சசிகலா எங்கே இருக்கிறார்.. போட்ட திட்டமெல்லாம் ஒத்திவைப்பு.. கேரியரில் சாப்பாடு.. என்ன நடக்கிறது?
சென்னை: பெரும் ஆரவாரத்தோடு, பிரமாண்ட புடைசூழ பெங்களூரில் இருந்து சென்னை வந்து சேர்ந்தார் சசிகலா. ஆனால் கடந்த சில நாட்களாக அவரது நடவடிக்கைகள் அனைத்துமே ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன.
சென்னையில் அவர் தி.நகர் வீட்டில்தான் இருக்கிறாரா? அல்லது வேறு எங்கும் சென்று விட்டாரா என்று குழப்பம் பலருக்கும் எழுந்துள்ளது.
பொதுவாக, அரசியல் பிரமுகர்கள் நடவடிக்கைகளை உளவு துறையினர் கண்காணிப்பது வழக்கம். ஆனால் சசிகலா எங்கே இருக்கிறார் என்பதில் உளவுத்துறைக்கே குழப்பம் ஏற்பட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரமாண்ட வரவேற்பு
பெங்களூரில் பிப்ரவரி 8ஆம் தேதி காலை காரில் புறப்பட்ட சசிகலா, 9ம் தேதி அதிகாலைதான் சென்னை வந்து சேர முடிந்தது. வரும் வழியில் எல்லாம் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் கூடி வரவேற்பளித்தனர். எம்ஜிஆருக்கு பிறகு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைத்தது சசிகலாவுக்குத்தான் என்று பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் புகழ்ந்து சொன்னார்.
தி.நகர் இல்லம்
சென்னை வந்த சசிகலா தி நகர் பகுதியில் உள்ள வீட்டில் தங்கியிருந்தார். பிப்ரவரி 15ஆம் தேதி சசிகலா மதுரை செல்வார் என்றும், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்துக்கு சென்று வணங்கி மரியாதை செய்வார் என்றும் தகவல்கள் தெரிவித்தன. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஜெயலலிதா பயன்படுத்திய டொயோட்டா கார் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. ஆனால் சசிகலா மதுரை செல்லவில்லை.
யாரையும் சந்திக்கவில்லை
அதேநேரம் சென்னை தி நகர் இல்லத்தில் சசிகலா இருக்கிறாரா என்பது உறுதியாக தெரியவில்லை. அவர் வெளியே வந்து யாருக்கும் முகம் காட்டவில்லை. வெளி பிரமுகர்கள் யாரையும் சந்திக்கவில்லை.
கேரியர் சாப்பாடு
சசிகலா இல்லத்துக்கு தினமும் அவரது உறவினர்கள் வீடுகளில் இருந்து பெரிய கேரியரில் சாப்பாடு எடுத்துச் செல்லப்படுகிறது. உண்மையிலேயே சாப்பாடு எடுத்துச் செல்லப்படுகிறதா, அல்லது சசிகலா வேறு எங்கும் இருந்துகொண்டு உளவுத்துறை கவனம் திசைதிருப்பபடுகிறதா என்பது புரியவில்லை என்கிறார்கள்.
கார்கள்
சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி மற்றும் கர்நாடகா பதிவு எண்கள் கொண்ட விலை உயர்ந்த சொகுசு கார்கள் சசிகலா இல்லத்துக்கு வந்து சென்றுள்ளன. இதன் பின்னணி என்ன என்பது பற்றி உளவுத்துறை விசாரிக்க ஆரம்பித்துள்ளது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில்.
சசிகலா எங்கே?
அதேநேரம் சசிகலா தரப்பில் பெயர் தெரிவிக்க விரும்பாத சிலர் கூறுகையில், சசிகலா தி.நகர் இல்லத்தில்தான் இருக்கிறார். அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி ஆலோசனை செய்து வருகிறார். உறவினர்கள் வீடுகளில் இருந்து சசிகலாவுக்கு பிடித்தமான விதவிதமான உணவு வகைகள் சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு உறவினர்களாக தங்களது அன்பை காட்டுவதற்கு இவ்வாறு சாப்பாடு அனுப்பி வருகிறார்கள் என்று தெரிவிக்கிறார்கள்.