ரஜினியின் ஓட்டு.. போட்டுத் தாக்கிய திமுகவுக்கா? கூடையில் என்ன பூ 'குஷ்பூ'வுக்கா?
சென்னை: ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதி இப்போது கூடுதலாக ஆயிரம் விளக்குகளை தன்னுள் பொருத்திக் கொண்டு ஜகஜோதியாக எரிகிறது. அவ்வளவு பளிச்.. அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் நடிகை குஷ்பூ இத்தொகுதியில் களமிறக்கப்பட, போட்டி சுவாரஸ்யமாகியுள்ளது. அனல் பறக்கிறது. ஆனால். எல்லாவற்றையும் விட முக்கியமான கேள்வி, அத்தொகுதியில் வசிக்கும் ரஜினிகாந்தின் ஓட்டு யாருக்கு என்பதே?
அரசியலில் களமிறங்குவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரஜினி, உடல்நிலையை காரணம் காட்டி கரை ஒதுங்க, அவரது ரசிகர்கள் இந்த நிமிடம் கூட ஏதாவது அதிசயம், அற்புதம் நடந்துவிடாதா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.
காரணம், 25 ஆண்டுகளாக 'அவர் வருவார்' என்ற எதிர்பார்ப்புடன், எத்தனையோ ரசிகர்கள்
காசு பணம் பார்க்காமல், குடும்பம் பார்க்காமல், நேரம் காலம் பார்க்காமல், வேலை செய்தனர். ஆனால், அவையனைத்தும் ரஜினியின் ஒற்றை அறிக்கையில் தூள்தூளாகின. சரி.. பிளாஷ்பேக்கை எதுக்கு கிளறிக்கிட்டு. விஷயத்துக்கு வருவோம்..
சென்சேஷன்
தேர்தலில் களமிறங்கவில்லை என்றாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் யாருக்கு வாக்களிக்கப் போகிறார் என்பது இன்றும் சென்சேஷன் வாய்ந்த எதிர்பார்ப்பாகும். ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக சார்பில் மருத்துவர் எழிலனும், பாஜக சார்பில் குஷ்புவும் போட்டியிட, திமுக vs அதிமுக என்ற நிலை மாறி, திமுக vs பாஜக என்று களம் சூடுபிடித்துள்ளது.
எழிலன் யாரென்று
பொதுவாக இந்த தொகுதி திமுக கோட்டை என்றாலும், இம்முறை குஷ்பூ களமிறங்கியுள்ளதால் அவரது இம்பேக்ட் எப்படி இருக்கும் என்பதை மே 2ம் தேதி தான் அறிய முடியும். எனினும், இரு வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். எழிலன், திமுக தலைமையின் குடும்ப மருத்துவர் என்பதால், அவருக்கு தொகுதியில் நல்ல செல்வாக்கு உள்ளது. ரஜினிக்கும் இவரை நன்கு தெரியும். பிரபலமான மருத்துவர்.. கருணாநிதியின் மருத்துவர் என்ற அளவில் ரஜினிக்கு தெரியும்.
ஸ்ட்ரெஸ் பஸ்டர் ரஜினி
குஷ்புவை பொறுத்தவரை நாம் எதுவும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எத்தனையோ படங்களில் ரஜினிக்கு ஹீரோயின். பெஸ்ட் ஆன் ஸ்க்ரீன் ஜோடியாக வலம் வந்தவர்கள். சினிமா மட்டுமல்ல.. அதைத் தாண்டி ரஜினி குடும்பத்துடன் எப்போதும் நெருக்கமாக இருப்பவர் குஷ்பூ. ரஜினியின் மனைவி லதாவின் பெஸ்ட் தோழிகளில் ஒருவர். எல்லாவற்றுக்கும் மேலாக குஷ்பூவின் ஸ்ட்ரெஸ் பஸ்டர்களில் ஒருவராக இருப்பவர் ரஜினி. அவ்வப்போது சில நேரங்களில் மன ஆறுதலைத் தேட, குஷ்புவின் மொபைல் எண் அலறும் மிகக் குறுகிய நட்பு வட்டத்தில் ரஜினியின் நம்பரும் ஒன்று.
அதிகார பசி
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த போது, அவரை பெரியளவில் டேமேஜ் செய்யும் பணியை ஆவிபறக்க செய்த கட்சிகளில் டாப் இடத்தில் இருந்தது திமுக தான். அதிமுக வாலண்டரியாக ரஜினியை எந்த இடத்திலும் உரசவில்லை. பேட்-ஐ நோக்கி வந்த பந்துகளை மட்டும் டிஃபன்ஸ் ஆடினார்கள். ஆனால், ரஜினியின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் தோண்டியெடுத்து, மேடைக்கு மேடை, வீதிக்கு வீதி பந்துகளை 'அவுட் ஆஃப் தி ஸ்டேடியம்' பறக்க விட்டுக் கொண்டிருந்தது திமுகவினர் தான். காரணம், 10 வருடங்களாக கிடைக்கப்பெறாத அதிகார பசிக்கு, இம்முறை ஃபுல் மீல்ஸ் கட்ட வேண்டும் என்ற முயற்சியில் உறுதியாக இருந்த திமுகவுக்கு 'டயட்டீஷியன்' ரோலில் பெரும் அச்சுறுத்தலாக இருந்தது ரஜினி மட்டும் தான்.
கொரோனாவுக்கு நன்றி
இன்னும் சொல்லப்போனால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த இரண்டு மூன்று வருடங்களாக பெரும் தலைவலியாக, வெளியே சொல்ல முடியாத புலம்பலாக இருந்தது ரஜினி எனும் ஃபேக்டர் தான். மற்றவர்கள் எல்லாம் அப்புறம் தான். ரஜினி களத்திற்குள் வந்தால், திமுக, அதிமுக என்று பல கட்சிகளின் வாக்குகளும் சிதறும் என்பதால் ஏற்பட்ட கலக்கம் அது. ஆனால், அனைத்திற்கும் ரஜினியே முற்றுப்புள்ளி வைக்க, போட்டியாக கருதிய அனைவரும் 'கொரோனா'வுக்கு நன்றி சொல்லி, ரிலாக்ஸ் மோடுக்கு திரும்பி, தங்கள் தேர்தல் பணிகளை கவனித்து வருகின்றனர்.
பாஜகவுக்கா?
அந்த வகையில் ரஜினியின் ஆதரவு என்பது, தான் அரசியலுக்கு வரேன் என்று சொன்ன போது கடுமையாக.. மிகக் கடுமையாக அடிமட்ட லெவலில் இறங்கி விமர்சனம் செய்த திமுகவுக்கா, அல்லது 'கூட்டிக் கழிச்சு பாரு.. கணக்கு சரியா வரும் கண்ணு' என்று கிடைக்கின்ற கேப்பில் எல்லாம் திமுகவுக்கு ஆப்பு வைக்க கூட்டணி கணக்கு போட்டுக்கொண்டிருந்த பாஜகவுக்கா என்பதே பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
நம்மவருக்கு ஆதரவா?
குஷ்புவோ, 'ரஜினியின் ஆதரவு எனக்கு கண்டிப்பாக கிடைக்கும்' என்று வெளிப்படையாக கூற, எழிலனோ, 'அவரு யாருக்கு வேணாலும் ஓட்டு போடட்டும்' மோடில் இருக்கிறார். நட்பின் அடிப்படையில் பார்த்தால் ரஜினியின் ஓட்டு, குஷ்புவுக்கு கிடைக்கும் எனலாம். ஆனால், ரஜினிக்கு வேறு பிளான் இருக்கிறது என்கிறார்கள் சிலர். ஆம்! திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என இருவருக்குமே வாக்களிக்காமல், வேறு ஒரு புதியவருக்கு வாக்களிக்கலாம் என்ற எண்ணம் ரஜினிக்கு இருப்பதாக கூறுகின்றனர். குறிப்பாக, நண்பர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தையும் ரஜினி பரிசீலனையில் வைத்திருப்பதாக கூறுகின்றனர்.
அது உறுதி
ஆனால் ஒன்று மட்டும் உறுதி. ரஜினி யாருக்கு ஆதரவு தருகிறாரோ இல்லையோ.. நிச்சயம் ஓட்டு போடுவதற்கு சென்னையில் இருப்பார் என்றும், வாக்குப்பதிவு முடிந்த பிறகு, அவர் சென்னையில் சிறிது நாட்கள் இருக்க மாட்டார் என்கின்றது ரஜினிக்கு நெருக்கமான வட்டம்.