Vijay Vs Udhayanidhi: எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை? விஜய்க்கு உதயநிதி நறுக் கேள்வி
சென்னை: தமிழகத்தில் தொடர்ந்து குற்றங்கள் நடந்து வரும் நிலையில் சிங்கப் பெண் அதிரடி படை எங்கே என முதல்வர் விஜய்க்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த 15 நாட்களில் 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள், 19 பாலியல் குற்றங்கள் என செய்திகளில் வந்த சம்பவங்கள் மட்டுமே இவை.

மாற்றம், மாற்றம் என்று சொன்னவர்களின் ஆட்சியில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு மாறி இருப்பதற்கு இந்த சம்பவங்களே சாட்சி.
கோவை சூலூர் சிறுமிக்கு நடந்த கொடுமையின் அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் விழுப்புரம் மாவட்டத்தில் மற்றொரு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை நடந்திருக்கிறது.
சூலூர் சிறுமியின் தாய்க்குச் சொல்லாமல் அவசரகதியில் உடல் எரிக்கப்பட்டிருக்கிறது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சிறுவன் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
மேலும், கோவையில் ஒரு இளம்பெண்ணின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு இருக்கிறது.
முதலமைச்சரின் சொந்த தொகுதியான பெரம்பூரில் போதைக் கும்பல் ஒன்று 13 வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்து அட்டூழியம் செய்துள்ளது.
முதல்வர் அவர்களே,
இது தமிழ்நாடா, உத்தரபிரதேசமா?
எங்கே போனது உங்க சிங்கப்பெண் அதிரடிப் படை?
தேர்தலுக்கு முன்பு வீர வசனங்களை பேசிய முதலமைச்சர் இப்போது ஏன் வாய் திறக்க மறுக்கிறார்?
அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களால் பொதுமக்கள் அச்சத்தில் தவிக்கும் போது, இன்று காலை கண்துடைப்புக்காக காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை நடத்தி பொத்தாம் பொதுவாக அறிக்கை விடுவதை ஏற்க முடியாது.
நிலைமையின் தீவிரத்தை முதலில் அரசு உணர வேண்டும். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச்செயல்களை தடுக்க, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமாக என்ன செய்யப் போகிறார் என்ற தமிழ்நாட்டின் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் சொல்லி ஆக வேண்டும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அது போல் தமிழகத்தில் தவெக ஆட்சிக்கு வந்தால் பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டு குற்றங்கள் நிகழாமல் பாதுகாக்கப்படுவர் என விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி விஜய் முதல்வராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தே சிங்கப்பெண் அதிரடி படை உருவாக்கத்திற்குத்தான்.
சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படை முதற்கட்டமாக காவல்துறை தலைமையக நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட உள்ளது. இத்திட்டம் முதல்வரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.
அந்த வகையில் மாநகர காவல் ஆணையரின் நேரடி மேற்பார்வையில் செயல்படும். இதில் காவல் உதவி ஆணையர், காவல் உதவி ஆய்வாளர், 2 சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள், 2 பெண் தலைமை காவலர்கள் என 6 பேர் பணியாற்றவுள்ளனர்.
இந்த படைக்கு தேவையான 4 சக்கர வாகனம், தகவல் தொடர்பு சாதனங்கள், காவல் துறையினரின் உடல் பொருத்தப்பட்டிருக்கும் கேமரா, இதர வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழக காவல்துறையின் 'சிங்கப்பெண்' சிறப்புப் படை பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு முக்கியப் பணிகளை மேற்கொள்கிறது. அதன் செயல்பாடுகள் கீழே எளிமைப்படுத்தப்பட்டுள்ளன:
கண்காணிப்பு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கைகள்
பகுதிகளைக் கண்டறிதல்: குற்றச் சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ள இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து தீவிரமாகக் கண்காணிக்கின்றனர்.
ரோந்துப் பணி: பொது இடங்களில் தொடர்ச்சியாகச் சுற்றுக்காவல் (Patrolling) மேற்கொண்டு, பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றனர்.
அதிகரித்த பாதுகாப்பு: காவல்துறையின் இருப்பை மக்கள் அதிகம் கூடும் இடங்களில் உறுதி செய்வதன் மூலம் குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கின்றனர்.
முக்கிய இடங்கள்: பேருந்து நிறுத்தங்கள், ரயில் நிலையங்கள், பள்ளி, கல்லூரிகள் மற்றும் ஐடி (IT) நிறுவனங்கள் போன்ற பகுதிகளில் சிறப்புக் கவனம் செலுத்துகின்றனர்.
உடனடி நடவடிக்கை மற்றும் மீட்புப் பணிகள்
விரைவுச் செயல்பாடு: பெண்களுக்கு எதிரான சட்டவிரோதச் செயல்கள் குறித்துத் தகவல் கிடைத்தால் உடனடியாகத் தலையிட்டுத் தடுக்கின்றனர்.
புகார் தீர்வு: பெறப்படும் மனுக்கள் மற்றும் புகார்கள் மீது காலதாமதமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மீட்பு மற்றும் ஆதரவு: பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாப்பாக மீட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ அல்லது சட்ட ரீதியான உதவிகள் மற்றும் மனநல ஆதரவு கிடைக்க வழிவகை செய்கின்றனர்.
ஒருங்கிணைப்பு மற்றும் விழிப்புணர்வு
கூட்டுப்பணி: சமூக நலத்துறை, கல்வித்துறை மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து விழிப்புணர்வு முகாம்களை நடத்துகின்றனர்.
மக்கள் பங்களிப்பு: சமூகத்தின் பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைத்து பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
முதன்மை இலக்கு: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தடுப்பு உத்திகளை (Prevention Strategies) வகுப்பதே இந்தப் படையின் மிக முக்கியமான நோக்கமாகும்.












Click it and Unblock the Notifications