உதயநிதிக்கு இந்த துறை தானாமே! அமைச்சர்களின் ‘லகான்’ அவர் கையில்.. ஸ்டாலின் போடும் அதிரிபுதிரி கணக்கு
சென்னை : உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி கொடுப்பது இந்த முறை உறுதி என தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், எந்த துறையை அவருக்கு வழங்குவது என்பதில் முதல்வர் ஸ்டாலின் சில அதிரடி கணக்குகளைப் போட்டிருக்கிறாராம்.
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் என்ன துறை அளிக்கப்படவுள்ளது என்பதில் 2 துறைகள் ஸ்டாலினின் பரிசீலனையில் இருந்ததாகவும், அதில் ஒன்றை முதல்வர் முடிவு செய்துவிட்டார் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.
விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறை அல்லது சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை ஆகியவைதான் உதயநிதி ஸ்டாலுனுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்காக துறை செயலர்கள் வரை முடிவு செய்யப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.

உதயநிதி
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்தது முதல் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெறப் போகிறார் என்ற பேச்சு அவ்வப்போது எழுந்து வந்தது. மீண்டும் கட்சி மீது வாரிசு அரசியல் சாயம் பூசப்படும் என்பதால் இப்போதைக்கு வேண்டாம் என முதல்வர் ஸ்டாலின் மறுத்து வந்தாலும், உதயநிதி ஸ்டாலின் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என அமைச்சர்கள் முதல் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏக்கள் வரை தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டேயிருந்தனர்.

அமைச்சராவது உறுதி
உதயநிதி ஸ்டாலினை அமைச்சராக்க வேண்டும் என குடும்பத்திற்குள்ளேயே பிரஷர் இருந்தபோதும் இத்தனை காலமாக தவிர்த்து வந்த முதல்வர் ஸ்டாலின் இப்போது, பச்சைக்கொடி காட்டி விட்டதாக கோட்டை வட்டாரம் பரபரக்கிறது. டிசம்பர் 14 முதல் 16ஆம் தேதிக்குள் உதயநிதி அமைச்சராவது உறுதி என்ற பேச்சு அறிவாலயம் பற்றும் கோட்டை வட்டாரங்களில் எழுந்திருக்கிறது. இதற்கு முன்பும் சில முறை இப்படி பேச்சுகள் எழுந்திருக்கின்றன. அப்போதெல்லாம் பேச்சளவிலேயே இருந்தது.

முதல்வர் பச்சைக்கொடி
ஆனால், இந்த முறை துறைக்கு செயலாளராக யாரை நியமிப்பது, என்ன துறையை வழங்குவது என்ற ஆலோசனைகள் கடந்த சில நாட்களாக தீவிரமாக நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தான் இப்போது உதயநிதி அமைச்சராவது உறுதி என்கிறார்கள். 2024 லோக்சபா தேர்தலுக்குப் பிறகு உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்ற முடிவில் ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், இப்போதே பொறுப்பைக் கொடுத்தால் தான் தேர்தலுக்குள் கட்சியை இன்னும் பலப்படுத்த முடியும் என்றெல்லாம் யோசனைகள் கூறி முதல்வரை சம்மதிக்க வைத்திருக்கிறார்களாம்.

என்ன துறை
உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் என்ன துறை அளிக்கப்படவுள்ளது என்பதில் 2 துறைகள் ஸ்டாலினின் பரிசீலனையில் இருந்ததாகவும், அதில் ஒன்றை முதல்வர் முடிவு செய்துவிட்டார் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன. அதில் முதல் சாய்ஸ், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையாம். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதனிடம் இருக்கும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் துறையை மட்டும் பிரித்து உதயநிதிக்குக் கொடுத்துவிடலாம் என யோசனை இருக்கிறதாம்.

இளைஞர் நலன்
கட்சியில் இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி, கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 30 லட்சம் இளைஞர்களை அணியில் சேர்த்துள்ளார். இளைஞர்களை கட்சி நோக்கி ஈர்க்கும் பணிகளில் வேகம் கூட்ட இந்த துறையை உதயநிதிக்கு கொடுப்பது உதவும் என்பது ஸ்டாலினின் கணக்காம். மேலும், இந்த துறையை உதயநிதிக்கு கொடுத்தால் இளைஞர்களை அவர் சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். பெருவாரியாக உள்ள இளைய சமுதாயத்தின் வாக்குகளைக் கவர தேர்தலில் பெரிதும் பயன்படும் எனக் கணக்குப் போட்டிருக்கிறாராம்.

விளையாட்டுத்துறை
234 சட்டமன்றத் தொகுதிகளிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என சட்டமன்றத்திலேயே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதியிலும் விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னைக்கு அருகில் விளையாட்டு நகரம் அமைக்கும் பணியும் நடைபெற உள்ளது. இந்தத் துறைக்கு அமைச்சரானால் அந்த வேலைகளை ஆய்வு செய்வதுபோல அனைத்துத் தொகுதிகளிலும் கவனம் செலுத்த முடியும் என்ற திட்டம்தான், உதயநிதிக்கு இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தன் பின்னணி என்கிறார்கள்.

சிறப்பு திட்ட செயலாக்கத்துறையை
முதல்வர் ஸ்டாலினின் கையில் இருக்கும் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையை உதயநிதி ஸ்டாலினுக்குக் கொடுக்கலாம் என்ற யோசனையும் முதல்வர் ஸ்டாலினுக்கு இருக்கிறதாம். அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்புத் திட்டங்களும் இந்த துறை வாயிலாகவே ஒருங்கிணைப்படுகின்றன. இந்த துறையை உதயநிதிக்கு கொடுத்தால், எல்லா துறையையும் கவனிக்கும் 'லகான்' உதயநிதி கையில் இருக்கும் என்கிற கணக்கும் தலைமைக்கு இருக்கிறதாம். முதல்வர் ஸ்டாலின் தனிச் செயலாளராக இருக்கும் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ் தான் சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயலர் என்பதால், சிக்கலே இருக்காது என்ற பாயிண்டும் இருக்கிறதாம்.

இடம் கூட ரெடி
தலைமை செயலகத்தில் தரை தளம், முதல் மாடி, 2வது மாடி, 3வது மாடிகளில் அமைச்சர்களுக்கு இலாகா வாரியாக தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தலைமை செயலகத்தில் 10-வது கேட் நுழைவு வாயில் அருகே உள்ள ஒரு அறை வேகமாக தயாராகி வருகிறது. அதேபோல் 2-வது மாடியிலும் ஒரு அறை முழுவீச்சில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. உதயநிதிக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்காகவே இந்த ரெனோவேஷன் வேலைகள் நடப்பதாகப் பேசப்படுகிறது.

ஐ.ஏ.எஸ் அதிகாரி
அமைச்சர் ஆனபிறகு உதயநிதி ஸ்டாலினுக்கு கட்சி ரீதியாகவும் நிறைய திட்டங்கள் இருப்பதால், அவருக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையிலும், சிறப்பாக துறையை வழிநடத்தும் வகையிலும், திறமையான ஐஏஎஸ் அதிகாரியை அவரது துறையின் செயலாளராக நியமிக்க ஸ்டாலின் தயாராகி வருகிறாராம். அந்த வகையில், உதயநிதி ஸ்டாலினுக்காக துறையை சிறப்பாக கவனிக்கும் பொறுப்புக்கு தற்போதைய சென்னை மாநகர மேயர் ககன்தீப் சிங் பேடியை கொண்டு வர முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ககன்தீப் சிங் பேடி
தமிழக கேடர் அதிகாரிகளில் ககன் தீப் சிங் பேடி, நிர்வாகத்திறமையும், நீண்டகால அனுபவமும் கொண்டவர். சுனாமி காலகட்டத்தில் கடலூரில் பணியாற்றிய ககன் தீப் சிங் பேடிக்கு மாவட்ட பொதுமக்களே பாராட்டி பேனர் வைத்தனர். அந்தளவுக்கு மக்கள் அபிமானமும் பெற்றவர், எந்த முறைகேடுகளிலும், சர்ச்சைகளிலும் சிக்காதவர். அவருக்குக் கீழே இருக்கும் அதிகாரிகளையும் திறமையாக வேலை வாங்கக் கூடியவர், அந்த வகையில் அவரை உதயநிதியின் துறைக்கு செயலராக்கினால் சிறப்பாக செயலாற்றுவார் என முடிவெடுத்திருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications