மு.க.ஸ்டாலின் கை காட்டும் தொகுதியில் களமிறங்கத் தயார்... திட்டவட்டமான முடிவில் இனிகோ இருதயராஜ்..!
சென்னை: கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவர் இனிகோ இருதயராஜ் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது பற்றி பல்வேறு யூகங்கள் வெளியாகி வரும் சூழலில், ஸ்டாலின் எங்கு கை காட்டுகிறாரோ அங்கு களத்தில் குதிக்க ஆயத்தமாக உள்ளார் அவர்.
கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராக இருக்கக் கூடிய இனிகோ இருதயராஜ், ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கிறிஸ்துமஸ் பெருவிழாவை நடத்தக் கூடியவர். கருணாநிதி உடல்நலத்துடன் இருந்தவரை அவரையும், அதற்கு பிறகு மு.க.ஸ்டாலினையும் அழைத்து பெருமைப்படுத்த தவறாதவர்.

இதற்கு பிரதிபலனாக திமுகவில் ராஜ்யசபா எம்.பி. உட்பட எந்தப் பதவியையும் எதிர்பார்க்காதவர். ஒரு முறை அதற்குரிய வாய்ப்பு கிட்டியும் முக்கிய நபர் ஒருவருக்காக விட்டுக் கொடுத்தவர். இப்படி எந்தச் சூழ்நிலையிலும் பதவி கேட்டு நெருக்கடி கொடுக்காத இனிகோ இருதயராஜை வரும் சட்டமன்றத் தேர்தலில் களமிறக்கும் திட்டத்தில் இருக்கிறார் ஸ்டாலின்.
இனிகோவின் பூர்வீகம் திருச்சி என்பதால் அவர் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார் எனக் கூறப்படும் நிலையில், கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கத்தின் நிர்வாகிகள் சிலரிடம் இது குறித்து பேசினோம். அவர்கள் கூறியதாவது, '' தலைவர் இனிகோ இருதயராஜை பொறுத்தவரை ஸ்டாலின் கை காட்டும் தொகுதியில் போட்டியிட ஆயத்தமாக உள்ளார். திருச்சி என்பது தலைவருக்கு புதிதல்ல, தேர்தலை மட்டும் கருத்தில் கொள்ளாமல் சேவை மனப்பான்மையுடன் அங்கு பல லட்ச ரூபாய் செலவில் நலத்திட்ட உதவிகளை செய்திருக்கிறார்.''
''திருச்சியை பொறுத்தவரை அன்பில் மகேஷும், தலைவர் இனிகோவும் நல்ல நண்பர்களாக, சகோதர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் அவருக்கு இவர் போட்டி, இவருக்கு அவர் போட்டி என எழுதுவதெல்லாம் சுத்தப் பொய்'' என்று கூறினார்கள். இதனிடையே அரசியலுக்கு அடிப்படை பக்குவம். அந்த பக்குவத்தை நிரம்ப பெற்றவராக திகழ்கிறார் இனிகோ இருதயராஜ் என்பது மட்டும் இதிலிருந்து தெரிகிறது.












Click it and Unblock the Notifications