சென்னை - செங்கல்பட்டு ரயில்கள் ரத்து.. பொதுமக்கள் சிரமத்தை தவிர்க்க.. கூடுதல் பேருந்துகள் இயக்கம்
சென்னை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மக்களும் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக சென்னையில் தங்கி வசித்து வருகின்றனர். குறிப்பாக தென்மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். அதேபோல் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் ஏராளமாக சென்னையில் தங்கி வேலை செய்து வருகின்றனர்.

பண்டிகை, விடுமுறை என எல்லா தேவைகளுக்கும் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்கு ரயில் போக்குவரத்து சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. ஒரு நாள் ரயில் சேவை பாதித்தாலும் சென்னையே ஸ்தம்பித்துவிடும். அந்த அளவுக்கு ரயில் போக்குவரத்தை நம்பியே இங்குள்ள மக்கள் உள்ளனர்.கல்வி, வேலைவாய்ப்பு, வர்த்தகம், மருத்துவம், சுற்றுலா என பல்வேறு காரணங்களுக்காக சென்னையை நோக்கி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் வருகின்றனர்.
பல ஆயிரக்கணக்கான மக்களும் தினமும் சென்றுவர மிகப்பெரிய போக்குவரத்து கட்டமைப்புக்கு தெற்கு ரயில்வே முக்கியப் பங்காற்றி வருகிறது. சென்னையின் புறநகர் பகுதி மக்களை நகரத்துக்கு செல்ல பெரும்பாலும் மின்சார ரயில் சேவையே பயன்படுத்தி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் சுமார் 20-25 லட்சம் பயணிகளை சென்னை புறநகர் ரயில்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சேர்க்கின்றன.
இந்நிலையில், ரயில்களைப் பராமரிக்கும் வகையில் குறிப்பிட்ட இடைவெளியில் ரயிலில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும். பராமரிப்புக்காக அவ்வப்போது ரயில்கள் சேவை ரத்து செய்யப்படுகின்றன. அந்த வகையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் 28 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தாம்பரம் - கடற்கரை இடையே 14 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இரு மார்க்கங்களிலும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 200 ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்நிலையில், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக மாநகரப் பேருந்துகள் இயக்கப்படும் என்று மாநகரப் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மக்கள் தொடர்பு இணை இயக்குநர், மாநகர் போக்குவரத்துக் கழக இணை இயக்குநர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, திருமால்பூர், காஞ்சிபுரம், அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேற்கண்ட இடங்களில் இருந்து கடற்கரைக்கு வரும் ரயில்களின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. புதிய நேர அட்டவணை இன்று (நவம்பர் 22) முதல் அமலுக்கு வருகிறது எனவும், 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளதால் மாநகரப் போக்குவரத்துக் கழகம் வழக்கம்போல் பிராட்வேயில் இருந்து தாம்பரம் வழியாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை பிராட்வே முதல் தாம்பரத்திற்கும், தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 10 பேருந்துகளை தாம்பரம் முதல் செங்கல்பட்டுக்கும் ஆக மொத்தம் கூடுதலாக 20 பேருந்துகள் பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பயணிகளின் எண்ணிக்கை இவ்வழித்தடங்களில் அதிகரிப்பதை பொறுத்து கூடுதல் பேருந்துகளை இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications