“லிஸ்ட்டில் உங்க ஏரியா?” மூடப்பட இருக்கும் 500 டாஸ்மாக் கடைகள் எவை எவை? வேலையை ஆரம்பித்த அதிகாரிகள்!
சென்னை : சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்ட '500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும்' என்ற அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் விதமாக, மூடவேண்டிய தகுதிவாய்ந்த 500 கடைகளை அடையாளம் காணுவதற்காக கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது 9 புதிய அறிவிப்புகளை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார். அப்போது, தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 5,329 மதுபான சில்லரை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் தகுதியான 500 டாஸ்மாக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவித்தார்.

500 டாஸ்மாக் கடைகள் : இதையடுத்து, மூடப்பட இருக்கும் தகுதிவாய்ந்த டாஸ்மாக் கடைகள் எவ்வாறு அடையாளம் காணப்படும் எனக் கேள்விகள் எழுந்தன. வியாபாரம் குறைவாக இருக்கும் கடைகள், எதிர்க்கட்சியினர் நடத்தும் கடைகள் மட்டுமே மூடப்படக்கூடும் என்ற விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான முதற்கட்டப் பணிகளைத் தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசு. அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் வகையில், மூடப்பட வேண்டிய 500 டாஸ்மாக் கடைகளை கண்டறிவதற்கான கணக்கெடுப்பை தொடங்கியுள்ளது தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை.
50 மீட்டருக்குள் இருந்தால் : 50 மீட்டர்களுக்கு இடையே இருக்கக்கூடிய கடைகள், வருவாய் குறைந்த கடைகள், பள்ளிகள், கோயில்களுக்கு அருகே உள்ள கடைகள் போன்றவற்றை கணக்கெடுக்கும் பணிகள் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆய்வுகளின் முடிவில் 500 கடைகள் இறுதி செய்யப்பட்டு அவை மூடப்படும் என்று கூறப்படுகிறது.

திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மது விருந்து நடத்த அனுமதியளிக்கும் வகையில் அரசாணை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. இந்த விவகாரம் திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களைக் கிளப்பிய நிலையில், 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பணிகளில் தமிழ்நாடு அரசு தீவிரமாக இறங்கியுள்ளது கவனம் பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications