தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு எங்கே? பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சொன்ன முக்கிய தகவல்
சென்னை: நடிகர் விஜய் இன்று தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அடுத்த கட்டமாக மிகப் பெரியளவில் மாநாடு ஒன்றை நடத்தவும் விஜய் திட்டமிட்டுள்ளார். மாநாடு எங்கு நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வரும் நிலையில், இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
நடிகர் விஜய் இப்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கிறார். அவரது கோட் படம் அடுத்த மாதம் ரிலீஸாக இருக்கிறது. சினிமா துறையில் டாப் இடத்தில் இருக்கும் போதே விஜய் இப்போது அரசியலுக்கு வந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் விஜய் கட்சியைத் தொடங்கியுள்ளார். இது குறித்த அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அப்போதே லோக்சபா தேர்தலுக்குப் பிறகு கட்சியின் கொடி, கொள்கைகள் வெளியிடப்படும் என்று அவர் கூறியிருந்தார்.
கட்சிக் கொடி: அதன்படி லோக்சபா தேர்தல் முடிந்தவுடன் இப்போது கட்சி பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி இன்றைய தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதற்காக பனையூரில் உள்ள அலுவலகத்தில் சுமார் 40 அடி உயரத்தில் கொடிக் கம்பம் நடப்பட்டது. திட்டமிட்டபடி இன்றைய தினம் விஜய் தனது கட்சிக் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருக்கும் இந்த கொடியில், இரட்டை போர் யானை நடுவில் வாகைப்பூ ஆகியவை உள்ளன. கட்சி கொடியை அறிமுகம் செய்யும் முன்பு, விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி மொழியையும் வாசித்தார். அதைத் தொடர்ந்து கட்சிக் கொடியை அந்த 40 அடி கொடி கம்பத்தில் ஏற்றினார். இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும், விஜய் பெற்றோரும் இதில் கலந்து கொண்டனர்.
விஜய் கட்சி மாநாடு: கொடி வெளியீட்டிற்குப் பிறகு இப்போது அனைவரது பார்வையும் விஜய் கட்சியின் மாநாடு மீது தான் இருக்கிறது. இந்த மாநாடு எங்கு நடக்கும் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. திருச்சி அல்லது மதுரையில் நடக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. சென்னையில் நடக்கவும் வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
கொடிக் கம்பங்கள்: கட்சிக் கொடி வெளியீட்டு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், "இந்த கட்சிக் கொடி வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது எங்கள் எல்லாருக்கும் சந்தோஷம்.. எங்கள் தலைவர் கொடியை அறிமுகம் செய்து வைத்து இருப்பது கட்சியில் உள்ள அனைத்து தொண்டர்களுக்கும் தோழர்களுக்கும் மிகப் பெரிய மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
விஜய் சொல்லின்படி முறையான அனுமதி பெற்றே நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களிலும் விஜய் தோழர்கள் உரிய அனுமதி பெற்றே எங்கெல்லாம் கொடிக் கம்பம் நட வேண்டுமோ.. அங்கெல்லாம் கொடிக் கம்பங்களை நடுவார்கள்" என்றார்.
மாநாடு எங்கே: அடுத்து கட்சியின் மாநாடு நடக்கும் எனச் சொல்லப்படும் நிலையில் எது எங்கே நடக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், "மாநாடு எங்கு நடக்கும், எப்போது நடக்கும் என அனைத்து தகவல்களையும் தலைவர் விஜய் அறிவிப்பார். தமிழ்நாடு முழுக்க விஜய்யின் ரசிகர்களும் தோழர்களும் இருக்கிறார்கள். எனவே, அதற்கேற்ப இடம் இருக்கும்" என்றார்.












Click it and Unblock the Notifications