5வது இடத்தில் ‘குஜராத் மாடல்’ ; 2வது ‘திராவிட மாடல்’- வேலைவாய்ப்பில் எந்த மாநிலம் டாப்?
சென்னை: திமுக கடந்த இரண்டரை ஆண்டுகால ஆட்சியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் ஒன்றரை லட்சம் வேலைவாய்ப்புக்கான பணியாணைகளை வழங்கி இருப்பதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்திருந்தார்.
திமுக தனது 2021 தேர்தல் அறிக்கையில் ஆண்டுக்குப் பத்து லட்சம் வேலைவாய்ப்புகள் என்ற அளவில் 2026க்குள் 50 லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கிய தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறி இருந்தது.

அதைப்போலவே அரசுத் துறைகளில் 5.50 லட்சம் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் பணியிடங்களில் இளைஞர்கள் நியமிக்கப்படுவர் என்றும் வாக்குறுதி அளித்திருந்தது.
அதைப்போலவே தமிழகத்திலுள்ள நீர்நிலைகள், ஆறுகள், குளங்கள், ஏரிகள், ஓடைகள் உள்ளிட்ட அனைத்து நீர்வளங்களையும் வனம் உள்ளிட்ட இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும் கண்காணிக்கவும் அவை தொடர்பாக அரசின் சார்பாகத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 75 ஆயிரம் இளைஞர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.
அதில் 30 ஆயிரம் இடங்கள் பெண்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டும் என்றும் திமுக 2021 தேர்தல் அறிக்கையில் 187 ,188, 189 ஆகிய எண்களில் இந்த வாக்குறுதிகளை திமுக வழங்கி இருந்தது.

இந்த வாக்குறுதிகளை எந்தளவுக்கு திமுக நிறைவேற்றி உள்ளது? அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எத்தனை இளைஞர்களுக்கு திமுக ஆட்சியில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்ற விவரத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலத்தில் நடைபெற உள்ள திமுக இளைஞரணி மாநாட்டில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் சில மாதங்கள் முன்பே கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த அரசியல் விவாதங்களுக்கு இடையே நவம்பர் 2023க்கான PFO Payroll Report இப்போது வெளியாகி இருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்புகள் உயர்ந்துள்ளதா? அல்லது குறைந்துள்ளதா என்பது பற்றிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அந்த முதல் அரையாண்டுக்கான அறிக்கையில் மிக முக்கியமான தகவல் என்னவென்றால், தமிழ்நாட்டில் புதியதாக வேலைவாய்ப்பு பெற்றவர்களில் 18 வயதிற்கும் குறைவானவர்கள் மிக அதிகம் உள்ளனர். செப்டம்பர் மாதம் PFO Payroll அறிக்கையின்படி இந்த மாதம் மட்டும் 1499 பேருக்குப் புதியதாக வேலை கிடைத்துள்ளது.

அதே ஏப்ரல் மாதம் இதன் எண்ணிக்கை இன்னும் கூடுதலாக இருந்துள்ளது. அதாவது, ஏப்ரலில் 2700 பேருக்குப் புதியதாக வேலையில் இணைந்துள்ளனர். மே மாதம் 2039 பேரும் ஜூன் மாதம் 2141 பேரும் ஜூலை மாதம் 1832 பேரும் ஆகஸ்டில் 1613 பேரும் வேலைகளில் இணைந்துள்ளனர்.
ஆக, ஏப்ரல் மாதம் வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை உச்சத்திலிருந்துள்ளது.

இதே வயது வரம்பில் வேலைவாய்ப்பு அதிகம் பெற்றவர்களின் மாநிலப் பட்டியலில் மகாராஷ்டிரா 2வது இடத்தில் உள்ளது.
மகாராஷ்டிராவில் இந்த நிதியாண்டு ஏப்ரல் மாதம் 1097 பேர் புதியதாக வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இந்த நிலை அப்படியே படிப்படியாகக் குறைந்து செப்டம்பர் மாதம் 661 பேர் என்ற அளவில் சுருக்கி இருக்கிறது. 18 வயதுக்கான இந்தப் பட்டியலில் குஜராத் மூன்றாவது இடத்தில் உள்ளது. செப்டம்பர் நிலவரப்படி 559 பேருக்கு புதியதாக அம்மாநிலத்தில் வேலைக்கிடைத்துள்ளது.

அப்படி என்றால் இவ்வளவு பேருக்குத்தான் வேலையே கிடைத்துள்ளதா? என்று பலருக்கும் சந்தேகம் எழலாம். அதாவது இந்த அறிக்கையானது முறையாகப் பதிவு செய்து ஓய்வூதியத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட நிறுவனங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொண்டுள்ளது.
இந்த ஓய்வூதிய திட்டத்திற்குள் வராமல் பல நிறுவனங்கள் புதியதாக ஆட்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டுதான் உள்ளது. ஆனால், அந்த எண்ணிக்கை அரசின் இந்த அதிகாரப்பூர்வமான பட்டியலுக்குள் வராது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
18 வயதுக்குள்ளானவர்களின் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது லடாக். அங்கே செப்டம்பர் மாத பதிவின்படி ஒருவர்கூட இல்லை. அதைப்போலவே மிசோரமில் ஆகஸ்டில் ஒருவர் பணியில் இணைந்துள்ளார். செப்டம்பரில் நிலைமை இந்த மாநிலத்திலும் பூஜ்ஜியமாக உள்ளது.

இந்த வயது வரம்புக்கான பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது உத்தரப் பிரதேசம். அங்கே ஏப்ரலில் வேலைப்பெற்றவர்கள் 367 பேர். அப்படியே குறைந்து செப்டம்பரில் 288 ஆகியுள்ளது. உ.பிக்கு கீழே 3 இடங்கள் தள்ளி உள்ளது டெல்லி. அங்கே செப்டம்பர் நிலவரப்படி பணியில் இணைந்தவர்கள் வெறும் 180தான்.
அடுத்து 18 வயது முதல் 21 வயது வரையிலான பட்டியலில் தமிழ்நாட்டு 2வது இடத்தில் உள்ளது. முதல் இடத்தில் மகாராஷ்டிரா உள்ளது. ஏப்ரல் நிலவரப்படி இம்மாநிலத்தில் 49488 பேர் வேலையில் இணைந்துள்ளனர். அது அப்படியே செப்டம்பரில் 67370 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரலில் 25613 பேர். அது செப்டம்பரில் 37729 ஆக உயர்ந்துள்ளது. அப்படி என்றால் இடைப்பட்ட மாதங்களில் இந்த எண்ணிக்கை இன்னும் குறைந்துள்ளதா? என்று கேட்டால், அதான் இல்லை. செப்டம்பரைக் காட்டிலும் ஜூன், ஜூலை, ஆகஸ்டில் இந்த இரண்டு மாநிலங்களிலும் கூடுதலாக வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர்.
இந்த நிலை 22 வயது முதல் 25 வயது வரையான பட்டியலில் மாற்றம் கண்டுள்ளது. 2வது இடத்திலிருந்த தமிழ்நாடு 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை விட முன்னேறி 2வது இடத்தில் கர்நாடகா உள்ளது. வழக்கம் போல மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது.
இந்த மாநிலத்தில் செப்டம்பர் நிலவரப்படி 90842 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். அதே மாதம் கர்நாடகாவில் 45974 பேரும் தமிழ்நாட்டில் 41520 பேரும் வேலைவாய்ப்பை உறுதி செய்துள்ளனர்.

அடுத்ததாக 26 முதல் 28 வயது வரம்புக்கான பட்டியலிலும் மகாராஷ்டிராதான் முதலில் உள்ளது. அடுத்து கர்நாடகா. மூன்றாம் இடம் குஜராத். 4வது இடமாகத்தான் தமிழ்நாடு வந்துள்ளது. முதல் இடத்தில் உள்ள மாநிலத்தில் செப்டம்பர் நிலவரப்படி 53721 பேர் வேலையில் இணைந்துள்ளனர். தமிழ்நாட்டில் அதே மாதம் 21637 பேர் இணைந்துள்ளனர்.
இப்படி 29 முதல் 35 வரை மற்றும் 35க்கு மேலான வயது வரம்புக்கான பட்டியலிலும் தொடர்ந்து மகாராஷ்டிராதான் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. 29-35 க்கான வயது வரம்புக்கான பட்டிலில் தமிழ்நாடு 3வது இடம்.

35வயதுக்கு மேலானவர்களின் பட்டியலில் தமிழ்நாடு 2வது இடத்திலும் உள்ளது.
அதாவது செப்டம்பர் நிலவரப்படி நம் தமிழ்நாட்டில் 35வயதுக்கு மேலானவர்களில் 36805 பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது இந்த நிதியாண்டுக்கான முதல் அரையாண்டில் மகாராஷ்டிராவில் புதிய வேலைவாய்ப்புகளை 18.29 லட்சம் பேர் பெற்றுள்ளனர். இந்தியாவிலேயே இதுதான் அதிக எண்ணிக்கை. ஆகவே இம்மாநிலம் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ள கர்நாடகாவில் இதே நிதியாண்டில் 9.89 லட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 9.18 லட்சம் பேரும் ஹரியானாவில் 7.27 லட்சம் பேரும் குஜராத்தில் 7.19 லட்சம் பேரும் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
இதில் கவனிக்கவேண்டியது என்னவென்றால், 'குஜராத் மாடலை'விட 'திராவிட மாடல்' முன்னணியில் உள்ளது.












Click it and Unblock the Notifications