இன்று உருவாகும் சக்கரம்.. கிங் மேக்கரால் உருவாக போகும் முதல் புயல்? வர்தாவை நினைவுபடுத்திய வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அடுத்து வரும் காலத்தில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்கள் தமிழ்நாடு வெதர்மேன் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த அக். மாத இறுதியில் வடகிழக்கு பருவ மழை தொடங்கியது. அதைத் தொடர்ந்து நவ. மாதம் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இருப்பினும், அதன் பிறகு பெரியளவில் மழை பெய்யவில்லை. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சற்று குறைவாக உள்ளதாக வானிலை மையங்கள் கூறுகிறது.

வடகிழக்கு பருவ மழை
கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் நல்ல மழை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், அது மிக மெதுவாகக் கரையை நோக்கி நகர்ந்தது. இதனால் கரையை அடையும் முன்னரே அது வலுவிழந்துவிட்டதால், பெரியளவில் மழை கிடைக்கவில்லை. அதேபோல வடகிழக்கு பருவமழை தொடங்கி சுமார் 1.5 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், இன்னுமே கூட புயல் எதுவும் உருவாகவில்லை. இதன் காரணமாக மழை பெரியளவில் இல்லாமலேயே இல்லாமலேயே இருந்தது.

அடுத்த காற்றழுத்தம்
இந்தச் சூழலில் இப்போது தமிழகத்தில் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி உள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நாளை, டிச. 5ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாகவே இப்போது தமிழ்நாட்டில் பரவலாக சில பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்து 48 மணி நேரத்தில் நகரத் தொடங்கும் என்றும் இது தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியை அடையும் போது வலிமை பெறும். இதன் காரணமாக வடதமிழக மாவட்டங்களில் நல்ல மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன.

இன்று உருவாகும் சக்கரம்
இதற்கிடையே இந்த காற்றழுத்தம் புயலாக மாற அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில், "சக்கரம் இன்று உருவாகிறது.. இப்போது ஆரம்ப நிலையில் இருக்கும் இது தாய்லாந்து வளைகுடாவில் இருந்து அந்தமான் கடலுக்குள் நகரும்... 4 நாட்களில் அதாவது 8ஆம் தேதி இது தமிழக கடற்கரையை நெருங்கும்... மகாபலிபுரம் முதல் காரைக்கால் வரை தற்போது கனமழை இருக்கும்.. பாண்டிச்சேரி முதல் கடலூரில் நல்ல மழை பெய்யும்.

கிங்மேக்கர்
இப்போது நிலவும் போக்குகள் வைத்துப் பார்க்கும் போது.. நமது கடலில் உள்ள கிங்மேக்கர் Madden-Julian Oscillationஐ தீவிரப்படுத்தச் சூடான கடல் உதவுகின்றன.. இது இந்த வடகிழக்கு பருவமழை காலத்தின் முதல் புயலாக மாற அதிக வாய்ப்பு உள்ளது. ஆனால் வறண்ட காற்றின் காரணமாக இது கரையை நெருங்கி வலுவிழக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக வட தமிழகம் பாதிப்புக்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது.

சென்னை புயல்
சென்னையில் கடந்த 30 ஆண்டுகளில் 2 முறை மட்டுமே மணிக்கு 100 கிமீ வேகத்தில் காற்று வீசியுள்ளது. 1994 அக்டோபர் புயல் சமயத்திலும் 2016 வர்தா காலகட்டத்திலும் அந்த வேகத்தில் காற்று வீசியது. உடனே எதையும் கற்னை செய்து கொள்ள வேண்டாம். வரவிருக்கும் சக்கரம் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும். இவை புள்ளிவிவரங்கள் மட்டுமே" என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறியுள்ளதைப் போல இது புயலாக மாறினால், வடதமிழக பகுதிகளில் இந்த பருவமழை காலத்தில் கடைசியாக நல்ல மழை கிடைக்க உள்ளது.

மழை
தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர் திருவள்ளூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை. ராமநாதபுரம், கன்னியாகுமரி என 16 மாவட்டங்களில் மிதமான மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications