செந்தில் பாலாஜியின் சகோதரர் எங்கே.. தோண்டி துருவும் அமலாக்கத்துறை.. சிக்குவாரா அசோக்?
சென்னை: செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் எங்கே என்பதுதான் அமலாக்கத்துறையினரின் கேள்வியாக உள்ளது. தலைமறைவாக உள்ள அசோக் பிடிபட்டால் மட்டுமே பல உண்மைகள் வெளிவரும் என்பதால் கரூரில் உள்ள செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த 2011-2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. போக்குவரத்துத் துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாகப் புகார்கள் கிளம்பின. இதனால் அமைச்சர் பதவியை பறிகொடுத்தார் செந்தில் பாலாஜி.

ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அமமுக, திமுக என கட்சி மாறினார். திமுக ஆட்சி காலத்தில் மீண்டும் அமைச்சரானார் செந்தில் பாலாஜி. ஆனாலும் அவரது தலைமேல் பண மோசடி புகார் வழக்கு தொங்கிக் கொண்டுதான் இருந்தது. பண மோசடி குறித்தும் சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்தது. இந்தச் சூழலில் தான் கடந்த மே மாதம் முதலில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் முதலில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ சோதனையில் அவரது இதய குழாயில் நான்கு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவர், அங்கு அவருக்கு அடைப்பை அகற்ற அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர், புழல் சிறைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த 250 நாட்களாகவே புழல் சிறையில்தான் இருக்கிறார் செந்தில் பாலாஜி. அதற்குக் காரணம் அவரது சகோதரர் அசோக்தான். அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கி தருவதாகப் பண மோசடி செய்ததாக எழுந்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை விசாரணைக்காக நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் ஆஜராகாமலேயே இருந்தார். தனக்கு நெஞ்சு வலி இருந்ததாகத் தெரிவித்த அசோக் குமார், நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர் மூலமே அனைத்திற்கும் பதில் அளித்து வந்தார்.
அமலாக்கத்துறை சம்மன் அளித்த நிலையில், அவர் ஆஜர் ஆகாமல் வெளிநாட்டிற்கு தப்பிவிடும் வாய்ப்பு இருந்ததால், நாட்டில் உள்ள விமான நிலையங்களுக்கு அசோக்குமார் குறித்து லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த நிலையில் அசோக் எங்கு இருக்கிறார்? என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அசோக் தலைமறைவாக இருப்பதினால்தான் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தீபாவளிக்கும், தை பொங்கலுக்கும் கூட வீட்டிற்கு போக முடியாமல் புழல் சிறையிலேயே தவித்து வருகிறார் செந்தில் பாலாஜி.
கரூர் நாமக்கல் புறவழிச்சாலையில் ராம் நகர் பகுதியில் அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமாரின் மனைவி பெயரில் உள்ள இடத்தில் அசோக்குமார் பல கோடி மதிப்பில் புதிய நவீன சொகுசு பங்களாவை கட்டி வருகிறார். கடந்த 2023ம் ஆண்டு மே 26ஆம் தேதி வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்குமார் மற்றும் அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
அப்போது ராம் நகரில் அசோக்குமார் கட்டி வரும் புதிய பங்களாவில் சோதனை நடத்தினர். மேலும், அசோக்குமார் வருமான வரித் துறை அலுவலகத்தில் ஆஜராகி இதுதொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் ஒட்டி சென்றனர். இது தொடர்பாக இதுவரை அசோக்குமார் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்காமல் தலைமறைவாக உள்ளார்.
கடந்த மாதம் மீண்டும் அசோக்குமார் பங்களா வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது, பொதுப் பணித் துறை பொறியாளர்கள், நில அளவையர்களையும் உடன் அழைத்து வந்தனர். பொறியாளர்கள் மூலம் கட்டிடத்தை மதிப்பீடு செய்து இடத்தையும் அளவீடு செய்யப்பட்டன.
இந்த நிலையில் இன்றைய தினம் கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கேரளா பதிவு எண் கொண்ட காரில் வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 5 பேர் செந்தில் பாலாஜியின் பெற்றோரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வழக்கமாக அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வரும்போது துணை ராணுவப் படையினரை பாதுகாப்பிற்காக அழைத்து வருவது வழக்கம். அல்லது உள்ளூர் காவல்துறையினருக்கு தகவல் அளிப்பது வழக்கம். ஆனால், பாதுகாப்பிற்காக துணை ராணுவப்படை வீரர்கள் இல்லாமல் சோதனையில் ஈடுபட்டதோடு பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். அசோக் எங்கே என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.
தலைமறைவாக உள்ள அசோக் கைது செய்யப்பட்டால் மட்டுமே செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைப்பது உறுதி என்று அமலாக்கத்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications