பெரியார் பேரணி நடத்தியபோது என்ன செய்து கொண்டிருந்தார் ரஜினிகாந்த்? ஆச்சரிய தகவல்.. ஏன் இந்த கருத்து?
Recommended Video
சென்னை: 1971 ஆம் ஆண்டில் நடைபெற்றதாக கூறப்படும் ஒரு சம்பவம் தொடர்பாக, துக்ளக் ஆண்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் பேசினாலும் பேசினார், இதுவரை அவர் பற்ற வைத்த நெருப்பு அணைவதாக இல்லை.
சேலம் பேரணியில், ராமர் மற்றும் சீதை ஆகியோரின் நிர்வாணபடங்கள் கொண்டு வரப்பட்டதாகவும், அவை செருப்பால் அடிக்க பட்டதாகவும் ரஜினிகாந்த் பேச.., அதற்கு பெரியாரிய இயக்கங்கள் மற்றும் திராவிட இயக்கங்கள் கண்டனம் தெரிவிக்க.., இந்த பிரச்சனைக்கு பெட்ரோல் ஊற்றப்பட்டது.
ஆனால், நேற்று ரஜினிகாந்த் அளித்த பேட்டியில், தான் கூறியது உண்மை என்றும், 2017 ஆம் ஆண்டு வெளியான அவுட்லுக் இதழில் இது தொடர்பாக ஆதாரம் இருப்பதாகவும் கூற, இந்த நெருப்பு காட்டுத்தீ போல மளமளவென பரவத் தொடங்கிவிட்டது. இதோ இன்று ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட முயன்ற திராவிடர் கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரே டிவிட்.. வைரலோ வைரல்.. 'திராவிடர் ரஜினிக்கு' சீரியஸாக நன்றி சொல்லி கலாய்த்த செந்தில்குமார்!
இரு தரப்பு
இந்தச் சம்பவம் தொடர்பாக இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. நிர்வாணமாக படங்கள் கொண்டுவரப்படவில்லை என்றும், இந்த படங்களை பெரியார் செருப்பால் அடிக்கவில்லை என்றும் திராவிட இயக்கங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் செருப்பால் அடித்தது உண்மைதான் என்று அப்போதைய பாஜக சீனியர் தலைவர்களில் ஒருவரான லட்சுமணன் போன்றவர்கள் தெரிவிக்கிறார்கள். அப்போது வெளியான சில ஊடக செய்திகள், சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, இரு தரப்பாலும் தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்க முன்வைக்கப்படுகிறது.
சீனியர் தலைவர்கள்
இரு தரப்புகளையும் சேர்ந்த பல சீனியர்கள், தாங்கள் அந்த காலத்தில் பள்ளி அல்லது கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்ததாகவும், அந்த சம்பவத்தை அப்போது வெளியான ஊடகங்கள் வாயிலாக அறிந்து கொண்டதாகவும் கூறி தங்கள் கருத்துக்களை முன்வைத்து வருகிறார்கள். எனவே, எது உண்மை எது பொய் என்று மொத்த தமிழகமே குழம்பிப்போய் இருக்கிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும். இவ்வளவு ஆணித்தரமாக அந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் 1971 ஆம் ஆண்டு எங்கே இருந்தார் என்ற கேள்வி கண்டிப்பாக பலரது மனதிலும் எழக் கூடியதுதான்.
ரஜினிகாந்த் இளமை பருவம்
இதுதொடர்பாக ரஜினிகாந்துக்கு நெருங்கிய வட்டாரத்தில் பேச்சு கொடுத்து கேட்டோம். அவர்கள் கூறிய தகவல் ஆச்சரியமாக இருக்கிறது. 1950ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்தார் என்பதும், அவரது இயற்பெயர் சிவாஜி ராவ் கெய்க்வாட் என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. பெங்களூரில் உள்ள பள்ளியில்தான் ஆரம்பக்கல்வியை ரஜினிகாந்த் முடித்துள்ளார். அப்போதே அவருக்கு ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு இருந்துள்ளது.
நடிப்பு ஆர்வம்
படிப்பில் அதிகம் ஆர்வம் இல்லாத நிலையில், நடிப்பு துறையில் அவர் சிறப்பாக செயல்பட்டு உள்ளார். பள்ளிகளில் நடைபெறக்கூடிய நாடகங்களில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, பலரது கைத்தட்டல்களையும், பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். வருவாய் தேவையை பூர்த்தி செய்து கொள்வதற்காக பல வேலைகளிலும் ஈடுபட வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. கூலி தொழிலாளியாக வாழ்க்கை நடத்தியுள்ளார். இதன்பிறகு பெங்களூர் மாநகர அரசு பேருந்து கழகத்தில் அவருக்கு நடத்துனராகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. மெஜஸ்டிக் முதல் சிவாஜி நகர் செல்லக்கூடிய வழித்தடத்தில் அவர் நடத்துனராக வேலை பார்த்துள்ளார்.
1971ல் ரஜினி எங்கே
இப்படி வேலை பார்த்துக் கொண்டிருந்தாலும் கூட அவருக்கு நடிப்பு துறையின் மீதுதான் தணியாத காதல் இருந்தது. எனவேதான் அவர் 1973 ஆம் ஆண்டு மெட்ராஸ் பிலிம் இன்ஸ்டியூட்டில் சேர்ந்து நடிப்பு தொடர்பாக பயிற்சி பெற்றுள்ளார். அதாவது ரஜினி வட்டாரங்கள் கூறும் தகவல்படி, 1971ஆம் ஆண்டில் அவர் பெங்களூர் பஸ்ஸில் நடத்துனராக பணியாற்றிக் கொண்டே இருந்துள்ளார். ஆம்.. பெரியார் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடு நடத்திய அதே வருடம் தான். இந்த மாநாடு நடைபெற்ற இரண்டு வருடங்கள் பிறகுதான், தமிழக மண்ணில் ரஜினிகாந்த் காலடி எடுத்து வைத்து நடிப்பு துறையில் தனக்கான இடத்தை தேடிக் கொண்டு இருந்துள்ளார். நடத்துனர்.., அதன்பிறகு நடிப்பு பயிற்சி., என அவரது கவனம் முழுக்க இந்த விஷயங்களில்தான் இருந்துள்ளது, என்பது தெளிவாக தெரிகிறது.
இப்போது இது தேவையா
1975ஆம் ஆண்டு அவர் நடித்த அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படம் வெளியானதும், அதன்பிறகு படிப்படியாக நடிப்பு துறையில் உயர்ந்து, இன்று சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் அதிகப்படியான ஊதியம் பெறக்கூடிய நடிகர்களில் டாப் வரிசையில் இருப்பதும் நாம் அறிந்ததே. ஆனால், அவர் தற்போது பற்றவைத்து உள்ள பெரியார் தொடர்பான சம்பவம் நடைபெற்றபோது, அவர் தமிழகத்தில் கூட இல்லை என்பதுதான் உண்மை. இப்படியான ஒரு விஷயத்தை தான் தற்போது பேசி சர்ச்சையைக் கிளப்பிவிட்டார். நாட்டில் நிலவும் பல்வேறு விவகாரங்கள் மறந்துபோகும் அளவுக்கு இந்த விஷயத்தை பேச வைத்துள்ளார் ரஜினிகாந்த்.