ராஜேந்திர பாலாஜிக்கு ரகசிய உதவி?.. "அவர் எங்கே?" அதிமுக நிர்வாகிகளிடம் தொடங்கிய விசாரணை
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எங்கே என்பது குறித்து அதிமுக நிர்வாகிகள் சிலரிடம் காவல் துறை விசாரித்து வருகிறது.
Recommended Video
ஆவினில் வேலை வாங்கித் தருவதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ரூ 3 கோடிக்கு மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் மீதும் முத்துப்பாண்டி, பாபுராஜ், பலராமன் ஆகிய 3 உதவியாளர்கள் மீதும் விருதுநகர் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதாவதிலிருந்து தப்ப ராஜேந்திர பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

17 ஆம் தேதி முதல் தலைமறைவு
இதையடுத்து அவர் கடந்த 17ஆம் தேதி முதல் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சென்னை, திருச்சி, கொடைக்கானல், பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் தேடப்பட்டு வருகிறது. அவரது இருப்பிடம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

உறவினர்கள்
இந்த நிலையில் தனது இருப்பிடம் கேட்டு தன் உறவினர்களை போலீஸார் துன்புறுத்துவதால் தனது ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் புதியதொரு மனுவையும் ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்திருந்தார்.

மேலும் புகார்
இந்த நிலையில் அவர் ஊர் விட்டு ஊர் தப்புவதை தடுக்கும் விதமாக அவரது 6 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. எனினும் அவரது இருப்பிடம் குறித்து எந்த தகவலும் போலீஸாருக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் வேலை வாங்கித் தருவதாக மேலும் 7 கோடி ரூபாய் மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்துள்ளது.

மறைமுக உதவி
அடுத்தடுத்து புகார்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் தலைமறைவாக உள்ள ராஜேந்திர பாலாஜிக்கு யாரோ அதிமுகவினர் சிலர் உதவி வருவதாக தகவல்கள் வந்தன. இதையடுத்து போலீஸார் அதிமுக ஐடி பிரிவு துணை செயலாளர் விக்னேஸ்வரன், இளம் பெண் பாசறை செயலாளர் ஏழுமலை ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் ராஜேந்திர பாலாஜி பதுங்கியிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications