கொளுத்தும் வெயிலுக்கு நடுவே குளுகுளு மழை! 2 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை இருக்கு! வானிலை மையம் தகவல்
நாளை மற்றும் நாளை மறுநாள் சில மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த பிப். மாதமே வெப்பம் சற்று அதிகமாகவே இருந்து வந்தது. இதனிடையே வரும் நாட்களில் எந்த மாவட்டங்களில் மழை பெய்யும் என்பது குறித்து வானிலை மையம் அறிக்கை பகிர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது. வடகிழக்கு பருவமழை ஜன, மாதம் முடிவடைந்த நிலையில், அதன் பின்னர் மாநிலத்தில் பெரியளவில் மழை இல்லை.
இருப்பினும், வடகிழக்கு பருவமழை சிறப்பாகப் பெய்ததால் அப்போதே பெரும்பாலான நீர்பிடிப்பு பகுதிகள் நிரம்பிவிட்டது. இதனால் கோடைக் காலத்தில் தண்ணீர் பிரச்சினை இருக்காது என்றே கூறப்படுகிறது.

வானிலை
தமிழ்நாட்டில் இப்போது பிப். மாதமே பல இடங்களில் வெப்பம் அதிகரித்துவிட்டது. பல இடங்களில் இயல்பு நிலையில் இருந்து அதிகமான வெப்பமே காணப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப நிலை 4.1 செல்சியசுக்கு அதிகமாக உயர்ந்துள்ளது. அதேபோல மதுரையிலும் வெப்பம் சற்று அதிகமாகவே இருந்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் எங்கும் பெரியளவில் மழை இல்லை.

மழை இருக்கு
தமிழ்நாட்டில் இன்று (பிப்.3) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் அடுத்த இரண்டு நாட்கள் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

எங்கெல்லாம் மழை
நாளை (பிப்.4) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும். நாளை மறுநாள் (பிப்.5) தென்தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். பிப். 6 மற்றும் பிப். 7 தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னை
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு பொதுவாக வானம் தெளிவாகக் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல வரும் நாட்களில் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications