கொட்டப்போகுது கனமழை.. அதுவும் இந்த 17 மாவட்டங்களில்.! வரும் நாட்களில் கிளைமேட் எப்படி இருக்கும்
சென்னை: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் வெப்பம் பரவலாக அதிகரித்து வரும் நிலையில், சுமார் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் இப்போது பரவலாக வெயில் இருந்தாலும் கூட சில இடங்களில் கடந்த சில நாட்களாகவே கணிசமாக மழை பெய்தே வருகிறது. இது வெயிலுக்கு மத்தியில் மக்களுக்கு இதமாகவே உள்ளது
இதனிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த சில முக்கிய தகவல்களைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெப்பம்
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மதுரை விமான நிலையம், கரூர் பரமத்தி, ஈரோட்டில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 69.8 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. மற்ற இடங்களில் வெப்பத்தில் பெரியளவில் மாற்றமில்லை. மழையைப் பொறுத்தவரை வால்பறை, சந்தியூர், வெள்ளக்கோவில் பகுதிகளில் தலா 80 மிமீ மழைப் பதிவாகியுள்ளது. இதேபோல மாநிலத்தில் கணிசமான இடங்களில் மழைப் பதிவாகியுள்ளது.

பலத்த காற்று
தென் இந்தியப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மார்ச் 25) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

17 மாவட்டங்களில் கனமழை
கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், இராணிப்பேட்டை, கரூர், திருச்சிராப்பள்ளி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளைய தினம் (மார்ச் 26) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30-40 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்கள்
அதேபோல மார்ச் 27, 28தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மார்ச் 29இல் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

சென்னை
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை.












Click it and Unblock the Notifications