"கெத்து".. கமலை ஓவர்டேக் செய்வாரா சீமான்.. "அந்த" இடம் யாருக்கு.. ரிசல்ட்டை நோக்கி தமிழகம்..!
3வது இடத்தை எந்த கட்சி பிடிக்க போகிறது என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது
சென்னை: இந்த முறை அதிமுக, திமுகவுக்கு அடுத்தபடியாக 3வது இடத்தை பிடிக்க போவது எந்த கட்சி என்ற ஆவல் எகிறி வருகிறது.. அந்த வகையில் லிஸ்ட்டில் தினகரன், கமல், சீமான் மூவரும் மிகுந்த எதிர்பார்ப்பை நித்தம் ஏற்படுத்தி வருகிறார்கள்.
நாம் தமிழர் கட்சி சீமான், மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன், அமமுக டிடிவி தினகரன், இவர்கள் 3 பேரும் பிரிக்க போகும் வாக்கு யாருடைய வாக்கு? யார் யாருக்கு அவை சாதகமாக, பாதகமாக இருக்க போகிறது? இந்த 3 பேரில் தமிழகத்தின் 3வது பிரதான கட்சியாக அலங்கரிக்க போவது யார்? என்ற ஆர்வத்தில் தமிழகம் காத்துள்ளது.
போன தடவையே மாடு மாதிரி ஆகிட்டோம்.. இந்த தடவை வெடிச்சுடுவோமோ.. இப்டியும் ஒரு கவலையா?
இதில், அதிமுகவின் வாக்குகளையே டிடிவி தினகரன் பிரித்திருப்பார் என்பது தெரிந்த விஷயம்தான்.. உள்ளாட்சி தேர்தலில் அமமுக பெற்ற வாக்கு சதவிதம் அதிமுகவையே மலைக்க வைத்து, 3வது இடத்தை பிடித்ததையும் மறுக்க முடியாதுதான்.
அணுகுமுறை
அந்த வகையில், இந்த முறை தினகரனின் தனிப்பட்ட அணுகுமுறை, வீட்டில் ஒருவருக்கு வேலை உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்ததையும் காண முடிந்தது.. எனவே, தேர்தலிலும் தினகரன் 3வது இடத்தை பெறுவார் என்ற நம்பிக்கை அந்த கட்சி தொண்டர்களிடம் எழுந்துள்ளது. அதேசமயம், திமுகவின் வாக்குகளைதான் கமல், சீமான் வாக்குகள் பிரித்தனவா என்பதையும் உறுதியாக சொல்ல முடியவில்லை என்று அரசியல் நோக்கர்கள் சொல்லி வருகிறார்கள். ஆனால், இந்த முறை தேர்தலில் சில உத்திகளை கமலும், சீமானும் கையாண்டுள்ளனர் என்கின்றனர்.
வியூகம்
இதில், கமலைவிட ஒரு படி மேலே சீமானின் வியூகம் பெரிதும் கைகொடுக்கும் என்றும் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். இதற்கு காரணம், கமலை பொறுத்தவரை எம்பி தேர்தலுக்கு பிறகு, இது 2வது முறையாக சந்திக்கும் தேர்தல்.. உள்ளாட்சி தேர்தல் உட்பட, இடைத்தேர்தல்களில் மய்யம் போட்டியிடவில்லை.. ஆனால், சீமானோ, எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறார். அதுவும் தனித்தே போட்டியிட்டு வருகிறார். அந்த வகையில், ஒரு பரவலான, தேர்தல் கட்டமைப்பு சீமானுக்கு எப்போதுமே இருந்து வருகிறது..!
நாங்குநேரி
அதுமட்டுமல்லாமல், நாங்குநேரி ராதாபுரம் தொகுதியில் வேட்பாளரை நிறுத்திய புதுமையையும் இந்த முறை சீமான் கையாண்டுள்ளதால், கமலை இந்த விஷயத்தில் ஓவர்டேக் செய்துவிட்டதாகவே பார்க்கப்பட்டு வருகிறது... ஆனால், மய்யம், கூட்டணி கட்சிகளுக்கு 100 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்கிவிட்ட நிலையில், 154 இடங்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளது.. நாம் தமிழர் கட்சியோ அனைத்து இடங்களிலுமே களம் காணுவதால், சீமானுக்கு நிலையாக ஓட்டுப் போடுபவர்கள் இந்த முறையும் போட்டிருப்பார்கள், இதுவும் அவருக்கு ஒரு பிளஸ்தான் என்கின்றனர்.
இளைஞர்கள்
மற்றொரு புறம், சீமானின் பேச்சினால் மட்டுமே கவரப்பட்ட இளைஞர்கள் பலர் அவருக்கு வாக்களித்ததாக தகவல்கள் வந்தன. கிராமப்புற இளைஞர்களின் வாக்குகள் சீமானுக்கு அதிகளவில் விழுந்ததாகவும், ஆனால், நகர்புற இளைஞர்களின் வாக்குகள் சீமானுக்கும், கமலுக்கும் பிரித்து விழுந்ததாகவும் சொல்லப்பட்டது.
தேமுதிக
இதில், கமலை பொறுத்தவரை, இந்த முறை மய்யத்துக்கான வாக்கு வங்கி சதவீதம் அதிகரிக்குமாம்.. இதற்கு காரணம், தேமுதிக போட்டியிடும் இடங்களில், கமல் கூட்டணி 2வது இடத்தை பெறுவதற்கான சாத்தியங்கள் நிறைய இருப்பதாக கருதப்படுகிறது.. தேமுதிகவுக்கு அன்று இருந்த செல்வாக்கு இப்போது இல்லாததால், தேமுதிக - அமமுக கூட்டணி இடங்களில் கிட்டத்தட்ட 35 முதல் 40 தொகுதிகள் வரை மக்கள் நீதி மய்யம், 2 வது மற்றும் 3 வது இடங்களை பெறும் என்று அரசியல் நோக்கர்கள் சொல்கிறார்கள்.
எதிர்பார்ப்பு
ஆனால், எவ்வளவுதான் கணித்து பேசினாலும், கோவை தெற்கு பகுதியில் இப்போதுவரை யார் வெற்றி பெற போகிறார்கள் என்பதை மட்டும் உறுதியாக சொல்ல முடியாத நிலையில் உள்ளதாம். ரிசல்ட்டுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், யார் 3வது இடத்தை பிடிக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு பெருகி கொண்டே இருக்கிறது.. பார்ப்போம்..!