

அப்படி என்றால் திருமாவளவன் என்ன செய்திருக்க வேண்டும்? சாதி,மதங்களைக் கடந்து எல்லோருக்கும் அழைப்பு விடுத்திருக்க வேண்டும். குறிப்பாக மது ஒழிப்பில் ஒரு சோர்வே இல்லாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தவர் மருத்துவர் ராமதாஸ். தலித் என்ற வார்த்தை இங்கே ஏன் வந்தது? குடிக்கும் தலித்திற்கும் என்ன சம்பந்தம்? திருமாவளவன் இந்த மது ஒழிப்பு மாநாடு மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடக்கும். அதற்காக நான் அவரை சென்று சந்திப்பேன் என்று சொல்லி இருக்கவேண்டும். ஒருவேளை திருமா அழைத்து அவர் வரமாட்டேன் என மறுத்திருந்தால், ராமதாஸ் இந்த விவகாரத்தில் அம்பலப்பட்டுப் போய் இருப்பார். அதைச் செய்ய திருமா தவறிவிட்டார் என்றே சொல்வேன்.
கூடவே மதவாத சக்திகளுக்கு இதில் இடமில்லை என்கிறார் திருமா. இதில் எங்கே மதம் வந்தது? மேலும் எடப்பாடி பழனிசாமி விரும்பினால் கலந்து கொள்ளலாம் என்கிறார். அந்தளவுக்கு அதிமுக ஒன்று பலவீனப்பட்டுப் போய் விடவில்லை என்பதை திருமா புரிந்துகொள்ள வேண்டும். முதலில் திருமாவளவனுக்கு அதிமுகவையும் அழைக்க வேண்டும் என்ற அக்கறை இல்லை. மது ஒழிப்பு மேடையில் எடப்பாடியையும் அழைத்து உட்கார வைத்திருக்க வேண்டும். அவர் இதற்கு முன்பாக முதல்வராக இருந்தவர். அவர் கட்சி உதவி இல்லாமல் மதுவை ஒழித்துவிட முடியுமா?
ஒரு வருடத்திற்கு 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசுக்கு வருமானம் வந்துகொண்டுள்ளது. அப்படி என்றால் அரசுக்கு ஏற்படும் இந்த வருவாய் இழப்பை எப்படி ஈடுகட்டுவது? அதற்கு விளக்கம் வேண்டுமா? வேண்டாமா? தமிழ்நாடு இந்தியாவில் ஒரு மாநிலம். அந்த மாநிலத்தில் மது ஒழிப்பு கொண்டுவர வேண்டும் என நினைத்தால், அதற்கு மத்திய அரசும் உதவ வேண்டுமா வேண்டாமா? அப்படி என்றால் மோடி பிரதமராக உள்ள கட்சியின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டுமா? வேண்டாமா? அதே போன்று காங்கிரஸ் கட்சியையும் அழைத்திருக்க வேண்டும்.
இந்த மது ஒழிப்பு என்பது சாத்தியமா என்று கேட்டால் முடியாது என்பதை ஜெயலலிதாவை ஏற்றுக் கொண்டதால்தான், ஆண்டுக்கு 500 கடைகளை மூடுவேன் என்றார். அதன்படி அவர் ஆட்சிக்கு வந்ததும் 500 கடைகளை மூட உத்தரவும் போட்டார். திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி 500 கடைகளை மூடினார். அதை ஏன் தொடர்ந்து செய்யவில்லை? விடியற்காலை 5.45க்கு மதுக்கடை திறக்கப்பட்டுள்ளதாக வீடியோவே வெளியானது. முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். மற்ற வீடியோக்கள் வெளியானால் உடனே நடவடிக்கை எடுத்து எக்ஸ் தளத்தில் டேக் செய்து வெளியிடுகிறாரே? ஏன் இதை டேக் செய்து நடவடிக்கை எடுக்கவில்லை? " என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications